Nov 29, 2010

ஒரு என்சிசி மாணவனின் கதை

ஒழுங்கு, ஒழுங்கு. இது தான் தேசிய மாணவர் படை என்னும் என்சிசி (NCC). எல்லா பயல்களையும் போலவே எனக்கும் சிறுவயது முதலே ராணுவம், துப்பாக்கி, camouflage உடை, பச்சை ஜீப், தொப்பி (இது முக்கியம்) இதுங்க மீது ஒரு ஈர்ப்பு. முதல் நாளே கல்லூரியில் பெயர் கொடுத்து ஆர்வத்துடன் சேர்ந்தாயிற்று ('நேர்முகத்தில் இதுக்கெல்லாம் வெயிட் அதிகம்').

கல்லூரியின் அந்த முதல் வார சனிக்கிழமை 'துள்ளுவதோ இளமை' புகழ் செல்வராகவன் எடுத்த காதல் கொண்டேன் படத்திற்கு போயிருக்கலாம். போகவில்லை. திடும் திடும் என்று எல்லா விடுதி அறைகளில் இருந்தும் மாணவர்கள் வெளியேற்றப்பட்டு விடுதி முன் வரிசையாக நிற்க வைக்கப்படுகின்றனர். ஒரு 45 வயது சொல்லத்தக்க கண்ணாடி போட்டவர் முன்னாடி நின்று கொண்டு 'நீங்கள் எல்லாரும் இன்று முதல் என்சிசி மாணவர்கள்.. என்ன'? என்று கர்ஜிக்கிறார். நாங்கள் எங்களுக்குள் சாதக பாதகங்களை விவாதிக்கிறோம். சுற்றி நிற்கும் சீனியர்கள் ஸ்தம்பிக்கிறார்கள். ஏன்?
கேள்வி கேட்டாலே 'எஸ் சார்' (அல்லது நோ சார், சூழலுக்கேற்ப) ஒரே குரலில் கத்த வேண்டும். பக்கத்தில் எல்லாம் பேசக்கூடாது. சொன்னால் தானே தெரியும்?. கேள்விக்கெல்லாம் இடமில்லை. ஒழுக்கம், தவறினால் தண்டனை. அது பிரச்சினை இல்லை. எது ஒழுக்கம் என்பதில் தான் அன்றும், அடுத்த 3 வருடங்களும் பிரச்சினையாக இருந்தது.

                                            
இப்படி கும்பலாக ஆள் எடுக்கிறார்களே என்று ஏமாற கூடாது. அதில் நன்றாக ட்ரில் செய்பவர்கள் மட்டுமே செலக்ட் செய்யப்படுவர். எல்லாரும் வலது காலை தரையில் அடிக்கும்போது ஈடுபாட்டுடன் இடது காலை வைப்பவர்களும், காலை அகலமாக விரிப்பவர்களும், முன் பின் கைகள் மீது இடிப்பவர்களும் என்று தனியாக தெரிபவர்கள் எல்லாரும் கொத்து கொத்தாக வெளியேற்றப்பட்டனர். நான் எப்படியோ தப்பிவிட்டேன் அல்லது மாட்டிக்கொண்டேன். போனவர்கள் சிரித்துக்கொண்டே NSS அமைப்பில் சேர்ந்து விட்டார்கள். பெண்களுடன் சேர்ந்து சேவை செய்யலாம்.

பல வாரம் 'காலங்காத்தால' ட்ரில். எட்டரை மணிக்கு எழுந்து கல்லூரிக்கு போவதே பெருசு. இதில் சனிக்கிழமையும் எழுந்திரிக்கனும் என்றால்? அதிலும் 'கேம்ப்', முக்கிய தேசிய நாட்கள் என்று வந்துவிட்டால் தினம் நடக்கும் (On Duty என்று அட்டெண்டன்ஸ் வாங்கிக்கொள்ளலாம்). அந்த ட்ரில்களுக்கு லேட்டாக போனால் ஓட விடுவார்கள். அந்த ஓட விடுவதில் கடைசியாக வந்தால் மறுபடி ஓட விடுவார்கள். பேசி வைத்துக்கொண்டு நேர்கோட்டில் வந்து சேர்ந்தாலும், 'ஏமாத்துறீங்களா' என்று மறுபடி ஓட விடுவார்கள். இதெல்லாம் கல்லூரியில். நமது சீனியர்தான் ஆபிசராக இருப்பார். அதனால் கொஞ்சமாச்சும் ஆசுவாசமாக இருக்கலாம். கல்லூரியின் தெருக்களில் எங்கள் 'புள்ளைங்க' (பெண்கள்) போகும் போது அந்த பக்கம் திரும்புமாறு கட்டளைகள் வரும் (பாயேன் சல்யூட்). நாங்களும் லெப்ட் ரைட் பண்ணும்போதே 'சைட்' அடித்துக்கொள்ளலாம். ஒழுக்கமான 'சைட்'. இப்படி சில சலுகைகள் உண்டு.

