Jan 25, 2012

ஒரு மனிதன், ஒரு வீடு, ஒரு உலகம்


படிக்கும் புத்தகங்களை பற்றி இனி பதிவு போடலாம் என்று ஒரு எண்ணம்.. என்னுடைய வாசிப்பு இலக்கு - தமிழ் பிதாமகர்களின் புத்தகங்கள்.  நடு நடுவே  சமகால இலக்கியங்கள் (மானே தேனே பொன்மானே)

முதலில் ஒரு மனிதன், ஒரு வீடு, ஒரு உலகம். ஜெயகாந்தன் (மீனாட்சி புத்தக நிலையம்). புத்தகத்தில் எனக்கு பிடித்த அம்சங்கள்..

ஆனந்த விகடனில் தொடர்கதையாக எழுபதுகளில் வந்தது. ஆனால் அவரே முன்னுரையில் சொல்வது போல் காலங்களுக்குள் அடைக்க முடியாதுதான்..

மனித எண்ணங்களை அப்படியே குடைந்தெடுத்து, விலாவாரியாக காட்டுவது எனக்கு பிடித்திருந்தது. பல இடங்களில் சிம்பிளாக ஒரு வரி வரும், அது எதற்கு அந்த இடத்தில் என்று யோசித்தால் நிறைய தரிசனங்கள் உண்டு..

கதையில் (வாழ்க்கையில்?) அனைவருக்கும் ஏதாவது 'கெட்ட பழக்கம்' இருந்தாலும், அனைவரும் நல்லவர்கள் அல்லது அப்படி பார்க்கப்பட வேண்டியவர்கள். Nothing is black or white (எதையுமே/யாரையுமே நல்லது-கெட்டது என்று வகைப்படுத்த முடியாது) என்று என் பெரியப்பா ஒரு முறை சொன்னார். அது எவ்வளவு பெரிய வார்த்தை என்பதும், அது அவர் அத்தனை வருட வாழ்வில் கண்டறிந்த உண்மை என்பதும் இந்த கதையின் மூலம் புரிகிறது..

எதிலுமே மிகுதியான பற்றற்று, அந்தந்த நொடிகளில் வாழ்வது  என்பது ஒரு லட்சியவாதம்தான். கடினம்தான். ஆனால் அப்படி இருப்பதற்கு இந்த நூல் தூண்டுகிறது, நன்றாகத்தான் இருக்கும் என்று யோசிக்க வைக்கிறது. மேலும் அன்பு/மனிதாபனம் எல்லாம் ரொம்பவே contagious
என்று புரியவைக்கிறது.

இந்த புத்தகத்தை முடித்ததும் அப்படி ஒரு மகிழ்ச்சியும் மனித வாழ்க்கையின் மீது ஒரு பெரும் நம்பிக்கையும் இயல்பாக தோன்றுகிறது. சும்மாவா ஜெயகாந்தனின் எழுத்துக்கள் எல்லாருக்கும் பிடிக்கிறது?
முழுதும் படிக்க..

Dec 30, 2011

நேரம்


'உனக்கு விடுதலை' என்று வார்டன் மைக் சொன்னது சசிக்கு விளங்கவில்லை. இந்த உலகில் இருந்து என்பதை கவித்துவமாக சொல்கிறாரா? 

'புரியலை மைக்'

'எனக்கும் புரியலதான் சசி, இன்னிக்கு உன்னை தூக்கில் போட முடியாது. அதுமில்லாம உனக்கு விடுதலை'

'இது ஏதாவது நான் சோகமாக சாகக்கூடாதென்று விளையாட்டா?'

'நம்பு சசி. உனக்கு டிசம்பர் 30 தூக்கு என்று தீர்ப்பு. ஆனா இன்னிக்கு இங்க செஞ்ச நேர மாற்றத்தில் அந்த தேதியே வரவில்லை. இன்னிக்கு டிசம்பர் 31'.

'விடுதலை எப்படி சாத்தியம்? நான் செத்தாதான் இந்த சமொவா தீவுக்கு சுபிட்சம்னு சொல்றவங்க இதுக்கு ஒப்புக்கொள்ள மாட்டார்களே?'

