Dec 29, 2009

புது வருடத்தை தொடங்கி வைப்பது யார்?

புத்தாண்டு வந்தால் இந்த 'சம்பவம்'ம் வரும், நினைவுக்கு.. நடந்தது சின்ன வயதில். புதுவருட, தினசரி காலண்டர் ஒன்று கொண்டு வந்தார் அப்பா. சின்ன ஊர் என்பதால் நிறைய எல்லாம் கிடைக்காது. ஒன்று இரண்டு தான். பர்சேசிங் என்ற சர்தார்ஜி அப்போ ரொம்ப இல்லை. அந்த வருடம் வறண்டதால் ஒரு காலண்டர் தான் (மொக்க படம் ஒன்றை போட்டு இருந்தார்கள்).

31 ஆம் தேதி திடீர் என்று சண்டை எனக்கும் என் அக்காவுக்கும். யார் முதலில் தேதி கிழித்து அந்த வருடத்தை தொடங்கி வைப்பதென்று.. வாய்ச்சண்டை முற்றி கைகலப்பாகி, ரத்த காவு கடந்து, அம்மா வந்து சமாதானப்படுத்தி, இருவரும் சேர்ந்தே அந்த வருடத்தை துவக்கி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது.

வெற்றிகரமாக 31 இரவு 12 மணிக்கு, தள்ளி முள்ளி நான்கு கைகளால் தேதி கிழிக்கப்பட்டு, அந்த வருடம் சிறப்பாக துவக்கி வைக்கப்பட்டது.

எல்லா களேபரமும் முடிந்ததும்., இதை எல்லாம் பார்த்துக்கொண்டிருந்த எங்கள் பாட்டி.. "ஏண்டா.. இன்னிக்கு தேதி கிழிச்சா, அது ரெண்டாந்தேதி ஆகிடாது..? இன்னிக்கி தேதி ஒன்னு தான?"

பேய் முழி முழித்து, 'ஹீ ஹீ சர்யான லூசு' என்று அக்காவை கிண்டல் செய்து நான் சட்டென்று சைடு மாறி விட்டேன். இந்த வரலாற்று தவறை அவள் மட்டும் செய்ததாக மாற்றி ஓரளவு வெற்றியும் பெற்றேன் (வரலாறு மிக முக்கியம் அமைச்சரே)..

இப்பொழுதும் கிண்டலடிப்பதுண்டு அவளை.. என்ன, இப்போ ஏகப்பட்ட காலண்டர் (கர்சீப் வாங்குனா கூட ஒன்னு கொடுக்கிறார்கள்). ஆனால், தேதி எல்லாம் கிழிப்பது இல்லை. ஏன், சுவற்றில் தொங்கும் காலண்டரில் கடைசியாக தேதி பார்த்தது எப்போது என்றே நினைவில்லை..
முழுதும் படிக்க..

Dec 22, 2009

பிடித்த படம் - அன்பே சிவம்

ஒரு பழைய புகைப்பட ஆல்பத்தை திரும்(ப்)பி பார்க்கும்போது கிடைக்கும் உற்சாகம் அலாதியானது. பல தடவை பார்த்திருந்தாலும், ஒவ்வொரு முறை பார்க்கும் போதும் ஒரு சந்தோஷம். அதிலும் கும்பலாக பார்க்கும் போது? சிரித்து, கிண்டலடித்து, மாற்றங்களை விமர்சித்து என போகும் நேரம்.. போன தடவை பார்க்கும் போது நம் கண்களில் சிக்காத ஒன்று இந்த தடவை சிக்கும் (சிடு மூஞ்சி குமாரு இதுல எப்படி இளிச்சிட்டு இருக்கார்!..). ரொம்ப பிடித்த ஒன்றை மறுபடி சிலாகிப்பதும் நடக்கும். ரொம்ப நாள் கழித்து நிறைய நண்பர்கள் கூடும் அறைகளில் இப்படி ஃபோட்டோ பார்க்கும் செஷனுக்காக நேரம் ஒதுக்கப்படுவது உண்டு.

அந்த மாதிரி.. (உஸ்ஸ் கொள்கை விளக்கம் கொடுத்தாச்சானு புலம்பல்கள் கேக்குது?), நாம் பல முறை பார்த்து மகிழ்ந்த, கொண்டாடிய, திட்டிய திரைப்படங்களை அசை போடுவதும் சுகமானது தானே? விமர்சனமாக இல்லாமல் பிடித்த காட்சிகள், வசனங்கள் இவற்றை பற்றி.. ஒரு திருப்பி பார்த்தல்.. அனைவருமே பார்த்திருப்பார்களாதலால், விமர்சனம் தேவையும் இருக்காது. ஆக, முதலில் எந்த படத்தை திருப்புவது? கொஞ்ச நாள் கழித்து பார்த்த-பல தடவை ஏற்கனவே பார்த்த-இன்னமும் பிரமிப்பு குறையாத- அன்பே சிவம்.

கமல் படங்களில் எப்போதுமே ஒரு ஸ்பெஷல் - ரொம்பவே நுணுக்கமான பல பல விஷயங்கள் ஒளிந்திருக்கும். பல தடவை பார்த்தாலும், அடுத்த தடவை பார்க்கும் போது ஒரு புது விஷயம் கண்ணில் படும் ('உன்னை போல் ஒருவன்' வலை உலகில் அத்தனை கூறு போடப்பட்டதற்கு காரணங்கள் இல்லாமல் இல்லை).



அன்பே சிவத்தில் கமலின் character change கவனத்திற்குரியது. ஒரு கோபக்கார இளைஞனாக ஃப்ளாஷ் பாக்கில் வரும் நல்லசிவம், அந்த விபத்திற்க்கு பிறகு ஒரு குழந்தையை போல் நடந்து கொள்வார் (ஆனால் அதே கூர்மை). எதனால் இருக்கும்? ஒரு விபத்து மனித மனத்தில் ஏற்படுத்தும் தாக்கம் பிரம்மாண்டமானது. விபத்து எற்படுத்தும் உளவியல் சிக்கலினால் இருக்கலாம் (இது இங்கே கண்டு கொள்ளப்படாத ஒன்று). அல்லது தலையில் பட்ட அடியினால் கூட...

தசாவதாரத்தில் பெரிதாக பேசப்பட்ட பட்டர்ஃபிளை எஃபக்டை  இதிலேயும் பார்க்க முடிந்தது. ஒரு வேளை அந்த நாய் (சங்கு) இல்லை என்றால், கடைசியில் தொழிலாளர்களுக்கு ஞயாயம் கிடைக்காமல் போயிருக்கலாம் அல்லவா? (பல பேர்க்கு சங்கு ஊதினாலும் சங்குவிற்கு ஏன் அவ்வளவு முக்கியத்துவம் என்று யோசித்ததில்.. ஹீ ஹீ..).