துப்பாக்கி சுடுவதற்கு ஏற்காடு அடிவாரத்துக்கு கூட்டிக்கொண்டு போவார்கள். குண்டுகளை எண்ணி கொடுத்து துப்பாக்கி இலக்கை விட்டு கொஞ்சம் திரும்பினாலும், ஜாம் ஆனாலும் அடி பின்னி விடுவார்கள். சத்தம் காதை பிளக்கும். சினிமாவில் வருவது போல அத்தனை சுலபம் அல்ல சுடுவது. நானும் விசயகாந்த்தை போல பயங்கரமாக சுட்டேன். அத்தனை குண்டுகளும் இலக்கில்! ஆனால் பக்கத்து இலக்கில். முதல்லையே சொல்றதில்ல?

கேம்ப் என்று ஒன்று உண்டு. எல்லா கல்லூரிகளில் இருந்தும் மாணவர்கள் வந்து ஒரு கல்லூரியில் கூடுவார்கள். அங்கு எல்லாமே ஆர்மி ஆபிசர்ஸ் தான், ஸ்பெஷல் ட்யூடியாக வந்திருப்பார்கள். ரைபிளை தலைக்குமேல் தூக்கிக்கொண்டு ஓட விட்டுக்கொண்டே இருப்பார்கள் (முடித்ததும் கை பிய்ந்து தொங்கும்). சிலர் ரொம்ப ஆர்வமாகவே ஓடுவார்கள். எங்கு போனாலும் சொகுசாக இருக்க நினைக்கும் எனக்குதான் முடியவில்லை. அப்புறம் ஆர்மி பராக்குகளை போலவே செட்டப். செண்டரி என்று சிலர் இரவு பாதுகாப்புக்கு நிற்கவைக்கப்படுவர் (இதற்கு போட்டி நடக்கும், காலை ட்ரில்லுக்கு வர வேண்டாம்).

                                             
மாலை ஆனதும் கேளிக்கைகள். மாணவர்கள் தங்கள் திறமைகளை காட்டலாம் (ரகுவரன் போல மிமிக்ரி செய்கிறேன் என்று இருமுபவர்களுக்கு தண்டனை இல்லை). இது ஒன்றே கொஞ்சம் ஆசுவாசமாக இருந்தது. நாங்களும் போட்டோம் ஒரு டிராமா (வேற என்ன, ராமாயணத்தை உல்டா பண்ணி சினிமா பாட்டு கலந்து போடுவோமே. என்ன செய்ய கற்பனை வறட்சி). அந்த நேரத்தில் சிரிக்கும் அதிகாரிகளுக்கு எங்கு இருந்துதான் வருமோ அவ்வளவு கோபம் பீல்டில் இருக்கும்போது மட்டும். ஒரே திட்டு தண்டனை. ஜாலி மூடில் ஒரு ஆபிசர் சொன்னார், "ஆர்மி ட்ரைனிங் நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு கடினம். காலை தரையில் மிதித்து மிதித்தே பலர் இப்படி இறுகிப்போய் விட்டோம்". நான் மட்டும் ராணுவ மந்திரி ஆனால்.. எல்லாவற்றையும் கொஞ்சம் ஜாலியாக்கிவிடுவேன் என்று சொல்லவில்லை, நினைத்து கொண்டேன்.

சின்ன சின்ன விசயங்களுக்கு கொடுக்கப்படும் தண்டனைகளை, அந்த கொடுமைகள் என்று எல்லாத்தையும் எழுதினால் தொடரும் தான் போட வேண்டும். ஆனால், எவ்வளவு சொன்னாலும் அந்த காக்கி யூனிபார்ம் போட்டுக்கொண்டு நடக்கும் போது ஒரு பெருமை வருமே, அடாடா இப்போ நினைத்தாலும் grass itching.

14 comments:

வார்த்தை said...

// அத்தனை குண்டுகளும் இலக்கில்! ஆனால் பக்கத்து இலக்கில். //

same blood :)

//grass itching//
:)

சிநேகிதன் அக்பர் said...

அருமையான பகிர்வு. எனக்கும் சேர ஆசை இருந்தது. படிப்பு கெட்டுடும்ன்னு கூட இருந்தவங்க சொல்லி தடுத்துட்டாங்க.

Anonymous said...

இதுக்குத் தான், நானெல்லாம் சேரவே இல்ல ;)

பாலா said...

நம்ம பாடி அப்பவே பீடி மாதிரி இருந்ததானால எங்க வீட்டுல சேரக்கூடாதுண்ணு சொல்லிட்டாங்க. அப்புறம் என் நண்பர்கள் பலர் அடி உதை வாங்குரத பார்த்ததும் அப்பாடா தப்பித்தோம் என்று நினைத்திருக்கிறேன்.

எஸ்.கே said...