'நீ விபத்தில் வண்டி ஏற்றி அவர்களை கொன்றதற்கு தூக்கு தேவையில்லைன்னு நம்புகிறவர்களில் நானும் ஒருவன். தூக்கின் பிறகு கைதியை எரிக்கவோ புதைக்கவோதான் இங்கு விதிகள் உண்டு. 'தூக்கின் பிறகு உயிருடன்' இருப்பவருக்கு இல்லை. ஆனால் நீ இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுகிறாய்'

தங்கள் அட்டவணையில் ஒரு நாள் இல்லாதது பற்றியோ, இல்லாத நாளால் வாழ்க்கையே திருப்பிக்கிடைத்த சசி பற்றியோ சமோவா தீவுவாசிகள் யாரும் பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை. என்றும் போல் அன்றும் நேரம் மாறாமல் மாறிக்கொண்டுதானிருந்தது.
முழுதும் படிக்க..

Dec 29, 2011

கொத்து பரோட்டா விருதுகள் - 2011

சிறந்த படம்: எங்கேயும் எப்போதும்


சிறந்த திரைக்கதை/இயக்குனர்: சரவணன் (எங்கேயும் எப்போதும்)

சிறந்த நடிகர்: தனுஷ்

சிறந்த நடிகை: அஞ்சலி, இனியா, ரிச்சா

சிறந்த இசையமைப்பாளர்: ஜிப்ரான் (வாகை சூட வா)

சிறந்த பாடல்: போறானே போறானே(வாகை சூட வா) 

சிறந்த பாடகர்: நரேஷ் ஐயர் (கோ)

சிறந்த பாடகி: நேகா பசின் (போறானே)

சிறந்த ஒளிப்பதிவு: ராம்ஜி

சிறந்த புத்தகம்: நினைவுகள் அழிவதில்லை (நிரஞ்சனா)*

சிறந்த தளம்**: http://amuttu.net

முக்கிய நிகழ்வு: உலகமயமாக்கலின் சரிவு 

சிறந்த மனிதர்: மக்கள்*** 

சிறந்த தொலைகாட்சி: புதிய தலைமுறை

சிறந்த விளையாட்டு நிகழ்வு: இந்தியா வென்ற உலக கோப்பை

சிறந்த முகநூல்காரர்: விஜயலட்சுமி (http://www.facebook.com/vglakshmy)

சிறந்த ட்விட்டர்: அராத்து (@araathu)

சிறந்த தொலைக்காட்சி நிகழ்ச்சி: Big Bang Theory

---------
பி.கு:
இது முற்றிலும் தனி நபர் விருப்பங்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவை. பெருவாரி விருப்பம் கணக்கில் கொள்ளப்படவில்லை. சில தலைப்புகள் விடுபட்டு போயுள்ளன. முடிந்தால் அடுத்த பதிவில்..

*நான் படித்தது இந்த வருடம்தான்
**இந்த வருடம் அதிகம் பதிவுகள் படிக்க முடியவில்லை. படித்தவரைக்கும்..
***தன்னிச்சையான மக்கள் போராட்டங்கள் தெரியப்படுத்தும் கூட்டு சக்தி

முழுதும் படிக்க..

Oct 27, 2011

ஓ குடிகாரர்களே..


நான் குடிக்கிறேன் என்று தாங்கள் குடிப்பதை தொடர்ந்து பறைசாற்றி, குடியைப்பற்றி வித விதமாக தொடர்ந்து பேசி அதன் மீது ஒரு செயற்கையான கவர்ச்சியை உண்டு பண்ணுபவர்களுக்கு என்ன நோக்கம் இருக்கும்? அந்த 'மகிழ்ச்சியை' பகிர்ந்து கொள்கிறார்கள் என்று அதை எடுத்துக்கொள்ள முடியுமா? தான் செய்யும் செயலை ஒரு இயல்பானதாக ஆக்க செய்யும் முயற்சியா? குற்ற உணர்ச்சி அண்டாமல் இருக்க, கூட்டணி சேர்க்கிறார்களா?
அல்லது குடிக்காமல் இருக்கும் சிலரையும் எப்படியாவது குடிக்க வைத்துவிட வேண்டும் என்ற வெறியா? இந்த கடைசி விஷயம் சின்னபிள்ளைதனமான குற்றச்சாட்டாக தெரிந்தாலும், குடிக்கும் பலரிடம் இந்த வெறியை பார்த்திருக்கிறேன். குடிக்காதவர்களை மட்டம் தட்டுவது, அது ஏதோ பெரிய சாதனை போல் பேசி தங்களை cool dudes ஆக காட்டிக்கொள்வது, குடிக்க ஆபர் பண்ணுவது, மறுத்தால் கேவலமாக பேசுவது என்று இவர்கள் விடாமல் பண்ணும் சேட்டைக்கு வேறு ஏதும் காரணம் இருக்குமா?

