Oct 12, 2013

கடலை

அவன்: பரவால்லையே? பப்லாம் போறியா?

அவள்: எஸ். பட் தண்ணிலாம் அடிக்க மாட்டேன்.. நல்லா சுத்துவோம் நாங்க. போன வாரம் கூட ஈசிஆர் போயிட்டு நைட்டு புல்லா ஆட்டம்..

அவன்: குட்.. ஐ ரியலி லைக் யுவர் Progressive மைண்ட்செட்..

அவள்: நான் கூட நீ ஒரு பழைய ஆளோன்னு பயந்தேன்.. பரவால்ல.. ஹே நீ தண்ணி அடிப்பியா?

அவன்: எப்பவாச்சும் அடிப்போம்.. உனக்கு புடிக்காதா?

அவள்: சேச்சே.. பசங்கனா தண்ணி அடிக்கத்தான் செய்வாங்க.. இதெல்லாம் ஒரு விஷயமா..

அவன்: அதான.. அதுல என்ன இருக்கு.. வாரத்துக்கு ரெண்டு தடவ மட்டும் அடிப்பேன்..

அப்புறம் ஒரே லவ்ஸ்.. கொஞ்ச நாள் கழித்து, ரெண்டு பேரு வீட்லயும் 'அலையன்ஸ்' பாக்க ஆரம்பிக்க,.

அவள் வீட்டில்..
'என்னம்மா, எப்படி பையன் பாக்கலாம் உனக்கு?'
'குடி, சிகரட்னு இல்லாம, நல்ல வேலை இருந்தா போதும்பா'

அவன் வீட்டில்..
'எப்படி பொண்ணு புடிக்கும்டா உனக்கு?'
'வேலைக்கு போக வேணாம், வீட்லயே இருக்கட்டும்.. நல்ல ஹோம்லியா இருக்கணும்..'
முழுதும் படிக்க..

Mar 11, 2012

அண்ணா நூற்றாண்டு நூலகம் - திடீர் விசிட்


IT கம்பெனி வளாகத்தை விட சுத்தமாக, துல்லியமாக பராமரிக்கிறார்கள். பார்க்கிங்கில் ஆரம்பித்து எதற்குமே ஒரு பைசா கூட செலவில்லை

உறுப்பினர் எல்லாம் ஆக வேண்டியதில்லை. ஆனால் புத்தகங்களை வீட்டிற்கு கொண்டு வரமுடியாது (திருட்டுத்தனம் செய்தால் RFID அலறிவிடும்)

கட்டிட வடிவமைப்பு அபாரம். எஸ்கலேட்டர், லிப்ட் என்று நல்ல வசதி

குளிர்சாதனங்கள், உட்கார்ந்து படிக்க சோபாக்கள், அமைதியான சூழல், புத்தகங்கள் தேட கம்ப்யூட்டர் என்று நிறைய சொகுசு

கிட்டத்தட்ட அத்தனை தலைப்புகளிலும் அத்தனை புத்தகங்களும் கிடைக்கிறது. எனக்கு ஓர் அளவிற்கு அறிமுகமான தமிழ் எழுத்தாளர்கள் பிரிவை வைத்து சொல்கிறேன். 

ஒவ்வொரு மாடியிலும் ஒவ்வொரு வகையான பிரிவு (குழந்தைகள் பிரிவின் வடிவ நேர்த்தி ஏற்கனவே நிறைய சிலாகிக்கப்பட்டு விட்டது). பிரபஞ்சத்தையும் அதை தாண்டியதையும் இந்த 9 மாடியில் அடக்கி விட்டனர்

என்னமோ நகைக்கடைக்கு போனவர் மாதிரி இதை படிக்கலாமா அதை படிக்கலாமா ஐயோ இன்னும் 4 மாடி இருக்கு என்று ஒரே பரபரப்பு

இப்படி ஒரு நூலகத்தை இடிக்க ஆலோசனை தந்தவருக்கு பகை, எதிர்ப்பை தாண்டி கடும் வன்மம் 'எதன்மீதோ' இருக்கவேண்டும்

நிறைய மாணவர்களை நோட்ஸ் எடுத்துக்கொண்டிருந்தனர் (இடம் தேர்வு அருமை. சுற்றிலும் கல்லூரிகள்). பேனாவை வைத்து பேப்பரில் எழுத வேண்டும் என்று ஆசையாக இருந்தது

எனக்கு ரொம்ப பிடித்த அம்சம் அங்கு வேலை பார்க்கும் ஊழியர்கள், அத்தனை அன்புடன், மிரட்டல்கள் இல்லாமல் பாசமாக நடந்து கொண்டார்கள். புதுசாக, சோகமாக இருந்தது
முழுதும் படிக்க..

