Mar 25, 2010

முதல் வேலை

இந்த பதிவை யூத்ஃபுல் விகடனில் காண..




முதன் முதலில் வேலை கிடைத்த வேளையும், அந்த சூழலும் உங்களுக்கு ஞாபகம் உள்ளதா.? வேலை கிடைத்த செய்தியை சொன்னது யார்? ஆணா? பெண்ணா? கம்பெனி காரரா.? இல்லை உறவினரா? எப்படி இருந்தாலும் அந்த சம்பவம் அத்தனை சீக்கிரம் மறக்க கூடியது இல்லை. எனக்கு வேலை கிடைத்த அனுபவத்தை கொஞ்சம் கொஞ்சம் சொல்கிறேன். 2 நாட்களாக நடந்த அந்த காம்பஸ் இன்டர்வ்யூ கதையை சொல்லப்போவதில்லை. மாறாக கிளைமாக்ஸில் இருந்து..

எல்லாம் முடிந்து, உள்ளே கம்பெனி ஆட்கள் தீவிரமாக விவாதிக்கிறார்கள். வெளியில் படப்படப்புடன் நாங்கள்.. இரவு 9 மணி வாக்கில் நேர்காணல் எல்லாம் முடிந்து விட்டது.. வெளியே வந்து ஒன்றும் அறிவிக்க மாட்டேங்கிறார்கள்.. பெரும் மௌனத்தில் நாங்கள்.. நாங்கள் என்றால் எங்கள் குழு.. அந்த நேரத்திலும் எப்பொழுதும் 'காமெடி' பண்ணும் 'மச்சி' அங்கு வந்து விட்டார். சத்தம் போட்டு அவர் இடைவெளியின்றி சொல்லும் காமெடிகளை (இந்த நேரத்திலுமா?) எங்களால் சிறிதும் பொறுக்க முடியவில்லை. டக்கென்று இடம் மாறினோம்.. மனம் தளராத மச்சி அங்கும் ஆஜரானார். தலை தெறித்து கடைசியில் ஒரு நடமாட்டம் இல்லாத இடத்திற்கு வந்தோம்.

திடீர் என்று அதிக அமைதி.. சத்தம் தான் காட்டி கொடுக்க வேண்டும் என்பது இல்லை. அந்த அபிரிமிதமான அமைதி எல்லாரையும் உஷார் படுத்தியது.. சல புல என்று அந்த கட்டிடத்தை நோக்கி நகர்ந்தோம்.. பேச்சு அதிகமானது.. சலசலப்பாக இருந்த கூட்டம் திரும்பி மயான அமைதி ஆகிறது (மணி இரவு 12). அத்தனை காதுகளும், அங்கு திடீர் என்று தோன்றி, கையில் காகிதத்தை வைத்து இருந்த, அதை பார்த்து படித்தவரின் ஒவ்வொரு வார்த்தையையும் உன்னிப்பாக கேட்கிறது (அந்த 4 வருடங்களில், அனைத்து மாணவர்களாலும் அவ்வளவு கூர்ந்து கவனிக்கப்பட்ட ஒரு (ஒரே?) பேச்சு என்று அதை சொல்லலாம்). அவர் ஆரம்பிக்கிறார்..

மன்னிக்கவும்.. சிறிது தாமதமாகி விட்டது (அதான் தெரியுமே.. மேல..)
நிறைய க்ரைடீரியாவை அலசி இந்த முடிவுக்கு வந்துள்ளோம் (சரி..)
இனியும் உங்களை காக்க வைக்க விறும்பவில்லை (அப்பாடி) என்று செலெக்ட் ஆனவர்களை ஒவ்வொரு பேராக படிக்க ஆரம்பித்தார். அது வரை காத்து காத்து குளிர்ந்து போய் இருந்த இதயம் திரும்பி சூடு பிடித்து ஓட ஆரம்பித்தது..

அகிலா, அருண், அவினாஷ்.., ஆ, ஆல்பபெடிகல் ஆர்டர் (அதில் என்ன ஆ? அது எல்லாம் தெரியாது.. அப்போது அங்கு உணர்ந்த/நடந்த எல்லாமே பிரமிப்பு தான்).. பெயர்களை காது வாங்கினாலும் மனசு வாங்க வில்லை. பக் பக் அதிகமானது.. பாண்டி.. ஓ, வந்து விட்டது.. பிரசன்னா.. சொல்லி விட்டு அடுத்ததுக்கு போய் விட்டார். என்ன என் பெயரை சொன்னாரா? இல்லையா..? அடாடா, சொன்ன மாதிரியும் இருந்தது.. இல்லை பிரமையா? யாரிடமும் கேட்க முடியாது. ஓங்கி குத்தி விடுவார்கள் பெயர் பட்டியலை கவனிப்பவர்கள்.. ஒரு இக்கட்டான சூழல் நிலவியது. அடுத்து வந்த எந்த பெயரும் சுத்தமாக கேட்க வில்லை. ஒரு வழியாக முடித்தவர் மேல் அனைவரும் பாய்ந்தோம் (எல்லார்க்கும் அப்படித்தான் இருந்திருக்கும் போல).