மேலும் ஒரு தடவை குடித்துவிட்டு நிறுத்தி விடுவேன் என்று ஆரம்பிப்பவர்கள் இதுவரை அப்படி நிறுத்தி பார்த்ததில்லை. அது வாசலிலேயே ட்ராபிக் போலீஸ் நிற்கும் ஒரு ஒன்-வே பாதை.
உடனே இது அசைவம் சாப்பிடுபவர்களை சைவம் சாப்பிடுவார்கள் குறை சொல்வது போல் உள்ளது என்று திசை திருப்ப வேண்டாம். டாக்டர் அசைவம் சாப்பிடலாம் என்று சொல்வார், குடி என்று சொல்வாரா? குடிப்பது அவரவர் விருப்பம் தான், அதில் மாற்று கருத்தில்லை. அதை விளம்பரப்படுத்தி, திணிப்பதில் தான் சங்கடம். இது குடிமகன்கள் பலருக்கு பிடிக்காமல் போகலாம். அடுத்தவரை தொல்லை பண்ணாமல் மொடாக்குடி குடிக்கும் உண்மையான குடிமக்களை இந்த நேரத்தில் நினைவு கூர்ந்து வணங்குகிறேன். குடிக்காத சிறுபான்மியருக்கு இதை சமர்ப்பிக்கிறேன். வாழ்க உங்கள் தன்னடக்கம்! 
பி.கு. புனிதராக உருவெடுக்கவோ, சைடு டிஷ் கேட்டதற்கு, குடிச்சாதான் தருவேன் என்று சொன்னதால் தான் இதை போடுகிறேன் என்றோ யாரும் தவறாக எண்ணக்கூடாது.

முழுதும் படிக்க..

Aug 30, 2011

திருத்தகம்

(இக்கதை திண்ணை இதழில் வந்துள்ளது. திண்ணையில் படிக்க இங்கு செல்லவும் http://puthu.thinnai.com/?p=3594)

                                                                  **********

சண்முகம் முடி திருத்த ஏன் அன்றைய தினத்தை தேர்ந்தெடுத்தார்? அவரே இதை பின்னாட்களில் பலமுறை நினைத்து நொந்து கொண்டதுண்டு. இத்தனைக்கும் அது ஒரு ஞாயிறு. மயிறு திருத்த அனைவரும் படையெடுத்து தள்ளுமுள்ளு ஏற்படுத்தும் நாள். இருந்தாலும் அடிக்கும் வெயிலினாலும், நகக்கண் எல்லாம் கருப்பானதாலும் இதற்க்கு மேல் தள்ளி போட முடியாமல் அந்த ஞாயிறுதான் என முடிவெட்ட முடிவெடுத்தார் திரு சண்முகம்.

அன்று எனப்பார்த்து சில்லரையாக ஐம்பது ருபாய் இல்லாமல் போனது அவர் அப்பா செய்த பாவம் (முடி வெட்ட அவர் செலவு செய்ததே இல்லை). ஒரே ஒரு ஆயிரம் ரூபாய் தாள் மட்டுமே இருக்க, சரி அப்படியே சில்லறை மாத்திய மாதிரியும் ஆயிற்று என்று சமாதானப்படுத்தி அதையே எடுத்துக்கொண்டார். எங்கு போவதென்பது எப்போதும் ஏற்படும் குழப்பம். அந்த ஏ.சி கடையில் கொள்ளை அடிப்பான். வழக்கம் போல இங்கனயே போவோம் என்று 'லோக்கல்'  கடைக்குள் நுழைந்தார். கூட்டம் நிறையவே இருந்தது. தினத்தந்தியை வாசித்தார். 