படத்தின் முக்கிய அம்சம் 'அனைத்து' பேருடைய நடிப்பு. அந்த மலை மேல் கடை வைத்திருக்கும் அம்மா, 'இந்தா, இவங்களுக்கும் சின்ன வயசுல கால் சரி இல்லாம இருந்துச்சு. இப்போ சரி ஆய்டுச்சு'  என்று வெள்ளந்தியாக ஆறுதல் கூறும் அழகை உதாரணத்திற்க்கு சொல்லலாம். 'நாட்டுக்கொரு சேதி' வீதி நாடக கலைஞர்கள் பாதி பேர் உண்மையான கலைஞர்களாம்! அந்த குழுவில் ஆண்-பெண் இருவருக்குள்ளும் இருக்கும் ஒரு கண்ணியம் ரசிக்க கூடியது. இவர்களை போன்ற கலைஞர்களிடம் இயல்பாக இருக்கும் ஒரு விஷயம் இது. ஒரு களத்தை எடுத்துக்கொண்டால், அதன் ஸ்பெஷல்களை சிறப்பாக (விலாவாரியாக அல்ல) காட்டி விடுவார் கமல் (பின்ன சுந்தரா?)..




படத்திற்கு நடந்த மேலும் இரண்டு சிறந்த விஷயங்கள் - வித்யாசாகர் மற்றும் மதன். வித்யாசாகர் தந்ததிலேயே சிறந்த இசை என்று இப்படத்தை நிச்சயமாக குறிப்பிடலாம். 'புதுப்பாட்டு பாடிடுவோம் புதுப்பாட்டு' பாடும் போது சூடாகும் ரத்தம், 'யார் யார் சிவம்' என்று கமல் கேட்கும் போது, குளிர்வதை உணர முடியும். இன்னும் 'மௌனமே பார்வையாய்' கேட்டு இருக்கீர்களா? ரொம்பவும் அருமையான பாடல் (ஏன் இந்த பாடலை படத்தில் சேர்க்க வில்லை என்று S.P.B. செல்லமாக கோபித்து கொண்டார் கமலிடம்.., ஒரு பேட்டியில்).

'இந்த படம் ஒரு காப்பியாண்டா' என்று கொஞ்ச நாள் முன் ஒரு நண்பன் பொலம்ப, அடித்து பிடித்து 'ஒரிஜினல்' என்று சொல்லப்பட்ட 'Planes, Trains and Automobiles' பார்த்தேன். அது முற்றிலும் வேறு தளத்தில் சொல்லப்பட்ட ஒரு கதை. Planes.. படத்தில் வரும் இருவரும் மற்றவரை புரிந்து கொள்வது மட்டுமே படம். மற்றபடி அன்பே சிவத்தின் சிறப்புக்களான.., கடவுள், Ideological clash போன்ற பலது அந்த படத்தில் இல்லை. ஒன்றிரண்டு ஒற்றுமைகள் இருப்பதால், இதை காப்பி என்று சொல்வது அநியாயம். அன்பே சிவம் ஒரு எமோஷனல் ரோலர் கோஸ்டர் (கண் கலங்கும் அடுத்த நொடி சிரிப்பு வரும்.. பல காட்சிகளில்..).

இறுதியாக, கமல் படம் ஆதலால் அவரை பற்றி ஒரு துணுக்கு. அவர் படங்களில் வரும் சில விஷயங்கள் கொஞ்ச நாட்களிலேயே உண்மையாக நடந்து விடும். உ.தா. சிகப்பு ரோஜக்கள் - ஆட்டோ சங்கர்; அன்பே சிவம் - சுனாமி இப்படி பல (sms, emailஇல் பார்த்திருப்பீர்களே?). அந்த வரிசையில், பேப்பர் படிக்கும் போது 'கண நேரத்தில்' எனக்கு தோன்றிய ஒன்று -
மும்பை தாக்குதல்களில் தொடர்பு என அமெரிக்காவில் கைதான டேவிட் ஹெட்லீ ஒரு முன்னால் CIA ஏஜெண்டாம் (தசாவதாரம் ஃப்ளெட்சர் பாத்திரம்).
முழுதும் படிக்க..

Dec 13, 2009

85-65-75 : கதை... ஆனால் கதை இல்லை!

முதல் முறையாக எனது படைப்பு (கதை) யூத்ஃபுல் விகடனில் வந்துள்ளது. அதுவும் யூத்ஃபுல் விகடனின் டிசம்பர் மின்னிதழில்... பார்க்க இங்கு கிளிக் பண்ணவும்


யூத்ஃபுல் விகடன் டிசம்பர் மின்னிதழ்





ட்டடங்கள் மட்டும் பெரிது பெரிதாக இருக்கும் கல்லூரிகள் ஒரு வித மிரட்சியை உண்டு பண்ணும். ஆனால் இந்த அமைதியான, மரங்களடர்ந்த கல்லூரி அப்படி இல்லை. நம் சொந்த வீடு, ஊர் போல் ஒரு உணர்வை கொடுக்கிறது. ஓஹோ என்று இல்லாவிட்டாலும், அதுவும் தரமான ஒரு கல்லூரி தான்.

அதோ அந்த துறையின் இறுதி ஆண்டில் படிப்பவர்களை பார்ப்போம். அவர்களை ஒருவாறு மூன்று வகைப்படுத்தலாம். முதல் வகையினர், எந்த நேரமும் செமஸ்டர், டெஸ்ட் என்று திரிபவர்கள். இவர்களுக்கு தெரிந்த (பிடித்த) இடங்கள் இவை தான் - வகுப்பறை, லேப், புத்தக கடைகள் (பாட புத்தகம் மட்டும்). அதிலும் ஸ்டாஃப் ரூம் தான் இவர்களுக்கு சினிமா தியேட்டர். உள்ளே நுழைந்தால் ஒரே உற்சாகம் தான் போங்கள். சராசரியாக 85 சதவீதம் எடுப்பவர்கள் (94 வரை கூட போகும், நான் சொல்வது சராசரி). சுருக்கமாக, உருப்படற பிள்ளைங்க.

இரண்டாவது வகை, இதற்கு நேர் எதிர். அடக்குமுறையை எதிர்ப்பவர்கள். எஃஸாம் நெருங்கினாலும் படிக்காமல் தைரியமாக அரியர் வைப்பவர்கள். இவர்களை 65 சதவீதத்தினர் (அரியர்/ஜஸ்ட் பாஸ்) என்று அழைக்கலாம் அல்லவா? பிரச்னைகளை எப்போதுமே பனியன் போல் அணிந்திருப்பார்கள் (போர்வை என்றால் இரவு மட்டும் தான். அதனால் பனியன்). பிரச்னைகளின் போது தேடவெல்லாம் வேண்டாம், இவர்களாகவே ஆஜர் ஆகிவிடுவார்கள். இவர்களுக்கும், முதல் வகையினருக்கும் ஆகாது என்று சொல்லித் தெரிய வேண்டியதில்லை. ஒருவர் மற்றவரை கண்டால், இப்படியும் ஜந்துக்கள் எப்படித்தான் இருக்கிறதோ என்று தவிர்த்து விடுவார்கள் (இதில் மட்டுமே ஒரே மாதிரி சிந்தனை).

