ஒரு பாடல். இரு வேறு சூழல்கள். இரண்டு விதமான உணர்ச்சிகளை தருகிறதே? அதை விட, சூழலை பொறுத்து ஒரு பாடல் பிடித்தோ பிடிக்காமலோ கூட போய் விடுகிறது. சின்ன வயதில் (இப்போவும் தான் யூத், நான் சொல்வது குழந்தையில்..), 'சுந்தரி நீயும்.. சுந்தரன் ஞானும்' பாடல், நாங்கள் இருந்த 'லைன்' வீட்டில், பக்கத்து வீட்டின் ஒரு சிகப்பு கலர் டேப் ரெக்கார்டரில் தினம் சாயந்திரம் ஓடும். அந்த வேளை தான் பொடிசுகளுக்கு வீட்டு பாடம் எழுதி, படிக்கும் நேரம். அடுத்தநாள் வகுப்பில் என்ன நடக்குமோ, டெஸ்ட் வைப்பார்களா என்று ஒரே பீதியான பொழுதுகள். துரதிர்ஷ்டவசமாக, அந்த பீதி, சுந்தரி நீயும் பாடலில் வந்து ஒட்டிக்கொண்டது. இன்று அந்த பாடலை கேட்டாலும், இனம் புரியாத பீதி, கருமை என்று ஒரு மாதிரிதான் இருக்கு.