மேலும் மேலும் வந்து கொண்டே இருந்தனர். முன்பதிவு செய்து விட்டு சென்ற சிலர் நடுவில் புகுந்தனர். தன்னையே நொந்து கொண்டு, தந்தி புகைப்படங்கள் தெளிவில்லாமல் இருப்பதை திட்டியபடியே திரும்பவும் புரட்ட ஆரம்பிக்க, சார் நீங்க வாங்க என்று கடைக்கண் பார்வையை வீசினார் ஆரோக்கியம் (முடி திருத்துபவர்). ஆஹா பரவாயில்லை என்று ஒரு பதைப்புடன் ஓடி போய் ஆரோக்கியம் மனசு மாறுமுன் அமர்ந்து கொண்டார். படபடப்பு அடங்க கொஞ்ச நேரம் ஆனது. வழக்கம் போல் சுமாராக வெட்டி முடித்து, இவர் வேண்டாம் என்று சொல்வதற்குள் மண்டையில் போட்டு கொத்தி சடக் சடக் என்று முகத்தை பிடித்து திருப்பி சொடுக்கு எடுத்து எல்லாம் முடிந்துவிட்டது..

பாக்கெட்டை துழாவி ஆயிரம் ரூபாயை நீட்ட, ஆரோக்கியத்தின் சிவந்த கண்கள் ஒரு நொடி ஒளிர்ந்து அடங்கியது. 'சில்ற இல்லையா?' என்று கேட்டபடியே வாங்கி கொண்டார். கடையில் ஒருவர் தான் பாக்கி. 'சரி, மாத்திட்டு வந்திடறேன்' என்று சொல்லியபடியே பக்கத்து கடைக்கு போனார். அங்கு ஏதோ சொல்ல, அப்படியே கெளம்பி தெரு முனைக்கு சென்று மறைந்தார்.
காத்திருந்து கடுப்பாகி கடைசி ஆளும் பொலம்பிக்கொண்டே போய் விட்டார். அவருக்கென்ன, இன்று இல்லை என்றால் நாளை வெட்டிக்கொள்ளலாம். எனக்கு? இருந்து மீதிப்பணத்தை வாங்கிக்கொண்டே போய் விடுவோம் என்று தோன்றியது. இருட்ட தொடங்கியது. என்னடா இன்னும் காணோம் என்று எரிச்சல் அதிகரிக்க, சரி வீட்டுக்கு போய் குளித்து விட்டு வந்து வாங்கிக்கொள்வோம் என்று வந்து வேக வேகமாக குளித்துவிட்டு திருப்பி கடைக்கு சென்றார். 

கடை மூடி இருந்தது. துணுக்குற்று, சரி நாளை வாங்கிக்கொள்ளலாம் என்று திரும்பினார். அடுத்தநாள் மதியம் வரை கடை மூடி இருந்தது. முதல் முறையாக அவருக்குள் சின்ன கவலை. மாலை கடை திறந்ததும் முதல் ஆளாக நுழைந்தார் சண்முகம். ஆரோக்கியம் இவரை தெரியாத மாதிரி பார்க்க, இவருக்கு பகீர் என்றது. 'என்ன சார் இந்த பக்கம் என்று கேட்டு விடுவானோ'?

'வாங்க சார், என்ன நேத்து நீங்க பாட்டுக்கு போயிட்டீங்க'?
'நான் இங்கதான் இருந்தேன், நீங்கதான் ரொம்ப நேரம் வரல. அப்புறம் நான் போயிட்டு வரதுக்குள்ள கடைய சாத்திட்டீங்க'
'அப்படியா? இல்லீங்களே?'
இவருக்கு 'பணமா, இல்லீங்களே?' என்று கேட்டது. எச்சிலை விழுங்கி, 'சரி மிச்சம் கொடுக்குறீங்களா?' என்றார்.
'என்ன சார், இப்போதான கடை தொறந்தேன். இன்னிக்கு நைட்டு வாங்க, வர காச கொடுத்திடறேன்'.
'இல்ல, எனக்கு வேல இருக்கு, இப்போவே கொடுங்க'
'இப்போ இல்ல சார்' என்று பாக்கெட்டை கொட்டி ஆரோக்கியம் சைகை காட்ட,
'சரி நைட்டு வரேன். மறக்காம எடுத்து வைங்க' என்று நைட்டு டான் என்று போய் நின்றார்.
'ஒன்னும் கலக்சன் ஆகலைங்க, நாளைக்கு வாங்க கண்டிப்பா எடுத்து வைக்கிறேன்'.