மூன்றாவது, இந்த கதைக்கு முக்கியமானவர் இருக்கும் 75 கோஷ்டி (ஓயாம பெயர் காரணம் சொல்லிட்டு இருக்க முடியாது). இவர்களால் மேலே சொன்ன 2 பேருடனும் சேர முடியாது. எஃஸாம் நெருங்கும் போது மட்டும் நன்றாக படித்து (!), பெரிய பிரச்னைகளை முதல் வரிசையில் நின்று வேடிக்கை பார்ப்பவர்கள் (சிறியவைகளுக்கு இவர்கள் தான் நாட்டாமை). இவர்கள் 85 கோஷ்டிக்கு சின்ன ரவுடி. 65க்கு கொழந்த பசங்க

நம் நாயக 75-ம் (பெயர் முக்கியமில்லை) அவன் நண்பர்களும், வாழ்க்கை வாழ்வதற்கே என்று எண்ணுபவர்கள். சினிமா, சாப்பாடு, மொபைலில் குறும்படங்கள் எடுப்பது, படங்களுக்கு டப்பிங் கொடுப்பது என்று அவர்களுக்கு தெரிந்த வகையில் எஞ்சாய் செய்து, கல்லூரி வாழ்க்கையை அணுவணுவாக ரசிப்பவர்கள். 85/65 இருவருடனும் சினேகமாகவே இருப்பர் - 85 உடன் படிப்பு சம்பந்தமான உதவிகளுக்காக (xerox எடுக்க உன் புக் குடு, ப்ராக்டிகல்ஸ் இத்யாதிகள்), 65 உடன் கல்லூரியின் சீரான செயல்பாடுகளுக்காக (பின்னே? 65க்கு தெரியாமல் எதுவும் நடக்காதாக்கும்).

கொஞ்ச நாள் முன்னாடி காம்பஸ் இன்டர்வியூக்கென கம்பனிகள் வந்தார்கள். 85 கோஷ்டி டிரைனில் ரிசர்வெஷன் செய்தவர்கள் போல், பெரிதாக அலட்டி கொள்ளாமல் வேலை வாங்கினர். 75-ஐ சேர்ந்தவர்கள் அன்-ரிசர்வர்டில் அடித்து பிடித்து இடம் பிடிப்பதை போல் ஏதோ ஒரு கம்பனியில் வாங்கி விட்டார்கள். 65-இல் கிட்ட தட்ட எல்லாரும் டிரைனை தவற விட்டனர் (கொஞ்சம் பேர் ஊரிலேயே இல்லை).




இது நடந்து கொஞ்ச நாள் ஆகி விட்டது. முதல் ஆண்டில் எல்லாம் இரண்டு வாரத்துக்கு ஒரு முறை ஊருக்கு சென்று கொண்டிருந்த நம் 75, நீண்ட விடுமுறைகளிலும் ஹாஸ்டலிலேயே பழியாக கெடந்தான் (இறுதி ஆண்டும் முடிய போகிறதல்லவா..) இந்த நண்பர்கள் இல்லாத வாழ்க்கையை அவனால் கற்பனை பண்ண முடியவில்லை. அவன் பயந்ததை போல இறுதி ஆண்டு செமஸ்டரும் முடிந்தது. கடைசி நாளும் வந்தது. அன்று தான் நாம் உள்ளே நுழைந்திருக்கிறோம்.

வகுப்பினுள் நின்று கொண்டிருந்த நம்ம 75 அருகில் வந்த 65, "ஒரு வழியா சனியன் முடிஞ்சது... இங்க வந்து சேர்ந்ததுக்கு நல்ல காலேஜ்லயாச்சும் சேர்ந்திருக்கலாம். வேலயாச்சும் கெடச்சு இருக்கும். சரி சரி.. எதாச்சும் கெட்-டுகெதர்லாம் வச்சா கூப்பிடுங்கடா..." என்று கூறி விட்டு நகர்ந்து போனான்.

அப்போது, அங்கு வந்த 85 (இவனை பார்த்து தான் அவன் நகர்ந்திருக்க வேண்டும்), "இன்னிக்கி எஃஸாம் ஈசியாதான் இருந்துச்சு இல்ல (!)? டேய், கம்பனில இருந்து நாம ஜாயின் பண்றதுக்கு முன்னாடி படிக்கறதுக்கு டாகுமெண்ட்ஸ்லாம் அனுப்பி இருக்காங்க பாத்தியா? அத பிரின்ட் அவுட் எடுக்கத்தான் இப்போ போய்ட்டு இருக்கேன். நீ ஏண்டா ஒரு மாதிரி இருக்க?" என்று சொல்லி விட்டு, கடைசி நாள் என்ற நினைப்பே இல்லாமல் கடந்து போனான்.

முதல் நாளில் இருந்து நடந்த ஆயிரமாயிரம் நினைவுகள் அவன் கண் முன்னே ஓடின. நாளையிலிருந்து வகுப்புக்கு அவசரம் அவசரமாக கிளம்ப வேண்டியதில்லை; லேட்டா போய் திட்டு வாங்க வேண்டியதில்லை; ஹாஸ்டல் கிடையாது; கடைசி நேர படிப்புகள் இல்லை; ரெக்கார்ட்/அசைன்மென்ட்டுகள் இல்லை; மட்டமான அந்த மெஸ் சாப்பாடு இனி கிடையாது; சண்டை சச்சரவு இல்லை; ஏன், இனி இந்த கல்லூரியின் மாணவனே கிடையாது என்ற உண்மைகள் சடாரென்று அவனை தாக்க, கண்ணீர் தானாக துளிர்த்து அழ ஆரம்பித்தான்.
முழுதும் படிக்க..

Nov 29, 2009

பிடித்தவர், பிடிக்காதவர் - தொடர் பதிவு

மணிகண்டன் அவர்கள், 'புதிதாக தமிழ்ப்பதிவு எழுத நினைக்கும் மூன்று வாசகர்களை' இந்த தொடர் பதிவு போட அழைத்திருந்தார்.. நாமளும் புதுசு தானா.. அதனால இதையே எனக்கான அழைப்பாக ஏற்று (இதுக்கெல்லாம் கூச்சமே பட்றது கிடையாது), இதோ.. கொஞ்சம் வித்தியாசமாக..

மணிகண்டன் அவர்களுக்கு முதலில் நன்றி...


இந்தப் பதிவோட விதிகள்:
1. பிடித்தவர்களும், பிடிக்காதவர்களும் தமிழ்நாட்டிற்குள்ள இருக்கணும்.
2. நீங்க இதை எழுத அழைக்கிற பதிவர் குறைந்தது இருவராகவும், அதிகபட்சம் ஐவராகவும் இருக்கலாம்
3. பிடித்தவரோ, பிடிக்காதவரோ கண்டிப்பாய் பிரபலமானவராய் இருக்க வேண்டும். அவங்களை உங்களுக்கு இப்பத்தான் பிடிக்கல, பின்னாடி பிடிக்கலாம்ங்கற சமயத்தில தற்போது-ன்னு சேர்த்திக்கலாம்.
4. கேள்விகள் குறைந்தது ஏழு இருக்கணும். ஆனா பத்தைத் தாண்ட வேண்டாம்.




பிடித்த கவிஞர்
பிடித்த கதாசிரியர்
பிடித்த நகைச்சுவை நடிகர்
பிடித்த பாடலாசிரியர்
பிடித்த வசனகர்த்தா
பிடித்த இயக்குனர்
பிடித்த நடிகர்

                                         கமல்ஹாசன்

பிடிக்காத கவிஞர்
பிடிக்காத கதாசிரியர்
பிடிக்காத நகைச்சுவை நடிகர் (!)
பிடிக்காத பாடலாசிரியர்
பிடிக்காத வசனகர்த்தா
பிடிக்காத இயக்குனர்
பிடிக்காத நடிகர்

                                         பேரரசு




வித்தியாசமாக போட வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் எழுத பட்டது.. சோ(நடிகர் அல்ல), மன்னித்து விட்டு விடுங்கள்..
ஒரு நிமிஷம்.. வித்தியாசம் தானா..? இல்லை இந்த மாதிரியும் யாராச்சும் போட்டுட்டாங்களா (அட போங்கப்பா..)