Mar 4, 2012

அரவான் - ஒரு பார்வை

George Orwell எழுதிய உலகப்புகழ் பெற்ற 'A Hanging' (இங்கு சென்று வாசிக்கலாம்) என்ற கட்டுரையை (slash கதையை)  வாசித்து முடிக்கும்போது ஏற்படும் ஒரு வெறுமையை, இந்த படத்தின் பிறகும் உணர முடிந்தது. கதைக்கும் கடைசியில் போடும் எண்டு கார்டுக்கும் சம்பந்தமே இல்லை என்று சிலர் சொல்கிறார்கள், ஆனால் எனக்கு சொல்லவந்த மையக்கருத்தை வசந்தபாலன் வெற்றிகரமாக சொல்லிவிட்டார் என்றும் தோன்றுகிறது (பிற படங்களிலும் சொல்லித்தான் விடுகிறார். ஆனால் 'சுவாரசியமாக' இருந்ததா என்பது அடுத்த கேள்வி). ஒரு நல்ல படைப்பை பிடிக்குது, பிடிக்கல என்று ஒற்றை வார்த்தைகளில் அடைக்க முடியுமா தெரியவில்லை. அரவான் படத்தில் எனக்கு பல காட்சிகள் பிடித்திருந்தது, சில இடங்கள் தோய்வாக தோன்றியது.


படத்தில் முதலில் பிடித்த அம்சம் ரொம்பவே சுவாரசியமான சம்பவங்களின் கோர்வை - ஒன்றன் பின் ஒன்றாக நாம் வழக்கமாக பார்த்திராத சம்பவங்களின் கட்டமைப்பு, முதல் பாதியில் ஒரு சின்ன முடிச்சு, இரண்டாம் பாதியில் அதை அவிழ்ப்பது என்று திரைக்கதை முதல் பாதியில் மிக நன்றாகவே இருந்தது. ஒளிப்பதிவும், இடங்களின் தேர்வும்  அருமை. பலரின் நடிப்பு அபாரம், ஓரிருவரை மட்டும் சொல்ல முடியவில்லை.

புத்தகம் வாசித்த சிலர் அது மாதிரியே இல்லை, மாற்றிவிட்டார்கள் என்று கூறியிருந்தார்கள். புத்தகங்களை அப்படியே எடுத்து டப்பா டான்ஸ் ஆடின நிறைய படங்களை பார்த்திருக்கிறோம். சினிமாவுக்கு ஏற்றார் போல் அது மாற்றப்படவேண்டும். அப்போதுதான் வெற்றிபெறும்.


பீரியட் படங்களில் நான் முதலில் கவனிப்பது மொழி. ஒரு ஆவணப்படத்தில் வேண்டுமானால் authenticity தேவை, அதை நாம் வணிகப்படங்களில் எதிர்ப்பார்க்க தேவையில்லை (ஆயிரத்தில் ஒருவன் தமிழும் திட்டப்பட்டது என்பதை கவனத்தில் கொள்க). அதற்காக சுத்தமாக சமகால தமிழிலும் கதைப்பது சரியில்லை. அந்த வகையில் அரவானில் பேச்சு மொழி எந்த நெருடலும் தராதது ஆதரவளித்தது. மேலும் கதைகளத்துக்கும் நமக்கும் ஒரு 250 வருடங்கள் தான் இடைவெளி. இதில் மொழி பெரிதாக மாறியிருக்குமா தெரியவில்லை.


சாகும் நாள் தெரிந்த பின் ஆதி முகத்தில் ஏறும் அந்த நிரந்தர சோகம் அருமை. 'நான் பலிக்கு போகல' என்று அவர் மனைவியிடம் அழுவதும் ரொம்பவே உண்மையான உணர்ச்சி. இந்த இடங்களில் இவர் உயிர் போய்விட கூடாதே என்ற நம் தவிப்பு, இறுதி காட்சியில் ஏனோ இல்லை. இதுதான் படத்தின் மிகப்பெரிய பலவீனம் (கடைசியில் போடும் எண்டு கார்டு எதற்கு என்று கேட்பது இந்த Impact இல்லாததால்தான்). அந்த நீளமான மலை ஏறல் ஒரு காரணமா தெரியவில்லை. இதைவிட ஆதியின் நண்பர் பலியிடப்ப்படும்போது அதிக அதிர்வு இருந்தது.


இதை தமிழர்களின் வரலாறு/பெருமை என்றெல்லாம் முருகதாசுத்தனமாக உளறாமல் இருப்பது ஆறுதல். இது ஒரு மனிதனுக்கு இழைக்கப்பட்ட அநீதியின் கதை. இதில் அவன் சார்ந்த அந்த இனக்குழுக்களை/காலத்தை பதிவு செய்திருக்கிறார்கள். சொல்லப்போனால் தமிழர்களின் (அல்லது இந்தியர்களின்) ஒட்டுமொத்த வரலாறு என்று ஒரு படம் எடுக்கவே முடியாது. மேலும் இந்த படம் வெளிவந்திருக்கும் timing அபாரமானது. தூக்கு தண்டனை, என்கவுண்டர் போன்ற 'செய்திகளை' நாம் விவாதித்துக்கொண்டிருக்கும் போது வந்திருக்கிறது!


சிறுதெய்வங்கள் சாதாரண மக்களாக இருந்து அவர்கள் சந்ததியினரால் தெய்வமாக்கப்பட்டவர்கள். பெருதெய்வங்கள் ஒருகாலத்தில் அரசர்களாக இருந்தவர்கள் (அப்படியும் இருக்கக்கூடும்). இதுபோன்ற செய்திகளை உள்வாங்கி நுணுக்கமாக காட்ட வசந்தபாலன் போன்றவர்களால் முடியும், வெளிநாட்டு படத்தை பார்த்து அப்படியே படமெடுப்பவர்களால் முடியாது. அதனால் தான் எனக்கு இந்த படம் பிடித்தது



முழுதும் படிக்க..