இவருக்கு நம்பிக்கை குறைந்து கொண்டே வந்தது. இப்படியே நாளுக்கு நாள் விதவித காரணங்கள் சொல்லி வெறுப்பேத்தினான். ஆயிரம் ரூபாயையும் விட முடியவில்லை. அடுத்து முடி வெட்டும் காலமே வந்து விட்டது. சரி முடி வெட்டியே கழிக்கலாம் என்று அவனிடமே போய் வெட்ட, அவன் வெட்டி முடித்ததும் 'சார் காசு?' என்றான்.
'ஹலோ? நீங்க எனக்கு ஆயிரம் ரூபாய் கொடுக்கணும் மறந்து போச்சா?'
'இல்ல இல்ல, சில்லறை இருக்கானு கேட்டேன்'.

அடுத்து முறை இதே மாதிரி முடி வெட்டி பணம் கழிக்க இவர் போனதும் அவன் எரிச்சலுடன் வெளியில் சென்று வெகு நேரம் வரவில்லை. அடுத்தநாளும் போய் உட்கார்ந்து, அவன் அதே மாதிரி வெளியேறினான். இவர் விடாமல் பின் தொடர்ந்தார். அவன் நேராக டாஸ்மாக் சென்று பாருக்குள் புகுந்தான். இவருக்கு அந்த ஆயிரம் ரூபாய் எந்த கல்லாவுக்கு போயிருக்கும் என புரிந்தது.

அவன் குடும்பத்திற்கு உபயோகப்பட்டிருந்தால் கூட விட்டிருக்கலாம். போயும் போயும் குடிப்பதற்கு செலவாகியிருக்கிறது.. சரி இத விட்றதில்லை, முடி வெட்டி கழித்தே தீர்வது என்று அவனிடமே விடாமல் சென்றார். முடி தனியாக, ஷேவிங் தனியாக, ட்ரிம்மிங் என்று எல்லாத்துக்கும் போனார். ஆயிரம் ரூபாயை எப்போது கழித்து முடிக்க? வாரா வாரம் ஏறும் விலைவாசி நம்பிக்கை கொடுத்தது சீக்கிரம் கழித்துவிடலாம் என்று. இவரைக்கண்டாலே ஆகாதவன் போல் முறைக்க ஆரம்பித்தான் ஆரோக்கியம்.

இந்த காலகட்டத்தில் அவருக்கு பகீர் என்று ஒரு பயம் வந்தது. கழுத்தில் கத்தி இருக்கும் போது, வேண்டுமென்றே லேசாக கீறி விட்டால்? இல்லை முகத்தில் கோடு போட்டால்? இந்த யோசனை மண்டைக்குள் புகுந்த பிறகு அவரால் முடி வெட்டி முடியும் வரை நிம்மதியாக உட்கார முடியவில்லை. ஒவ்வொரு தடவையும் எப்போடா முடியும் என்று இருந்தது.

நாள் ஆக ஆக இந்த பீதி அதிகமாகி, ச்சீ போனால் போகுது. இப்படி பயந்துகிட்டே வெட்டிக்கிட்டு இருக்க முடியாது என்று கடையை மாற்றினார். அப்போதும் விடாமல் கொஞ்ச நாள் கேட்டுதான் பார்த்தார். 'இதோ இந்த ஸ்டூல் ரெண்டை கொண்டு போய்டுவேன் பாத்துக்கோங்க' என்றெல்லாம் வேறு மிரட்டினார். மழலையின் மிரட்டலை லாவகமாக கையாளும் அம்மாவை போல் இவரை சுலபமாக புரந்தள்ளினான் ஆரோக்கியம்.

அதன்பிறகு ஒரு தடவை அவரது அலுவலகத்தில் குடிப்பது தவறா என்ற வாதத்தில், தவறுதான் என்று ரத்தம் கொதிக்க இவர் போட்ட சண்டையை பார்த்து பலர் ஆச்சர்யப்பட்டனர்.

முழுதும் படிக்க..

Mar 21, 2011

வலைப்பூவுக்கு எப்படி பெயர் வைக்க கூடாது?

சில வருடங்களுக்கு முன்..