தொடர நான் அழைப்பது, என்னை மாதிரியே இதை விளையாட ஆர்வமுள்ள 5 பேரை..
முழுதும் படிக்க..

Nov 28, 2009

ஒரே வார்த்தையில் தமிழ் இயக்குனர்கள்..

இந்த இயக்குனர்களின் படங்களை ஒரே வார்த்தையில் ரசிகர்கள் விவரித்தால்..?

மணிரத்னம்: இருட்டு
ஜெயம் ராஜா: ரிப்பீட்டு

சேரன்: பாசம்
பி. வாசு: மோசம்

அகத்தியன்: காதல்
ஹரி: மோதல்

பாலா: பிணம்
ஷங்கர்: பணம்

செல்வராகவன்: சாதனை
தரணி: ரோதனை

கமல்: புரியல
பேரரசு: முடியல

அமீர்: பக்கா
டி.ஆர். : நக்கா.. டண்டணக்கா..
முழுதும் படிக்க..

Nov 15, 2009

ஹைக்கூ கதைகள்..!

1. ஆதி மனிதன்
அந்த கூட்டத்தில்
அதிகாரம் உள்ளவர்களும்
சோம்பேறிகளுமான அவர்கள்
ஒன்று சேர்ந்தார்கள்.
சாதிகள் பிறந்தது!

2. விடுதலை
பருப்பு டப்பாவில்
குழந்தையின் வைத்தியத்திற்கென,
செல்லம்மா சம்பாதித்திருந்த
பணத்தை எடுத்துக்கொண்டு
போய்.. குடித்து விட்டு..
ரோட்டை கடக்கையில்..
அடிப்பட்டு செத்துப்போனான்
சின்னப்பா..

3. அரசியல்வாதி
'கோடா'னு கோடி ரூபாய
வச்சிக்கிட்டு என்ன பண்ணுவீங்க?
என்றார் அவர்.
'எனக்கு முன்னாடி இருந்தவங்க
என்ன பண்ணாங்களோ
அதயே தான்'
என்று மடக்கினார் இவர்.

4. நிலா
'காசு எங்க இருக்கு புள்ள?
போறதுக்கே நெறையா பணம் வேணும்.
அங்க அவ்ளோ தண்ணி இருக்காம்!
முக்காவாசி பேர் போய்ட்டாங்க தான்.
இருந்தாலும்,
இங்கனயே கெடந்து உங்கள சாக உட்ருவனா?
எப்படியாச்சும் கூட்டி போய்டுறேன்'
என்றான் 2042-இல்
ஒரு பூமி ஏழை!

5. உலகின் கடைசி மனிதன்
தனியான 50ஆவது நாள்.
குதூகலித்தான்..
பொன் விழாவுக்காக அல்ல.
30 நாட்களாக தேடிக்கொண்டிருந்த..
துப்பாக்கி அன்று கிடைத்தது!
முழுதும் படிக்க..

Nov 10, 2009

அரண்டவன் அந்தாதி

அன்புள்ள அனானி
அவசரப்பட்டு
அனுப்பி விடாதே
ஆட்டோ

ஆட்டோ அனுப்பும் அளவுக்கு
அடியேன் ஆள் அல்ல..
அசட்டு அட்டிவன்!

அட்டானவன் ஆனாலும்
அன்பானவன்
அடக்கமானவன்

அடக்க ஆளில்லாமல்
அஃதொருமுறை
ஆணவத்தில் ஆடினேன்

ஆடிக்காற்று
ஆலையே அழிக்கலாம்.. ஆனால்
அபலைபால் அர்ச்சுனன்
அம்பெய்தலாமோ?

அம்போவென
அடிப்பட்டு அழ
ஆவல் அற்றவன்
அத்தகையவனிடம் அக்கறையோடு
அருள் அளிக்கலாமே..?

அளித்து அழிக்கும்
ஆண்டவனே..
அணுவே.. ஆழியே..

ஆகவே,
ஆட்டோ
அனுப்பி விடாதே
அவசரப்பட்டு
அன்புள்ள அனானி


பின் குறிப்பு:
அ, ஆ - விலேயே, அந்தாதி முறையில், அன்பிற்க்கினிய அனானியை பாட்டுடை தலைவனாகக் கொண்டு, தனது முதல் கவிதை(!)யை ஒருவன் எழுதி இருக்கிறான் என்றால்..
அவனுக்கு வந்த மிரட்டலின் பரிமாணத்தை புரிந்து கொண்டு, அவனுக்கு கை கொடுப்போமாக!! அவ்வ்வ்வ்வ்வ்.........
முழுதும் படிக்க..

Nov 3, 2009

அந்த 15 ரொபாட்கள்..!

மிகவும் ரகசியமான அந்த ப்ராஜக்ட் வெர்ல்ட் ரூலைப்பற்றி (World Rule) தெரிந்தவர்கள் மொத்தம் 8 பேர் தான். US ப்ரசிடன்டிற்கு கூடத்தெரியாது. இந்த ப்ரொக்ராமின் ப்ரம்மாக்களான மார்க் மற்றும் டாம் அன்று இறுதி கட்ட செக்கப்கள் முற்றிலும் முடிந்த மகிழ்ச்சியில் இருந்தார்கள். படபடப்புடந்தான்.



"இது எந்த அளவு வெற்றி பெரும் என்று நினைக்கிறாய் டாம்?", என்றார் மார்க்.
"முழு வெற்றி தான். கூடிய சீக்கிரம் இந்த உலகமே நம் சொல் படி ஆட போகிறது!"

செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) மூலம் உருவாக்கப்பட்ட 15 ரொபாட்களும் 15 சக்தி வாய்ந்த நாடுகளில் விடப்படும். 5 வருடங்கள் கழித்து, அந்தந்த நாடுகளின் சக்தி வாய்ந்த பதவிகளில் இருந்து கொண்டு, அந்த நாட்டையே ஆட்டி படைக்கக் கூடியவர்களில் ஒருவராக ஆக வேண்டும். இதுவே அந்த 15 'பேரின்' உள்ளே ஏற்றி வைக்கப்பட்டிருக்கும் ப்ரொக்ராமின் சாராம்சம்.

"5 வருடங்களில் இவை அத்தகைய உயர்வை எட்ட வாய்ப்பு இருக்கு என்றா நினைக்கிறாய்?", சந்தேகத்துடன் கேட்டவர் டாம்.
"மனிதனின் சுய சிந்தனையும், மிஷினின் உண்டு - இல்லை என்கிற துல்லியமும் ஒரு சேர வாய்ந்தவை இவை. இதன் சக்தி அளவிட முடியாதது டாம். அதுவும் செயற்கையாக உருவாக்கப்பட்டது என்று இவைகளை யாராலும் சொல்ல முடியுமா? இதோ இதுக்கு இருக்கும் மீசையைப்பார்" ஆஸ்திரேலியாவிற்கு செல்ல இருக்கும் ரொபாட்டின் மீசையை த்டவிக்கொண்டே சொன்னவர் மார்க். டாமிற்கு இது எல்லாம் தெரிந்தாலும் கடைசி நேர பட படப்பை அடக்க முடியாது அல்லவா?