Feb 15, 2012

வாகன ஓட்டி

நமது தெருக்களில் தான் எத்தனை விதமான வண்டி ஓட்டிகள்? அவர்களை வகைப்படுத்தினால்? இது பெரும்பாலும் இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு என்றாலும் பெருவாகன ஓட்டிகளுக்கும் சிலது பொருந்தும். அவர்களுடைய 'நிக்நேம்' மற்றும் அவர்களை பற்றிய சிறு குறிப்பு:

சொறி முத்து:
இவருக்கு வண்டியில் ஏறி ஓட்ட ஆரம்பித்த உடனே சொரிய ஆரம்பித்துவிடும். அதுவும் முதுகு, கெண்டைகால் என்று அணுக முடியாத இடங்களில்தான்..
என்னதான் சொரிந்து கொண்டே இருந்தாலும் இவருக்கு ஒழுங்கு என்பது மிக முக்கியம். அவிழ்ந்திருக்கும் ஷூ லேசை கட்டுவது, பெல்ட் சரி பண்ணுவது, சரியாக சட்டை இன் செய்யப்பட்டிருக்கிறதா என் சோதனை செய்வது (ஆம் அத்தனையும் வண்டி ஓட்டிக்கொண்டேதான்) என்று தொடர்ந்து இயங்கிக்கொண்டே இருப்பார். இதனால் வண்டி சைடு வாங்கும் தான், பின்னால் வருபவர்கள்தான் ஒதுங்கி போக வேண்டும். ஒழுங்கு முக்கியமில்லையா?


மன்மோகன் ஜி:
இவர் அமைதியானவர். பெரும்பாலும் வயதானவர் அல்லது சமீபமாக விழுந்து வாரியவர். பத்து கி.மீ. வேகத்தில்தான் வண்டி ஒரு ஓரமாக ஓடும். இவர் யார் வம்புக்கும் போக மாட்டார், இவர் வம்புக்கும் யாரும் போக வேண்டாம். ஓவர்டேக் பண்ணி பொய் கொள்ளுங்கள்

பிரபுதேவா:
வண்டியோடு சேர்ந்து வளைந்து நெளிந்து தெருவில் நடனமாடியபடியே ஓட்டுபவர். இந்த லேனில் இருந்து அங்கு தவ்வுவது, மறுபடி அங்கிருந்து இங்கு வருவது, 180 டிகிரியில் அப்படியே நகர்வது என்று பலவித சேட்டைகள்.. ஆபத்தானவர். மன்மோகன் ஜிக்கு பாவம் இவரை கண்டாலே பயம்



சங்கீத ஸ்வரங்கள் மம்மூட்டி:
இவருக்கு செல்போனில் வண்டி ஓட்டும்போது பேச மிக பிடிக்கும். எங்கு அழைப்பு தவறி விடுமோ என்று வைப்ரேஷனில் வைத்து, வண்டி ஓட்டிக்கொண்டே அந்த டைட்டான பாக்கெட்டில் இருந்து கஷ்டப்பட்டு எடுத்து பேசிவிடுவார். இவர் இப்போது அதே  டைட்டான பாக்கெட்டில் இருந்து எடுத்து குருஞ்செய்திகளுக்கும் உடனுக்குடன் பதில் அளிக்கிறார். பின்னால் வருபவர்கள் இவரின் காதலை ஒன்றும் தொந்தரவு பண்ண வேண்டாம்


கலா ரஸிகர்:
தெருவை தவிர அத்தனை விஷயங்களிலும் கண் இருக்கும். இவர் கண்ணில் இருந்து ஒரு பேனர், கடை, இயற்கை காட்சி தப்பிவிடாது. தினம் பார்த்தாலும் ஒவ்வொரு முறை ஒவ்வொரு தரிசனம் காணுவார். இவருக்கு பிறரால் தொடர்ந்து தடங்கல்கள் உண்டு. இருந்தாலும் கடைசி நொடியில் ப்ரேக் போடுவது, திடீரென்று சுதாரிப்பது என்று கலைபயணத்தை தொடர்ந்து கொண்டுதானிருக்கிறார்


ரவீந்திர ஜடேஜா:
இவர் எப்போது நன்றாக ஒட்டினாரோ, யாருக்கும் தெரியாது. ஒன்றிரண்டு தடவை ஆள் இல்லாத தெருவில் ஓட்டிவிட்டு 'சூப்பரா வண்டி ஓட்டுகிறேன்' என்று இவராக நினைத்துக்கொண்டு மெயின் ரோட்டில் இறங்கிவிடுவார். சேதாரம் உண்டு

சுவாமிஜி:
யாராவது பெண்கள் ரோட்டில் தென்பட்டுவிட்டால் இவருக்கு குஷி ஆகிவிடும். தொடர்ந்து சென்று சைட் அடிப்பது, ஸ்கூட்டி பக்கத்திலயே போய் லவ்வு பண்ணுவது என்று, தெருவில் எவ்வளவு ரணகளமாக இருந்தாலும் இவர் காரியத்தில் கண்ணுங்கருத்துமாயிருப்பார்