ஓ.கே ஓ.கே.. லெட்ஸ் பேஸ்ட் தீ ஷீட் ஹியர்.. அவர் தப்பித்து கொள்ள, உடனடியாக xerox எடுக்கப்பட்டு ஒட்டப்பட்டது. என் பெயர்.. என் பெயர்..
காகிதத்தில் என் பெயரை பார்ததும்.. ஆஹா.. பட்ட கஷ்டங்களுக்கு எல்லாம் விடிவு வந்து விட்டது என்று தான் தோன்றியது (நான் ஒன்றும் கஷ்டப்பட்டு எல்லாம் படிக்க வில்லை. என் வீட்டில் என்னை படிக்க வைத்ததை சொல்கிறேன்). அதில் என் பெயர் சிறிது அழகாக கூட இருக்கிறது (சே.. என்ன இது..).

எனக்கு தெரிந்த எல்லார் இடத்திலும் போய் சொல்ல வேண்டும் போல் இருந்தது. யாருக்கு போன் போடலாம்? வீட்டிற்கு தான்.. அடுத்து பெரியப்பாவிடம் சொல்ல வேண்டும்.. ரொம்ப சந்தோஷப்படுவார்.. வீட்டில் முழித்து இருப்பார்களா? இந்த மாதிரி பெரிய விஷயங்களை முன்னாடியே சொல்லுவதில்லை. ரொம்ப 'டென்சன்' ஆகி விடுவார்கள். இருந்தும் அரசல் புரசலாக சொல்லித்தான் வைத்து இருந்தேன்.

ட்ரிங்க்க்க்.. ட்ரிங்க்க்க்.. கட் பண்ணி விடலாமா?

ஹலோ? - அம்மா தான்.. குரலில் மறைக்கப்பார்க்கும் ஒரு எதிர்பார்ப்பு.. சொல்லி விடலாமா? இல்லை ஆட்டம் காட்டலாமா?

'மா, எனக்கு வேலை கிடைச்சிருச்சு..' சொல்லி விட்டேன்.. பக்கத்தில் மரங்களில் இருந்து வந்ததா.. மெலிதாக வருடிச்சென்றது காற்று.. இல்லை நிம்மதி பெருமூச்சாலா..? பெரும் பாரத்தை இறக்கி வைத்த நிம்மதி. அவர்கள் எவ்வளவு சந்தோசமாக இருப்பார்கள்? பார்க்க விரும்பவில்லை.

இவ்வளவும் நடந்து கொண்டிருக்கும் போதே ஒரு பெருத்த அழுத்தமோ, ஏதோ.. ஒன்று போட்டு அழுத்திக்கொண்டே இருந்தது.. ஆம்.. ஆம்.. என் நெருங்கிய வட்டாரத்தில் ஒரிருவர் தவிர அந்த பட்டியலில் யார் பெயரும் இல்லை. வேலை கிடைத்த பிரமிப்பு சட்டென்று கொஞ்ச நேரத்திலேயே அடங்கியது.. சந்தோசமும் துக்கமும் அடுத்தடுத்து பார்த்த பட்டியலில், எப்போதும் அந்த நிகழ்ச்சிக்கு முதலிடம் உண்டு.

அடுத்து வந்த கம்பெனிகளில் முயன்று, ஒவ்வொருத்தராக வேலை வாங்கி, எல்லாரும் இன்று நல்ல வேலையில்/தொழிலில் இருக்கிறார்கள் (வேலை தேடியவர்களை மட்டும் சொல்கிறேன்.. கொஞ்சம் பேர் மேலே படித்தனர்.. கொஞ்சம் பேர் தான்). நான் மட்டும் அந்த கம்பெனியில் இடம் கிடைக்கவில்லை என்றால், எனக்கு இருந்த 'கான்பிடன்ஸிற்கு', கண்டிப்பாக அந்த வருத்ததிலேயே மத்ததையும் விட்டிருப்பேன். ஆனால், அப்படி கிடைக்கவில்லை என்றால், எப்படி நடந்து கொண்டிருக்க வேண்டும் என்று என் நண்பர்கள் சொல்லி கொடுத்து விட்டார்கள்.. நம்பிக்கையை இழக்காமல், அடுத்ததில் முழு கவனம் செலுத்தணும்... அது எத்தனையாவது முயற்சியாக இருந்தாலும் சரி.

5 comments:

ராஜ நடராஜன் said...

கடைசி இடுகையில் கூட்டம் அதிகமா இருக்கறதால இங்கே துண்டு போட்டுக்கிறேன!

எனக்கு கூட்டம் குறைவா இருக்கற கடைன்னா ரொம்ப பிடிக்கும்.உண்மையா:)

Prasanna said...

@ராஜ நடராஜன,
:))
அதுவும் நல்லது தான்.. இந்த மாதிரி கடைகளுக்கும் அப்பப்ப கஸ்டமர்கள் வந்தால் நலம் தானே:)
வருகைக்கும், கருத்திற்கும் நன்றி!

Prasanna said...

அதற்காக கூட்டம் அதிகமானால் வருவதை நிறுத்தி விட கூடாது.. தொடர்ந்து வரணுமாக்கும் :)

சுரேந்திரா said...

சத்தியமா சொல்றேன்.. எனக்கு கேம்பஸ்ல வேலை கெடச்சப்போ, எனக்கு என்னென்ன உணர்வுகள் இருந்துச்சோ, உங்க எழுத்துக்கள் அதை அப்படியே (அப்படியே!) பிரதிபலிக்குது.. வாழ்த்துக்கள் ப்ரசன்னா.. இன்னும் நிறைய எழுதுங்க!

Prasanna said...

@ சுரேந்திரா,
ரொம்ப மகிழ்ந்தேன் :)