ஒரு வழியாக எல்லாம் முடிந்தது. அந்தந்த நாடுகளில் கொண்டு போய் விடப்பட்டனர் அந்த 15 பேரும், அந்தந்த நாடுகளின் குடிமகன் களாக.

....

இதோ ஓடிவிட்டதே 5 வருடங்கள்.. அவர்களின் கண்டுபிடிப்புகள் எந்த பதவியில் இருந்து கொண்டு அந்த நாடுகளை ஆட்டிக்கொண்டு இருக்கிறது என்று அனலைஸ் செய்து, அடுத்த கட்டத்திற்கு தயாராக கிளம்பினர் மார்க்கும் டாமும்.

"அவைகளின் நியூரல் நெட்வொர்க்கும் மனித மூலையை ஒத்து இருப்பதால், எல்லாம் ஒரே அளவு அறிவுடன் இருக்கும் என்று சொல்ல முடியாது. இந்த 15-இல் எது மிக அறிவானது, எது சக்தி வாய்ந்தது என்பதயும் பார்க்க வேண்டும்" பிளைட்டில் பாதி தூக்கத்தில் முனகிக்கொண்டார் டாம்.



முதலில் அவர்கள் இறங்கிய இடம் அவர்களின் தலை நகரான வாஷிங்க்டன். இவர்களின் 'அது' அந்த நாட்டின் தலைமை பாதுகாப்பு ஆலோசகராக இருந்தது.
"ஆகா. என்ன சக்தி வாய்ந்த பதவி? நாம் நினைத்ததை விட இந்த ப்ராஜக்ட் பெரும் வெற்றி தான்" என்று ஆனந்த் குக்கூரலிட்டார்  மார்க்.

அடுத்து ஐரோப்பா, சீனா, ஆஸ்திரேலியா என்று பயணப்பட்டனர். ஒவ்வொரு நாட்டிலும் பாதுகாப்பு அமைச்சர், உள்துறை அமைச்சர், ராணுவ தளபதி (பாகிஸ்தான்) என்று விதவிதமான, சக்தி வாய்ந்த பதவிகளில் இருந்தார்கள் இவர்களின் கண்டுபிடிப்புகள்.

எல்லா நாட்டையும் முடித்து கொண்டு, கடைசியாக இந்தியா வந்து, அந்த 15வது ரொபாட் வீட்டின் முன் இறங்கியதுமே... இருவரும் சிறிது அதிர்ச்சி அடைந்தார்கள் என்று தான் சொல்ல வேண்டும். பின்னே? மத்த 14 நாடுகளில் பார்க்காத காட்சியை அல்லவா இங்கு கண்டனர்? வீட்டின் (அரண்மனையின்) வெளியே ஒரே மக்கள் கூட்டம். எக்கச்சக்க கார்கள். அதில் பாதிக்கும் மேற்பட்டவை 'நானும் வி ஐ பி தான்' என்று சொல்லிக்கொள்ளும் சிகப்பு விளக்கு பொருத்த பட்டவை.

"ஆ.. இவர்தான் 15 பேரில் மிகுந்த சக்தி வாய்ந்தவராக இருக்க வேண்டும். என்ன கூட்டம்? அதோ, அங்கு நிற்பவர் இவர்களின் பிரதமர் போல் அல்லவா இருக்கிறார்? அவரே வெளியில் காத்து கொண்டு இருக்கிராரே?" வாயை பிளந்தார் டாம்.

"ஆம். உண்மைதான். ஆனால், பிரதமரை விட உயர்ந்தவராக இருந்தாலும், இவர் எந்த பதவியில் இருக்கிறார் என்று தெரியவில்லையே?" என்றபடியே அங்கு இருந்த 'காரிய தரிசி'யிடம் உள்ளே சொல்லி அனுப்பினார் மார்க்.

அவர்கள் உடனே உள்ளே விடப்பட்டு, 'அவர்' எதிரில் நிற்க வைக்கப்பட்டனர்.

தன் ஒளி பொருந்திய கண்களை திறந்து, இவர்களை நோக்கி புன்முறுவல் பூத்தார் ஸ்ரீ ஸ்ரீ ரூபானந்த ஸ்வாமிகள்.
முழுதும் படிக்க..

Oct 29, 2009

நாயோ போபியா - பாகம் 2

எப்படி 'நாயோ போபியா பாகம் 2' படிக்க பாகம் 1 அவசியம் கிடையாதோ, அது போல மனுஷங்களுக்கும் நாய் தேவை கிடையாது. அப்படிங்கறது என் வாதம். கேக்க மாட்டீங்களே? ஒ.கே, அதுங்க அட்டூழியத்த பாருங்க..



என் சிநேகிதன் வீட்டில் மிகவும் பிடித்து ஒரு நாய் வளர்த்தாங்க, சின்ன வயசில் இருந்தே (அதாவது நாயோட சின்ன வயசு).. அவனுக்கு ஒரே ஒரு குறை, அந்த நாயின் குரை (ரைமிங்கை கவனிக்க). அதாவது அது எப்போமே குரைக்காது. ரொம்ம்ப சோம்பேறி. யாராவது வீட்டுக்கு வந்தால் ஓடி போய் ஒளிஞ்சிக்கும். என்னடா இப்படி கூட ஒரு நாய் இருக்கேனு, எனக்கும் அதைப்பத்தி கேக்கும் போதே புடிச்சு போச்சு. ஒரு டூர் விஷயமா அவன் வீட்டில் நாங்க ஒரு பத்து பேர் தங்க வேண்டி வந்தது.

அவங்க வீட்டுக்குள்ளே நாங்க எல்லாம் நுழைஞ்ச உடனே பயங்கரமா கொலைக்கர (கார) சத்தம். திபு திபுனு ஓடி வந்து 'என் மேல' பாஞ்சிடுச்சு (என்னை சுத்தி பத்து பேர் இருந்தார்கள் என்பதை நினைவில் கொள்க). இப்படி பிறந்ததில் இருந்து எதுவுமே பண்ணாம, 'தூக்கத்தை அன்றி வேறொன்றும் அறியேன் பராபரமே' என்றிருந்த அது, இவ்வளவு சுறு சுறுப்பானதில் நண்பன் வீட்டில் எல்லார்க்கும் சந்தோஷம் தான். வீட்டுக்கு அடிக்கடி வந்து போக சொன்னார்கள்.



அது நடந்தது காலேஜ் படிக்கும் போது. அப்புறம் அடிச்சு புடிச்சு ஒரு வேலையில் சேர்ந்து, நைட் ஷிப்ட் பார்த்துன்னு, 'அது' என் வாழ்க்கைல கொஞ்ச நாள் காணாமல் போய் இருந்தது. ஷிப்ட் என்பதால் வீட்டுக்கு கம்பனி வண்டி அனுப்புவார்கள் (நைட் எல்லாம் எங்க தெருல நடக்க முடியாது. அவ்ளோ நாய்). வண்டிக்குள் ஒரு வசந்தம் என்பது போல் கொஞ்ச நாட்களாக என் கூட எங்க ஏரியா எம்ப்ளாயீ (பொண்ணு) ஒன்ன club செஞ்சி இருந்தாங்க (ஒரே ஷிப்டுங்கர்தால).