விஜயகாந்த்:
செவ்விழிகளுடன், நாக்கை துருத்திக்கொண்டு விடாமல் ஹார்ன் அடிப்பவர். சைக்கிளாக இருந்தாலும் அதில் லாரி ஹார்ன் பொருத்தி இருப்பார். சிக்னலின் சிகப்பில் எல்லாரும் நின்று கொண்டிருந்தாலும் சரி, ட்ராபிக் ஜாமாக இருந்தாலும் சரி.. இவருக்கு அதெல்லாம் தெரியாது. கடுங்கோபத்துடன் ஹார்ன் அடித்து அனைவரையும் வழிவிட சொல்வார். நாட்டை உடனடியாக காப்பாற்ற வேண்டும் அல்லவா? ஆங்


முழுதும் படிக்க..

Jan 25, 2012

ஒரு மனிதன், ஒரு வீடு, ஒரு உலகம்


படிக்கும் புத்தகங்களை பற்றி இனி பதிவு போடலாம் என்று ஒரு எண்ணம்.. என்னுடைய வாசிப்பு இலக்கு - தமிழ் பிதாமகர்களின் புத்தகங்கள்.  நடு நடுவே  சமகால இலக்கியங்கள் (மானே தேனே பொன்மானே)

முதலில் ஒரு மனிதன், ஒரு வீடு, ஒரு உலகம். ஜெயகாந்தன் (மீனாட்சி புத்தக நிலையம்). புத்தகத்தில் எனக்கு பிடித்த அம்சங்கள்..

ஆனந்த விகடனில் தொடர்கதையாக எழுபதுகளில் வந்தது. ஆனால் அவரே முன்னுரையில் சொல்வது போல் காலங்களுக்குள் அடைக்க முடியாதுதான்..

மனித எண்ணங்களை அப்படியே குடைந்தெடுத்து, விலாவாரியாக காட்டுவது எனக்கு பிடித்திருந்தது. பல இடங்களில் சிம்பிளாக ஒரு வரி வரும், அது எதற்கு அந்த இடத்தில் என்று யோசித்தால் நிறைய தரிசனங்கள் உண்டு..

கதையில் (வாழ்க்கையில்?) அனைவருக்கும் ஏதாவது 'கெட்ட பழக்கம்' இருந்தாலும், அனைவரும் நல்லவர்கள் அல்லது அப்படி பார்க்கப்பட வேண்டியவர்கள். Nothing is black or white (எதையுமே/யாரையுமே நல்லது-கெட்டது என்று வகைப்படுத்த முடியாது) என்று என் பெரியப்பா ஒரு முறை சொன்னார். அது எவ்வளவு பெரிய வார்த்தை என்பதும், அது அவர் அத்தனை வருட வாழ்வில் கண்டறிந்த உண்மை என்பதும் இந்த கதையின் மூலம் புரிகிறது..

எதிலுமே மிகுதியான பற்றற்று, அந்தந்த நொடிகளில் வாழ்வது  என்பது ஒரு லட்சியவாதம்தான். கடினம்தான். ஆனால் அப்படி இருப்பதற்கு இந்த நூல் தூண்டுகிறது, நன்றாகத்தான் இருக்கும் என்று யோசிக்க வைக்கிறது. மேலும் அன்பு/மனிதாபனம் எல்லாம் ரொம்பவே contagious
என்று புரியவைக்கிறது.

இந்த புத்தகத்தை முடித்ததும் அப்படி ஒரு மகிழ்ச்சியும் மனித வாழ்க்கையின் மீது ஒரு பெரும் நம்பிக்கையும் இயல்பாக தோன்றுகிறது. சும்மாவா ஜெயகாந்தனின் எழுத்துக்கள் எல்லாருக்கும் பிடிக்கிறது?
முழுதும் படிக்க..

Dec 30, 2011

நேரம்


'உனக்கு விடுதலை' என்று வார்டன் மைக் சொன்னது சசிக்கு விளங்கவில்லை. இந்த உலகில் இருந்து என்பதை கவித்துவமாக சொல்கிறாரா? 

'புரியலை மைக்'

'எனக்கும் புரியலதான் சசி, இன்னிக்கு உன்னை தூக்கில் போட முடியாது. அதுமில்லாம உனக்கு விடுதலை'

'இது ஏதாவது நான் சோகமாக சாகக்கூடாதென்று விளையாட்டா?'

'நம்பு சசி. உனக்கு டிசம்பர் 30 தூக்கு என்று தீர்ப்பு. ஆனா இன்னிக்கு இங்க செஞ்ச நேர மாற்றத்தில் அந்த தேதியே வரவில்லை. இன்னிக்கு டிசம்பர் 31'.

'விடுதலை எப்படி சாத்தியம்? நான் செத்தாதான் இந்த சமொவா தீவுக்கு சுபிட்சம்னு சொல்றவங்க இதுக்கு ஒப்புக்கொள்ள மாட்டார்களே?'