நண்பர்கள் சிலர் இதில் சேர விரும்புவதில்லை காரணம் நீங்கள் சொல்வது போல் தண்டனையும் ஒன்று!
ஆனால் அந்த உடையில் கம்பீரமாக நடந்து வருவதை பார்த்தால் நமக்கே ஒரு வீரம் எழும்!

ஹேமா said...

பிரசன்னா...இங்கு கண்டிப்பாக எல்லோருக்கும் இராணுவப் பயிற்சி இருக்கிறது !

Chitra said...

எவ்வளவு சொன்னாலும் அந்த காக்கி யூனிபார்ம் போட்டுக்கொண்டு நடக்கும் போது ஒரு பெருமை வருமே, அடாடா இப்போ நினைத்தாலும் grass itching.

...எங்களுக்கும் grass itch ஆக வச்சுட்டீங்க.... :-)

Prasanna said...

@ வார்த்தை,
We will make a good 'company' ஹிஹி.. தொடர்ந்து வாருங்கள் நன்றி :)


@ சிநேகிதன் அக்பர்,
ஹ்ம்ம் ஏன் கூட அப்படி நல்வழிபடுத்த யாரும் இல்லை :)


@ Balaji saravana,
ரொம்ப வெகுளியா இருந்துட்டோமோ ;)


@ பாலா,
அட நானும் அப்படித்தான் இருந்தேன் :) அடி வாங்கறத பாக்காம போய் விழுந்துட்டேன்

Prasanna said...

@ எஸ்.கே,
எனக்கு கூட.. இன்னும் ஆர்மி ஆபிசர்சை பார்த்தாலே ஒரு தைரியம் வரும் :)


@ ஹேமா,
ஓ நடுநிலையா இருக்க கூட பெரிய ராணுவம் தேவபடுதா :)


@ Chitra,
எனக்கும் புல்லா அரிச்சி போச்சு :)

ALHABSHIEST said...

என்ன சொன்னாலும் கல்லூரியில் மூன்று வருடம் தேசிய மாணவர் படையில் இடம் பெற்ற மாணவர்கள் எல்லோரும் நிச்சயம் பெருமை பட்டுக் கொள்ளவே செய்வார்கள்.குறிப்பாய் அந்த பத்து நாட்கள் நடத்தப் படும் சிறப்பு முகாம்கள். அது ராணுவம் சாராத துறையினருக்கு கிடைக்காத வாய்ப்பு.காலையில் எழுந்து நமது வேலைகளை நாமே முடித்து காலை பயிற்சிகள்,பின்பு வகுப்பறையில் நடப்பது போன்ற பாடங்கள்,மாலையில் சுற்றுப்புறத்தினை தூய்மை படுத்துதல்,பின்பு கலைநிகழ்ச்சிகள்,அப்புறம் தங்கியிருக்கும் இடத்தினை சுற்றிலும் காவல்.இடையில் ஒருநாள் நடை பயணம் என்று எல்லாமே பயனுள்ள, கட்டாயம் செய்தே ஆக வேண்டிய பயிற்சிகள்.அது போன்று இப்போதும் நமக்கு தேவையானதை நாமே செய்து கொள்ளப் பழகினால் அன்றாடம் நாம் சந்திக்கும் எத்தனையோ சிரமங்கள் ஓடி விடும்.அது காதலை போன்று,கல்லூரி வாழ்க்கையை போன்று வாழ்ந்து அனுபவிக்க வேண்டிய ஒன்று.கொத்து பரோட்டா இப்படி ஒரு பின்னூட்டத்தை எதிர்பார்த்திருக்க மாட்டார் என நினைக்கிறேன்.

Unknown said...

அப்போ நீங்களும் OTA training எடுத்து இருக்கீங்களா நண்பரே.

ஏன்னா நான் ஒரு செத்துப்பொழைச்சவன்...........

ஹரிஸ் Harish said...

நல்ல வேளை நான் என்.சி.சி ல சேரல..

Prasanna said...

@ Siva,
முதலில் நீண்ட பின்னூட்டதிற்கு மிக்க நன்றி.. இந்த பத்தியின் நோக்கமே அந்த கடைசி வரிதான் :) ஆதலால் நீங்கள் சொல்வதில் முழுவதும் எனக்கு உடன்பாடே! அதற்கு முன் குறிப்பிட்டவை எல்லாமே என் கொழுப்பின் காரணமாக எழுதியவை என கொள்ளலாம் (எனக்கு கட்டுப்பாடுகளே பிடிக்காது) :)

Prasanna said...

@ விக்கி உலகம்,
ஆ நான் அந்த அளவுக்கு எல்லாம் போகல.. அது வெறும் NIC தான்.. நீங்க பெரிய ஆளா இருந்திருப்பீங்க போல :)


@ Tamilulagam, நன்றி!


@ ஹரிஸ்,
ச்ச ச்ச என் பேச்ச கேட்டுட்டு எல்லாம் இப்படி முடிவுக்கு வராதீங்க.. Basically ஐ அம் அ சோம்பேறி :)