எங்க வீடு தாண்டி தான் அவங்க வீடு. சோ, எங்க வீட்டு வழியாத்தான் போகணும். ஒரு நாள் எங்க வீட்டை நெருங்கும் போது.. திடீர்னு எருமை மாட்ட சுத்தின ஓநாய்கள் மாதிரி ஒரு பத்து நாய் (இங்கயும்) வண்டிய சுத்தி ரவுண்ட் கட்டிடுச்சு. டிரைவர் மெதுவா ஓட்டிட்டு போனார், எங்க எதையாச்சும் ஏத்தி தொலைச்சிடுவோமோனு.

திடீர்னு அந்த பொண்ணு ஜன்னல் பக்கம் ஒரு நாய் கால் எடுத்து வச்சி பல்ல க்ளோஸ்-அப்ல காட்டி 'வவ்'னுச்சு. அவ நடுநடுங்கி போய்ட்டா (நானா? தனியா வேற சொல்ணுமா?).

வேகமா ஜன்னல சாத்தி என் பக்கம் திரும்பி, 'உங்க நாய்ங்க மாதிரி நான் எங்கயுமே பாத்தது இல்ல'னு கோவமா நடுங்கிட்டே சொன்னா; கையை கர்சீப்பால் தொடைத்து கொண்டே (நாயின் எச்சில் தெறிச்சு இருக்கலாம்)..
"ஒ, அது என் நாய்ங்க இல்ல. Stray டாக்ஸ். பயந்துடீங்களா.. ஹா ஹா ஹா"னு சத்தமாவே சிரிச்சு தொலைச்சேன் (நம்ப பய புள்ளைக்கு தான் எங்க எப்டி நடந்துக்கணும்னு தெரியாதே? பாவம்!).

'இப்போ எதுக்கு லூசு மாதிரி சிரிக்கர'ன்ற மாதிரி அவ பார்த்த பார்வை, பத்து நாய் மேல விழுந்து புடுங்குன மாதிரி இருந்துச்சு (பத்து என் ராசியான நம்பர் இல்ல போல). அதுக்கு அப்புறம் அவளை அந்த ஷிப்டில் பார்க்கலை.




இப்போ சமீபமா நடந்தத கேளுங்க.. எங்க வீட்டு பின்னாடி, நாய் ஒன்னு சுமார் 4 குட்டி (அதாவது பப்பி) போட்டுடுச்சு. எல்லாம் வித விதமான கலர்ல, அவ்ளோ சூப்பரா. குழந்தைகள் போல அதுகள் வெளயாடினத பாத்து, ஆசப்பட்டு பக்கத்து வீடுகளில் ஆளுக்கு ஒரு குட்டிய எடுத்துகிட்டாங்க. ஒன்னு மீந்தது. அதை நாம வளக்கலாமானு எங்க வீட்ல ஒரு பேச்சு வேற வந்துருக்கும் போல (நான் இல்லாத போது). எனக்கும் அந்த நாய் குட்டி அவ்ளோ பயங்கரமானதா தெரில.

ஒரு வாரம் கழிச்சு திடீர்னு அந்த மீந்த குட்டி செத்து போச்சு. ஈ மொய்த்து கொண்டு அது கிடந்த கோலத்தை பார்த்தா யாராலயும் தாங்க முடியாது. எனக்கு ரெண்டு நாளைக்கு வயிறு சரி இல்லாத மாதிரியே ஒரு பீலிங். அது செத்த அன்னிக்கி என் அக்கா அழுததை போல், வேற எதுக்கும் அவ்ளோ அழுது நான் பாத்தது இல்ல.

வள வளனு எதுக்கு பேச்சு? நாய்கள் வேண்டாம்னு சொன்னா கேட்டு தான் தொலைங்களேன்!!!
முழுதும் படிக்க..

Oct 23, 2009

ஃப்ரண்ட்ஸ் தொடர் (Friends Series) - ஒரு அறிமுகம்

ஃப்ரண்ட்ஸ் என்னும் உலக அளவில் மிக பிரபலமான இத் தொடர் NBC சேனலில் 1994-2004 ஆம் வருடம் வரை ஒலி பரப்பு ஆகிய sitcom வகை சிரிப்புத் தொடர் (அடங்கப்பா, எவ்ளோ பெரிய வரி). sitcom என்றால், நடிகர்கள் நடிக்கும் போதே அதை ரசிகர்கள் எதிரில் அமர்ந்து ரசிப்பார்கள். அவர்களின் ரியாக்ஷங்களும் அப்பொழுதே பதிவு செய்ய படும் (Eg. பால சந்தரின் TV சிரிப்பு சீரியல்கள், லொல்லு சபா போன்றவை- இவைகளில் சிரிப்பு சத்தம் ரெக்கார்ட் செய்ய பட்டவை).





அருமையான comedy ஐ எதிர்பார்க்கும் எவரையும் இத்தொடர் கவராமல் போகாது. இது 6 நண்பர்களை பற்றிய கதை. 10 வருடங்கள் அவர்கள் வாழ்கையில் நடக்கும் சம்பவங்களை மிகவும் கலகலப்பாக நமக்கு எடுத்து காட்டுகிறது. DVD-இல் ஒரு எபிசொட் பார்க்க ஆரம்பித்தால், எழுந்து போக மனசு வராது. மொத்தம் 10 சீசன், 236 எபிசொட்கள்.

6 நண்பர்களில் மூவர் ஆண்கள், மூவர் பெண்கள். அவர்களை பற்றிய சிறிய அறிமுகம்.

1. மோனிகா (Monica): திரு திரு பட ஹீரோயினி போல எல்லாத்தயும் ஒழுங்கு படுத்திகொண்டே அலையும் ஒரு காரக்டர். 6 பேரில் மிக பொருப்பானவர். Perfectionist. சமையல் செய்வது மிக பிடித்த ஒன்று (Hotel Chef ஆக பின்னாளில் வேலை).

2. ராஸ் (Ross): மோனிகா வின் தம்பி. Paleontology (related to fossils), அதாவது தொல்லியல் எச்ச துறையில் (!) இருப்பவர். Chandler-இற்கு அடுத்து அதிக பல்ப் வாங்குபவர். 3 முறை திருமனம் செய்தும் (ஒரு தடவை தெரியாமல் நடந்தது) தனியே வாழ்பவர். அறிவியல் விஷயங்களில் ஈடுபாடு அதிகம் (மற்றவர்களுக்கு இது பிடிக்காது).

3. சாண்ட்லர் (Chandler): அதிக பல்ப் வாங்குபவர். புள்ளியியல் துறையில் வேலை செய்பவர். இவரின் கிண்டல்கள் மிக பிரசித்தி (அடுத்தவர்களை திட்டாமல், உதைக்காமல், அடி வாங்காமல் இவர் செய்யும் கிண்டல்கள் மிக மிக ரசிக்க வைக்க கூடியது). மோனிகா வின் எதிர் வீட்டில் வசிப்பவர். பின்னாளில் மோனிகா வை மணப்பார். ராஸின் கல்லூரி தோழனும் கூட.