'நீ விபத்தில் வண்டி ஏற்றி அவர்களை கொன்றதற்கு தூக்கு தேவையில்லைன்னு நம்புகிறவர்களில் நானும் ஒருவன். தூக்கின் பிறகு கைதியை எரிக்கவோ புதைக்கவோதான் இங்கு விதிகள் உண்டு. 'தூக்கின் பிறகு உயிருடன்' இருப்பவருக்கு இல்லை. ஆனால் நீ இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுகிறாய்'

தங்கள் அட்டவணையில் ஒரு நாள் இல்லாதது பற்றியோ, இல்லாத நாளால் வாழ்க்கையே திருப்பிக்கிடைத்த சசி பற்றியோ சமோவா தீவுவாசிகள் யாரும் பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை. என்றும் போல் அன்றும் நேரம் மாறாமல் மாறிக்கொண்டுதானிருந்தது.
முழுதும் படிக்க..

Dec 29, 2011

கொத்து பரோட்டா விருதுகள் - 2011

சிறந்த படம்: எங்கேயும் எப்போதும்


சிறந்த திரைக்கதை/இயக்குனர்: சரவணன் (எங்கேயும் எப்போதும்)

சிறந்த நடிகர்: தனுஷ்

சிறந்த நடிகை: அஞ்சலி, இனியா, ரிச்சா

சிறந்த இசையமைப்பாளர்: ஜிப்ரான் (வாகை சூட வா)

சிறந்த பாடல்: போறானே போறானே(வாகை சூட வா) 

சிறந்த பாடகர்: நரேஷ் ஐயர் (கோ)

சிறந்த பாடகி: நேகா பசின் (போறானே)

சிறந்த ஒளிப்பதிவு: ராம்ஜி

சிறந்த புத்தகம்: நினைவுகள் அழிவதில்லை (நிரஞ்சனா)*

சிறந்த தளம்**: http://amuttu.net

முக்கிய நிகழ்வு: உலகமயமாக்கலின் சரிவு 

சிறந்த மனிதர்: மக்கள்*** 

சிறந்த தொலைகாட்சி: புதிய தலைமுறை

சிறந்த விளையாட்டு நிகழ்வு: இந்தியா வென்ற உலக கோப்பை

சிறந்த முகநூல்காரர்: விஜயலட்சுமி (http://www.facebook.com/vglakshmy)

சிறந்த ட்விட்டர்: அராத்து (@araathu)

சிறந்த தொலைக்காட்சி நிகழ்ச்சி: Big Bang Theory

---------
பி.கு:
இது முற்றிலும் தனி நபர் விருப்பங்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவை. பெருவாரி விருப்பம் கணக்கில் கொள்ளப்படவில்லை. சில தலைப்புகள் விடுபட்டு போயுள்ளன. முடிந்தால் அடுத்த பதிவில்..

*நான் படித்தது இந்த வருடம்தான்
**இந்த வருடம் அதிகம் பதிவுகள் படிக்க முடியவில்லை. படித்தவரைக்கும்..
***தன்னிச்சையான மக்கள் போராட்டங்கள் தெரியப்படுத்தும் கூட்டு சக்தி

முழுதும் படிக்க..

Oct 27, 2011

ஓ குடிகாரர்களே..


நான் குடிக்கிறேன் என்று தாங்கள் குடிப்பதை தொடர்ந்து பறைசாற்றி, குடியைப்பற்றி வித விதமாக தொடர்ந்து பேசி அதன் மீது ஒரு செயற்கையான கவர்ச்சியை உண்டு பண்ணுபவர்களுக்கு என்ன நோக்கம் இருக்கும்? அந்த 'மகிழ்ச்சியை' பகிர்ந்து கொள்கிறார்கள் என்று அதை எடுத்துக்கொள்ள முடியுமா? தான் செய்யும் செயலை ஒரு இயல்பானதாக ஆக்க செய்யும் முயற்சியா? குற்ற உணர்ச்சி அண்டாமல் இருக்க, கூட்டணி சேர்க்கிறார்களா?
அல்லது குடிக்காமல் இருக்கும் சிலரையும் எப்படியாவது குடிக்க வைத்துவிட வேண்டும் என்ற வெறியா? இந்த கடைசி விஷயம் சின்னபிள்ளைதனமான குற்றச்சாட்டாக தெரிந்தாலும், குடிக்கும் பலரிடம் இந்த வெறியை பார்த்திருக்கிறேன். குடிக்காதவர்களை மட்டம் தட்டுவது, அது ஏதோ பெரிய சாதனை போல் பேசி தங்களை cool dudes ஆக காட்டிக்கொள்வது, குடிக்க ஆபர் பண்ணுவது, மறுத்தால் கேவலமாக பேசுவது என்று இவர்கள் விடாமல் பண்ணும் சேட்டைக்கு வேறு ஏதும் காரணம் இருக்குமா?