சில பல வலைப்பூக்களை படித்து கொண்டிருந்துவிட்டு, சரி ஒன்றை ஆரம்பித்து விடுவோம் என்று முடிவு செய்தாயிற்று. ப்ளாகரில் லாகின் பண்ணி படிவ பூர்த்தியின் போது தான் உரைத்தது பெயர் ஒன்றை வைக்கணும் என்று. நாமதான் மெயின் மேட்டரை விட இந்த மாதிரி துணை பிரச்சினைகளுக்கு அதிக நேரம் ஒதுக்குபவராயிற்றே? எந்த பெயர் யோசித்தாலும் (புலம்பல்கள், கிறுக்கல்கள் இத்யாதிகள்) அதில் ஏற்கனவே யாராவது பதிவு செய்திருந்தார்கள். 'பூதம்', 'ரத்தக்காட்டேரி' உட்பட அனைத்தையும் பிடித்து வைத்திருந்தார்கள்.

சரி இப்போ வேண்டாம் என்று மூடி வைத்து விட்டு பெயர் யோசிக்க ஆரம்பித்தேன். அதோடு மறந்தேன். அடுத்த நாளும் படிவ பூர்த்திவரை யோசிக்காமல், அந்த நேரம் மட்டும் யோசித்ததில் ஒன்றும் தோன்றவில்லை.

அந்த நேரம் பார்த்து நண்பன் 'வாங்கடா, முனியாண்டி விலாஸ்கு சாப்பிட போகலாம்'. அந்த பெயரை கேட்டதும் மறுபேச்சில்லாமல் நானும் சுற்றி இருந்தவர்களும் கிளம்பினோம். பேசாமல் அந்த பெயரையே வைத்தால் என்ன? பொறுமை, பொறுமை.. யோசிப்போம்.


எங்களை பார்த்ததுமே மாஸ்டர் கல்லில் கொத்து குத்த ஆரம்பித்தார். கல்லாவில் உட்கார்ந்திருந்தவர் சிநேகமாக சிரித்தார் (நாங்கள் போக ஆரம்பித்த பிறகு அந்த கடையில் நிறைய மாற்றங்கள். டைல்ஸ் ஒட்டி, நெறைய Fan வாங்கி மாட்டி. மொத்தத்தில் சுபிட்சம்).

சூடாக கொத்து வந்தது. 'ஆயிரம் இருந்தாலும் கொத்து கொத்துதான்' என்றான் ஒருவன். தினம் இதை சாப்பிடுகிறோம், அலுக்கவில்லையே? அதுவும் பல வஸ்த்துக்களை போட்டு ஒன்றாக கலந்து, கொத்தி, சுவையாக பரிமாறுவதை பார்த்தால்........  மின்னல் வெட்டு!

திரும்பி ஆபிஸ் வந்து சேரில் உட்கார்ந்ததும் படிவத்தை வேக வேகமாக பூர்த்தி செய்து கொத்து பரோட்டா என்று பெயர் சூட்டினேன் (அந்த பெயரும் புக்ட. அதனால் லிங்க் பெயர் மட்டும் தமிழ் கொத்து).

இதில் இருந்து நான் சொல்ல வருவது என்னவென்றால், புதிதாக வலைப்பூ தொடங்கும் தமிழர்களே தமிழர்களே, வலைப்பூவிற்கு பெயரை கொஞ்சம் யோசித்து வையுங்கள். ஏதோ ஒரு நாள் சாப்பிட்டு பிடித்த உணவு பதார்த்த பெயரை எல்லாம் வைத்தால் பின்னால் வருத்தப்பட வேண்டிவரும்.

முழுதும் படிக்க..

Dec 6, 2010

பாட்டின் பொழுதுகள்


ஒரு பாடல். இரு வேறு சூழல்கள். இரண்டு விதமான உணர்ச்சிகளை தருகிறதே? அதை விட, சூழலை பொறுத்து ஒரு பாடல் பிடித்தோ பிடிக்காமலோ கூட போய் விடுகிறது. சின்ன வயதில் (இப்போவும் தான் யூத், நான் சொல்வது குழந்தையில்..), 'சுந்தரி நீயும்.. சுந்தரன் ஞானும்' பாடல், நாங்கள் இருந்த 'லைன்' வீட்டில், பக்கத்து வீட்டின் ஒரு சிகப்பு கலர் டேப் ரெக்கார்டரில் தினம் சாயந்திரம் ஓடும். அந்த வேளை தான் பொடிசுகளுக்கு வீட்டு பாடம் எழுதி, படிக்கும் நேரம். அடுத்தநாள் வகுப்பில் என்ன நடக்குமோ, டெஸ்ட் வைப்பார்களா என்று ஒரே பீதியான பொழுதுகள். துரதிர்ஷ்டவசமாக, அந்த பீதி, சுந்தரி நீயும் பாடலில் வந்து ஒட்டிக்கொண்டது. இன்று அந்த பாடலை கேட்டாலும், இனம் புரியாத பீதி, கருமை என்று ஒரு மாதிரிதான் இருக்கு.
முழுதும் படிக்க..