4. ஜோயி (Joey): சாண்ட்லரின் ரூம் மேட். நடிப்பு சான்ஸ் தேடி அலைபவர். அழகானவர், பெண்களை எளிதில் வசப்படுத்தி விடுவார். நடிப்பு சான்ஸ் தேடி அலைவதால் பெரும்பாலும் சாண்ட்லர் ஐயே பணத்துக்காக நம்பி இருப்பவர். இவர் தான் பல்ப் வாங்குபவதில் No. 1. ஆனால் தான் பல்ப் வாங்கிகிறோம் என்றே அரியாத வெள்ளை மனசுக்காரர். அதனால் சாண்ட்லர் No. 1

5. பீபி (Phoebe): அலாதியான character. சிறு வயது முதல் பல கஷ்டங்களை அனுபவிததால், நடவடிக்கைகள் சிறிது வித்தியாசமாக இருக்கும் (நமது வாழ்விழும் இப்படிப் பட்டவர்களை பார்க்க முடியும் அல்லவா?). இன்னொரு வெள்ளை மனசுக்காரர். அதனாலோ என்னமோ தனக்கு சில அமானுஷ்ய சக்தி இருப்பதாக நம்புவார் (அது உண்மையும் கூட). மச்சாஜ் செய்வது வேலை.

6. ரேச்சல் (Rachel): அழகானவர் (6 பேரில் மிகவும் ப்ரபலமானவரும் கூட). மோனிகா வின் பள்ளி கால தோழி. ஒரு கட்டத்தில் ராஸை காதலித்து பின் பிரிபவர். ஆர்வம் ஃபேஷனில். முதலில் மோனிகா வின் ரூம் மேட் ஆக இருந்து பின் ஜோயி ரூம் மேட் ஆவார் (சாண்ட்லர் - மோனிகா திருமணம் போது).

ஆறு பேரும் ஆறு தினுசில் இருந்தாலும், இவர்களின் நட்பு நம்மை பொறாமை கொள்ள செய்ய கூடியது. இவர்களை இணைக்கும் ஒரே விஷயம், இவர்கள் அனைவருமே நல்லவர்கள். இதன் கடைசி எபிசொட் 52.5 மில்லியன் மக்களால் கண்ணீருடன் (சிரிப்பு தொடர் என்றாலும் கூட) பார்க்கபட்டது.


இது ஒரு அறிமுக கட்டுரை மட்டுமே, விமர்சனம் அல்ல. யாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம் என்ற நோக்கத்தில் எழுதபட்டது. பார்க்காத்வர்கள் நிச்சயம் பாருங்கள், வருந்த மாட்டீர்கள். பார்த்தவர்கள் பார்க்காத்வர்களை ஊக்குவியுங்கள்.
முழுதும் படிக்க..

Oct 20, 2009

பேரரசுகள்

பேரரசு இருக்காரே, அவர பத்தி பேச ஆரம்பிச்சா பேசிட்டே இருக்கலாம். அவரு விஜய் மாதிரி யான ஆட்களுக்கு ஒரு மணி ரத்னம். பரத் மாதிரி ஆட்களுக்கு சத்யஜித் ரே. இப்படி ஒரு சிறந்த இயக்குனர் பத்தி எழுதலனா எபடிங் நா. இவரு எப்டி என்றால், இவரின் காவியங்களில் எல்லாம் சமுதாயத்துக்கு பல நல்ல கருத்துக்கள எடுத்து கூறுவார். உதாரணத்துக்கு கதாநாயகி கொஞ்சமா டிரஸ் போட்டுட்டு வர கூடாதுன்னு அட்வைஸ் பண்ணுவார். அடுத்த கனவு பாட்டுல ரெட்டை அர்த்த வரிகள்ள பின்னி பிடல் எடுப்பார்.



இவர் ஹீரோக்கள் எல்லாம் உடம்பை நெளித்து கொண்டே இருப்பார்கள் (காமெடி காட்சிகளில்). செண்டிமெண்ட் பத்தி சொல்லவே வேணாம். நண்பன் இறந்துடுவான். இல்ல தங்கச்சி புருஷன் சாக பாப்பான். இல்ல தங்கச்சி குச்சி மிட்டாயில, மிட்டாய் இருக்கும் - குச்சி இருக்காது. இப்படி பல துன்பங்களை ஹீரோ சந்திப்பார். கடைசியில் வெற்றி பெறுவார். இப்படி இவருக்கு இணை யாரும் இல்லையா நு சினி உலகம் கலங்கினப்போ நீ எல்லாம் என்ன டா சின்ன பய நு ஒரு என்ட்ரி கொடுத்தார்கள் ரித்தீஷ், ஆர்.கே. , சாம் அன்டர்சன் (!) போன்றோர்.


சரி, இவர்களிடத்தில் கத்துக்க எதுவும் இல்லயா? இருக்கு. அவர்களின் தன்னம்பிக்கை!! யாரிடமும் கத்து கொள்ள விஷயம் உண்டு :-) நான் ப்ளாக் எழுத ஆரம்பிக்க இவர்கள் கொடுத்த நம்பிக்கையும் ஒரு காரணம் தான்..
முழுதும் படிக்க..

சாப்ட்வேர் - 'சர்வேசன்500 - நச்னு ஒரு கதை போட்டி 2009'


அட எவ்வளவு பயமாக இருக்கிறது கொஞ்ச நாட்களாக? ஏன் என்றா கேட்கிறீர்? ஒருவித நிச்சயமற்ற தன்மை தருகிற பீதிதான். பின்னே? என் நண்பர்கள் ஒருவார் பின் ஒருவராக வெளியில் துரத்தப்படுவதை பார்த்தால், அடி வயிறு கனமாகி லப்டப் அதிகம் ஆகுமா ஆகாதா?

இதை பார்த்து அவன் குஷியடையத்தான் செய்வான். யாரா? நாங்கள் உட்கார்ந்த இடத்தில் சாப்பிடுவதை பார்த்து எரிச்சல்படுகிறானே, அவன்தான். ஒரு பருக்கை உண்ண அவன் காடு மேடு எல்லாம் அலைய வேண்டி இருக்கிறதாம். அதற்காக எங்களை திட்டலாமா? விலை ஏற்ற இறக்கத்திற்கு எல்லாம் எங்களை காரணகர்த்தாவாக்கி திட்டுகிறான். திடீர் தட்டுபாடுகளுக்கும் எங்களை கை காட்டி கொக்கரிக்கிறான்.

அவனுக்கு ஒரு பெயர் வைத்திருக்கிறேன். `நாட்டு பயல்’. பிடித்திருக்கிறதா? என்ன இது ஒரு பேரா என்று முகம் சுளிக்காதீர்கள். என் தரப்பு நியாயங்களை கேட்டால் கடைசியில் நீங்களும் அவனை அப்படித்தான் அழைப்பீர்கள்.

இப்படி திட்டும் அளவிற்கு நாங்கள் செய்த பாவம்தான் என்ன? நாங்கள் சௌகரியமாக இருப்பது கண்ணில் அகப்பட்ட தூசிபோல இருக்கிறது அவனுக்கு. தனித்தனி அறையாம் எங்களுக்கு. அதை பார்த்து அரை லிட்டர் அமிலம் அவன் வயிற்றில். இதில் அன்று என்னை பார்த்து இப்படி ஒரு கேள்வி வேறு- `அது எப்பிட்ரா எல்லாரும் சொல்லி வெச்ச மாதிரி வெள்ளையா இருக்கீங்க?’ செகப்பா இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டான் என்பது போல் இப்படி புரளிகள் வேறு.