மேலும் ஒரு தடவை குடித்துவிட்டு நிறுத்தி விடுவேன் என்று ஆரம்பிப்பவர்கள் இதுவரை அப்படி நிறுத்தி பார்த்ததில்லை. அது வாசலிலேயே ட்ராபிக் போலீஸ் நிற்கும் ஒரு ஒன்-வே பாதை.
உடனே இது அசைவம் சாப்பிடுபவர்களை சைவம் சாப்பிடுவார்கள் குறை சொல்வது போல் உள்ளது என்று திசை திருப்ப வேண்டாம். டாக்டர் அசைவம் சாப்பிடலாம் என்று சொல்வார், குடி என்று சொல்வாரா? குடிப்பது அவரவர் விருப்பம் தான், அதில் மாற்று கருத்தில்லை. அதை விளம்பரப்படுத்தி, திணிப்பதில் தான் சங்கடம். இது குடிமகன்கள் பலருக்கு பிடிக்காமல் போகலாம். அடுத்தவரை தொல்லை பண்ணாமல் மொடாக்குடி குடிக்கும் உண்மையான குடிமக்களை இந்த நேரத்தில் நினைவு கூர்ந்து வணங்குகிறேன். குடிக்காத சிறுபான்மியருக்கு இதை சமர்ப்பிக்கிறேன். வாழ்க உங்கள் தன்னடக்கம்! 
பி.கு. புனிதராக உருவெடுக்கவோ, சைடு டிஷ் கேட்டதற்கு, குடிச்சாதான் தருவேன் என்று சொன்னதால் தான் இதை போடுகிறேன் என்றோ யாரும் தவறாக எண்ணக்கூடாது.

முழுதும் படிக்க..

Aug 30, 2011

திருத்தகம்

(இக்கதை திண்ணை இதழில் வந்துள்ளது. திண்ணையில் படிக்க இங்கு செல்லவும் http://puthu.thinnai.com/?p=3594)

                                                                  **********

சண்முகம் முடி திருத்த ஏன் அன்றைய தினத்தை தேர்ந்தெடுத்தார்? அவரே இதை பின்னாட்களில் பலமுறை நினைத்து நொந்து கொண்டதுண்டு. இத்தனைக்கும் அது ஒரு ஞாயிறு. மயிறு திருத்த அனைவரும் படையெடுத்து தள்ளுமுள்ளு ஏற்படுத்தும் நாள். இருந்தாலும் அடிக்கும் வெயிலினாலும், நகக்கண் எல்லாம் கருப்பானதாலும் இதற்க்கு மேல் தள்ளி போட முடியாமல் அந்த ஞாயிறுதான் என முடிவெட்ட முடிவெடுத்தார் திரு சண்முகம்.

அன்று எனப்பார்த்து சில்லரையாக ஐம்பது ருபாய் இல்லாமல் போனது அவர் அப்பா செய்த பாவம் (முடி வெட்ட அவர் செலவு செய்ததே இல்லை). ஒரே ஒரு ஆயிரம் ரூபாய் தாள் மட்டுமே இருக்க, சரி அப்படியே சில்லறை மாத்திய மாதிரியும் ஆயிற்று என்று சமாதானப்படுத்தி அதையே எடுத்துக்கொண்டார். எங்கு போவதென்பது எப்போதும் ஏற்படும் குழப்பம். அந்த ஏ.சி கடையில் கொள்ளை அடிப்பான். வழக்கம் போல இங்கனயே போவோம் என்று 'லோக்கல்'  கடைக்குள் நுழைந்தார். கூட்டம் நிறையவே இருந்தது. தினத்தந்தியை வாசித்தார். 

மேலும் மேலும் வந்து கொண்டே இருந்தனர். முன்பதிவு செய்து விட்டு சென்ற சிலர் நடுவில் புகுந்தனர். தன்னையே நொந்து கொண்டு, தந்தி புகைப்படங்கள் தெளிவில்லாமல் இருப்பதை திட்டியபடியே திரும்பவும் புரட்ட ஆரம்பிக்க, சார் நீங்க வாங்க என்று கடைக்கண் பார்வையை வீசினார் ஆரோக்கியம் (முடி திருத்துபவர்). ஆஹா பரவாயில்லை என்று ஒரு பதைப்புடன் ஓடி போய் ஆரோக்கியம் மனசு மாறுமுன் அமர்ந்து கொண்டார். படபடப்பு அடங்க கொஞ்ச நேரம் ஆனது. வழக்கம் போல் சுமாராக வெட்டி முடித்து, இவர் வேண்டாம் என்று சொல்வதற்குள் மண்டையில் போட்டு கொத்தி சடக் சடக் என்று முகத்தை பிடித்து திருப்பி சொடுக்கு எடுத்து எல்லாம் முடிந்துவிட்டது..

பாக்கெட்டை துழாவி ஆயிரம் ரூபாயை நீட்ட, ஆரோக்கியத்தின் சிவந்த கண்கள் ஒரு நொடி ஒளிர்ந்து அடங்கியது. 'சில்ற இல்லையா?' என்று கேட்டபடியே வாங்கி கொண்டார். கடையில் ஒருவர் தான் பாக்கி. 'சரி, மாத்திட்டு வந்திடறேன்' என்று சொல்லியபடியே பக்கத்து கடைக்கு போனார். அங்கு ஏதோ சொல்ல, அப்படியே கெளம்பி தெரு முனைக்கு சென்று மறைந்தார்.
காத்திருந்து கடுப்பாகி கடைசி ஆளும் பொலம்பிக்கொண்டே போய் விட்டார். அவருக்கென்ன, இன்று இல்லை என்றால் நாளை வெட்டிக்கொள்ளலாம். எனக்கு? இருந்து மீதிப்பணத்தை வாங்கிக்கொண்டே போய் விடுவோம் என்று தோன்றியது. இருட்ட தொடங்கியது. என்னடா இன்னும் காணோம் என்று எரிச்சல் அதிகரிக்க, சரி வீட்டுக்கு போய் குளித்து விட்டு வந்து வாங்கிக்கொள்வோம் என்று வந்து வேக வேகமாக குளித்துவிட்டு திருப்பி கடைக்கு சென்றார். 

கடை மூடி இருந்தது. துணுக்குற்று, சரி நாளை வாங்கிக்கொள்ளலாம் என்று திரும்பினார். அடுத்தநாள் மதியம் வரை கடை மூடி இருந்தது. முதல் முறையாக அவருக்குள் சின்ன கவலை. மாலை கடை திறந்ததும் முதல் ஆளாக நுழைந்தார் சண்முகம். ஆரோக்கியம் இவரை தெரியாத மாதிரி பார்க்க, இவருக்கு பகீர் என்றது. 'என்ன சார் இந்த பக்கம் என்று கேட்டு விடுவானோ'?

'வாங்க சார், என்ன நேத்து நீங்க பாட்டுக்கு போயிட்டீங்க'?
'நான் இங்கதான் இருந்தேன், நீங்கதான் ரொம்ப நேரம் வரல. அப்புறம் நான் போயிட்டு வரதுக்குள்ள கடைய சாத்திட்டீங்க'
'அப்படியா? இல்லீங்களே?'
இவருக்கு 'பணமா, இல்லீங்களே?' என்று கேட்டது. எச்சிலை விழுங்கி, 'சரி மிச்சம் கொடுக்குறீங்களா?' என்றார்.
'என்ன சார், இப்போதான கடை தொறந்தேன். இன்னிக்கு நைட்டு வாங்க, வர காச கொடுத்திடறேன்'.
'இல்ல, எனக்கு வேல இருக்கு, இப்போவே கொடுங்க'
'இப்போ இல்ல சார்' என்று பாக்கெட்டை கொட்டி ஆரோக்கியம் சைகை காட்ட,
'சரி நைட்டு வரேன். மறக்காம எடுத்து வைங்க' என்று நைட்டு டான் என்று போய் நின்றார்.
'ஒன்னும் கலக்சன் ஆகலைங்க, நாளைக்கு வாங்க கண்டிப்பா எடுத்து வைக்கிறேன்'.

இவருக்கு நம்பிக்கை குறைந்து கொண்டே வந்தது. இப்படியே நாளுக்கு நாள் விதவித காரணங்கள் சொல்லி வெறுப்பேத்தினான். ஆயிரம் ரூபாயையும் விட முடியவில்லை. அடுத்து முடி வெட்டும் காலமே வந்து விட்டது. சரி முடி வெட்டியே கழிக்கலாம் என்று அவனிடமே போய் வெட்ட, அவன் வெட்டி முடித்ததும் 'சார் காசு?' என்றான்.
'ஹலோ? நீங்க எனக்கு ஆயிரம் ரூபாய் கொடுக்கணும் மறந்து போச்சா?'
'இல்ல இல்ல, சில்லறை இருக்கானு கேட்டேன்'.

அடுத்து முறை இதே மாதிரி முடி வெட்டி பணம் கழிக்க இவர் போனதும் அவன் எரிச்சலுடன் வெளியில் சென்று வெகு நேரம் வரவில்லை. அடுத்தநாளும் போய் உட்கார்ந்து, அவன் அதே மாதிரி வெளியேறினான். இவர் விடாமல் பின் தொடர்ந்தார். அவன் நேராக டாஸ்மாக் சென்று பாருக்குள் புகுந்தான். இவருக்கு அந்த ஆயிரம் ரூபாய் எந்த கல்லாவுக்கு போயிருக்கும் என புரிந்தது.

அவன் குடும்பத்திற்கு உபயோகப்பட்டிருந்தால் கூட விட்டிருக்கலாம். போயும் போயும் குடிப்பதற்கு செலவாகியிருக்கிறது.. சரி இத விட்றதில்லை, முடி வெட்டி கழித்தே தீர்வது என்று அவனிடமே விடாமல் சென்றார். முடி தனியாக, ஷேவிங் தனியாக, ட்ரிம்மிங் என்று எல்லாத்துக்கும் போனார். ஆயிரம் ரூபாயை எப்போது கழித்து முடிக்க? வாரா வாரம் ஏறும் விலைவாசி நம்பிக்கை கொடுத்தது சீக்கிரம் கழித்துவிடலாம் என்று. இவரைக்கண்டாலே ஆகாதவன் போல் முறைக்க ஆரம்பித்தான் ஆரோக்கியம்.