ஆனால் நாங்கள் படுகிற அல்லல்களை அறிவானா அவன்? முன்னெல்லாம் கொஞ்சம் பேர் தான் இருந்தோம். இப்போ எங்கே பார்த்தாலும் வதவத என்று எங்கள் வகையறாதான். பிறந்த ஊர்களைவிட்டு எங்கோ பாஷை தெரியாத ஊர்களில் பிழைப்பு. அவனை மாதிரியா? பிறந்த ஊரிலேயே வேலை செய்து, குடும்பத்துடன் சாப்பிட்டு -அதுவல்லவா சொர்க்கம் (இன்னும் திருமணம் ஆக வில்லை)? நாங்கள் அலையாமல் ஒரே இடத்தில் உட்கார்ந்து இருப்பதை பற்றி அங்கலாய்க்கிறானே- உட்கார்ந்தால்தான் தெரியும் அதில் உள்ள நமைப்பு.

அட, என் பீதியை பற்றி பாதியிலேயே விட்டுவிட்டேன் பார்த்தீர்களா? முதலில் ஆங்காங்கே தூரமாக துரத்தப்படுவதை கேள்விப்பட்டபோது, நமக்கு அந்த நிலை வராது என்று நம்பிக்கொண்டிருந்தோம். ஆனால், என் நண்பர்கள்- பக்கத்து அக்கத்தில் வேலை பார்த்தவர்கள்- காணாமல் போவதை பார்த்தால் கலங்குமா? கலங்காதா?

இதோ -என் உயிர் நண்பன்- நானும் அவனும்தான் ஒரே அறையில் வேலை செய்தோம். அவனை துரத்தப்போகிறார்கள். என் கண் எதிரே அந்த காட்சி நடந்ததுதான் ரொம்ப கஷ்டமாக இருந்தது. இவ்வளவு நாளாக எங்களுக்கு படியளந்து சோறுபோட்ட மேனேஜர், கண்ணில் இறக்கமில்லாமல் இவனை அழைத்துக்கொண்டு போகிறார். இவனது கலக்கத்தை கண்டுகொண்டதாகவே தெரியவில்லை. எத்தனை பேரை துரத்தி இருப்பார்? எல்லாம் பழக்கம்தான் போல. என்ன ஒரு கழுத்தறுப்பு? சே! என் கழுத்துக்கு எப்போ வரப்போகுதோ தெரியலை -கத்தி.

உங்களை கேட்க மறந்தேனே? என்னை பார்த்திருக்கிறீர்களா நீங்கள்? நேற்று கூட எங்கள் கறிக்கடையை தாண்டி போகும்போது உங்களை பார்த்தேனே? ம்ம்ம்... என்னை திரும்பி பார்த்தால்தானே உங்களுக்கு முகம் தெரிய? கறுப்பு கூண்டுக்குள் இருக்கும் இந்த பிராய்லர் கோழியை உங்களுக்கு எங்கே நினைவிருக்கப்போகிறது?

சரி பரவாயில்லை. அதோ வருகிறான் பார் -நாட்டுக்கோழிப்பயல்- கேலிச்சிரிப்புடன். என் நண்பன் கதியை பார்த்திருப்பானோ?

டேய் என்னடா சிரிப்பு? என்னா மறுபடி ஆரம்பிக்கப் பாக்கறியா? போடா அந்தாண்ட!


                                                            ***************


சர்வேசன்500 - நச்னு ஒரு கதை 2009 - போட்டி
முழுதும் படிக்க..

Oct 19, 2009

நாயோ போபியா - பாகம் 1

நாய எவன் கண்டு புடிச்சான்? அது சரி எல்லா ஜீவா ராசி போல் அதுவும் ஒன்னு. எனக்கு அது மேல் இருக்கும் பயம் போல வேற யாருக்குமே இல்லையா னுட்டு சில சமயம் எரிச்சலா இருக்கும். எனக்கும் நாய்க்கும் ஆன இந்த பகை இன்னிக்கி நேத்திக்கி இல்ல. ரைட் பரம் மை சைல்ட் வூட். எத்தனை கிலோ மீட்டர் ஓடி இருப்பேன் இது வரைக்கும்? ஆனால் பெருசா கடி வாங்கினது கெடயாது. ஏனோ ஒரு எரிச்சல். கடுப்பு. பயம். ஏழு கழுத வயசு ஆய்டுச்சு. நாய் பயம் மட்டும் போக மாட்டேன்குது. எரும ச்சே.





இப்படி தான் ஒரு தடவ ஸ்கூல் முடிச்சி வந்துகிட்டு இருந்தேன். தெனம் அந்த வழியாதான் வருவேன். அன்னிக்கி பாத்து மூஞ்சில வெல்ல கலர் அடிச்சகருப்பு நாய் (கிட்ட தட்ட இந்த படத்துல இருக்கற மாதிரி, இன்னும் கொடூரமா). மொதல்ல ஒரு உர்ர்ர். அப்புறம் ஒரு கர கரப்பு. அப்புறம் ஆரம்பிச்சது பாருங்க. கொரகொர நு கொரைகுது. இதுல அந்த தெரு நாய் அத்தனையும் சப்போர்ட்க்கு  சேர்ந்துகிடுச்சு. சப்த நாடியும் அடங்கி போச்சு. அந்த நேரம் பார்த்து என் கிளாஸ் பொண்ணுங்க அந்த பக்கம் வர, வெளிறி போன என் மூஞ்ச பாக்க, இத்தனநாள் நான் சேத்து வச்சி இருந்த கௌரவம் செத்து போச்சு. என் ரவுடி இமேஜும் போச்சு. அன்னிக்கி முடிவு பண்ணினேன். நாய் தான் என் ஜென்ம எதிரினு .

நாயை கூட விடுங்க. அத வளக்கரவுங்க பன்ற சேட்டை இருக்கே. ஐயோ. அதுக்கு நாயே பரவ இல்ல. மூஞ்சி உசரத்துக்கு ஒரு நாய். அவங்க வீட்டுக்கு ஒரு நாள் போனேன் (முன்னாடியே தெரியாது. இப்டி ஒன்னு இருக்குன்னுட்டு). அதுக்கு வழக்கமா நாய் முதலாளிங்க யூஸ் பண்ற டயலாக் - "சும்மா வாங்க, கடிக்காது."

அது தண்ணி அடிச்ச பண்ணி ஆட்டம் கண்ணு ரெட் ஆயி கொர்ர் நு சொல்லுது. டேய் உனக்கு மனசாட்சியே இல்லையா டா? நாயே வளக்க சொன்ன ஒரு குதுரைய  வளத்துகிட்டு இருக்கான் (இது முதலாளிக்கு, கௌண்டர் ஸ்டைலில் படிக்கவும்). அப்டியே வளத்தாலும் யாராவது விருந்தாளி   வந்தா கட்டி போட வேண்டியதானே? அது வந்து கால தூக்கி என் தோளுல வெக்குது (என்ன ரொம்ப புடிக்குதாம்!).
முழுதும் படிக்க..

முதல் ப்ளாக்

முதல் ப்ளாக் தமிழில் இருந்தால் நலம் என்று எண்ணினேன். இதற்கு முக்கிய காரணம் நான் படித்து வியந்த தமிழ் ப்ளாகுகள். தமிழிற்கு என்று ஒரு நடை அழகு உண்டு.

ப்ளாகில் இங்கிலீஷ் டு தமிழ் வசதி இருப்பது பெரும் நன்மை. டவலப்பர்களுக்கு மிக்க நன்றி. இந்த ப்ளாகிற்கு பிறகு தமிழிலேயே முழுமையாக எழுதினால் என்ன என்று தோன்றுகிறது!
முழுதும் படிக்க..