இந்த காலகட்டத்தில் அவருக்கு பகீர் என்று ஒரு பயம் வந்தது. கழுத்தில் கத்தி இருக்கும் போது, வேண்டுமென்றே லேசாக கீறி விட்டால்? இல்லை முகத்தில் கோடு போட்டால்? இந்த யோசனை மண்டைக்குள் புகுந்த பிறகு அவரால் முடி வெட்டி முடியும் வரை நிம்மதியாக உட்கார முடியவில்லை. ஒவ்வொரு தடவையும் எப்போடா முடியும் என்று இருந்தது.

நாள் ஆக ஆக இந்த பீதி அதிகமாகி, ச்சீ போனால் போகுது. இப்படி பயந்துகிட்டே வெட்டிக்கிட்டு இருக்க முடியாது என்று கடையை மாற்றினார். அப்போதும் விடாமல் கொஞ்ச நாள் கேட்டுதான் பார்த்தார். 'இதோ இந்த ஸ்டூல் ரெண்டை கொண்டு போய்டுவேன் பாத்துக்கோங்க' என்றெல்லாம் வேறு மிரட்டினார். மழலையின் மிரட்டலை லாவகமாக கையாளும் அம்மாவை போல் இவரை சுலபமாக புரந்தள்ளினான் ஆரோக்கியம்.

அதன்பிறகு ஒரு தடவை அவரது அலுவலகத்தில் குடிப்பது தவறா என்ற வாதத்தில், தவறுதான் என்று ரத்தம் கொதிக்க இவர் போட்ட சண்டையை பார்த்து பலர் ஆச்சர்யப்பட்டனர்.

முழுதும் படிக்க..

Mar 21, 2011

வலைப்பூவுக்கு எப்படி பெயர் வைக்க கூடாது?

சில வருடங்களுக்கு முன்..

சில பல வலைப்பூக்களை படித்து கொண்டிருந்துவிட்டு, சரி ஒன்றை ஆரம்பித்து விடுவோம் என்று முடிவு செய்தாயிற்று. ப்ளாகரில் லாகின் பண்ணி படிவ பூர்த்தியின் போது தான் உரைத்தது பெயர் ஒன்றை வைக்கணும் என்று. நாமதான் மெயின் மேட்டரை விட இந்த மாதிரி துணை பிரச்சினைகளுக்கு அதிக நேரம் ஒதுக்குபவராயிற்றே? எந்த பெயர் யோசித்தாலும் (புலம்பல்கள், கிறுக்கல்கள் இத்யாதிகள்) அதில் ஏற்கனவே யாராவது பதிவு செய்திருந்தார்கள். 'பூதம்', 'ரத்தக்காட்டேரி' உட்பட அனைத்தையும் பிடித்து வைத்திருந்தார்கள்.

சரி இப்போ வேண்டாம் என்று மூடி வைத்து விட்டு பெயர் யோசிக்க ஆரம்பித்தேன். அதோடு மறந்தேன். அடுத்த நாளும் படிவ பூர்த்திவரை யோசிக்காமல், அந்த நேரம் மட்டும் யோசித்ததில் ஒன்றும் தோன்றவில்லை.

அந்த நேரம் பார்த்து நண்பன் 'வாங்கடா, முனியாண்டி விலாஸ்கு சாப்பிட போகலாம்'. அந்த பெயரை கேட்டதும் மறுபேச்சில்லாமல் நானும் சுற்றி இருந்தவர்களும் கிளம்பினோம். பேசாமல் அந்த பெயரையே வைத்தால் என்ன? பொறுமை, பொறுமை.. யோசிப்போம்.


எங்களை பார்த்ததுமே மாஸ்டர் கல்லில் கொத்து குத்த ஆரம்பித்தார். கல்லாவில் உட்கார்ந்திருந்தவர் சிநேகமாக சிரித்தார் (நாங்கள் போக ஆரம்பித்த பிறகு அந்த கடையில் நிறைய மாற்றங்கள். டைல்ஸ் ஒட்டி, நெறைய Fan வாங்கி மாட்டி. மொத்தத்தில் சுபிட்சம்).

சூடாக கொத்து வந்தது. 'ஆயிரம் இருந்தாலும் கொத்து கொத்துதான்' என்றான் ஒருவன். தினம் இதை சாப்பிடுகிறோம், அலுக்கவில்லையே? அதுவும் பல வஸ்த்துக்களை போட்டு ஒன்றாக கலந்து, கொத்தி, சுவையாக பரிமாறுவதை பார்த்தால்........  மின்னல் வெட்டு!

திரும்பி ஆபிஸ் வந்து சேரில் உட்கார்ந்ததும் படிவத்தை வேக வேகமாக பூர்த்தி செய்து கொத்து பரோட்டா என்று பெயர் சூட்டினேன் (அந்த பெயரும் புக்ட. அதனால் லிங்க் பெயர் மட்டும் தமிழ் கொத்து).

இதில் இருந்து நான் சொல்ல வருவது என்னவென்றால், புதிதாக வலைப்பூ தொடங்கும் தமிழர்களே தமிழர்களே, வலைப்பூவிற்கு பெயரை கொஞ்சம் யோசித்து வையுங்கள். ஏதோ ஒரு நாள் சாப்பிட்டு பிடித்த உணவு பதார்த்த பெயரை எல்லாம் வைத்தால் பின்னால் வருத்தப்பட வேண்டிவரும்.

முழுதும் படிக்க..