Dec 4, 2010

நான் எப்படிப்பட்டவன் (ஐம்பதாவது பதிவு)

திக்கி முக்கி ஐம்பது பதிவு வந்தாச்சு (எனக்கும் ஆசைதான் மாதத்திற்கு 15 பதிவு போடணும்னு.. ஹ்ம்ம் என்ன செய்ய?). ஐம்பதாவதா நம்மள பத்தியே எழுதலாம்னு யோசிச்சப்ப, அன்னு அக்கா பதிவுலகில் நான் எப்படிப்பட்டவன் எழுத அழைச்சாங்க. நல்லதா போச்சுன்னு, இதோ..

1. வலைப்பதிவில் தோன்றும் உங்கள் பெயர்?
Prasanna (பிரசன்னா)

2. அந்தப் பெயர் தான் உங்கள் உண்மையான பெயரா? இல்லை எனில் பதிவில் தோன்றும் பெயரை வைக்க காரணம் என்ன?
உண்மை பெயர்தான். என் பெயரில் ரொம்ப பேர் எழுதவில்லை என்று நினைக்கிறேன். அதனால்..

3. நீங்கள் தமிழ் வலைப்பதிவு உலகில் காலடி எடுத்துவைத்ததைப் பற்றி.
நான் 2008 இல் ஆங்கில வலைப்பூவை தொடங்கினேன் (கொத்து பரோட்டா மாதிரி இல்லை, அதில் நான் பெரிய ஆளாக்கும். போய் பாருங்கள் தெரியும்). அப்போ தமிழில் வலைப்பூக்கள் இருப்பது தெரியாது. எப்படியோ ஏதோ ஒரு லிங்க் கிடைக்க, அதன் மூலம் வினவு பக்கம் வந்து சேர்ந்தேன். அந்த நடை அட்டகாசமாக இருந்தது. அப்புறம் பாலோயர்ஸ் மூலமாக மற்ற வலைப்பூக்களையும் பார்க்க முடிந்து, சென்ற ஆண்டு இறுதியில் (அடடே ஒரு ஆண்டு முடிந்து விட்டது) கொத்து பரோட்டா ஆரம்பித்தேன். ஏன் இப்படி ஒரு பெயர் என்று தனி பதிவு போடுகிறேன் :)

4. உங்கள் வலைப்பதிவை பிரபலமடையச் செய்ய என்னென்னவெல்லாம் செய்தீர்கள்?
கொஞ்சம் படித்தேன். நிறைய ஓட்டும், பின்னூட்டமும் போட்டேன். திரட்டிகளில் இணைத்தேன். வந்த புதிதில் யாரும் வரமாற்றாங்களே என்று நிறைய புலம்பினதுண்டு

5. வலைப்பதிவின் மூலம் உங்கள் சொந்த விஷயத்தை பகிர்ந்து கொண்டதுண்டா? ஆம் என்றால் ஏன்?அதன் விளைவு என்ன? இல்லை என்றால் ஏன்?
அவ்வபோது பகிர்வதுண்டு. நான் அவமானப்பட்டதை 'நண்பன்' பட்டதாகவும், நண்பன் 'காமெடி' பண்ணியதை நான் பண்ணியதாகவும் மாற்றி எழுதிக்கொள்வேன் (அத்தகைய படைப்பு சுதந்திரம் எனக்கு உண்டு ஹீ ஹீ).

6. நீங்கள் பொழுதுபோக்குக்காக பதிவுகளை எழுதுகிறீர்களா அல்லது பதிவுகளின் மூலம் சம்பாதிப்பதற்காகவா?
போழுபோக்குக்காக எழுத ஆரம்பித்து, இப்போ என் பொழுதெல்லாம் போகிறது. ஆமா இதுல துட்டு வருமா ;)

7. நீங்கள் மொத்தம் எத்தனை வலைப்பதிவுகளுக்கு சொந்தக்காரர்? அதில் எத்தனை தமிழ் வலைப்பதிவுகள் உள்ளன?
இரண்டு. ஒண்ணு இது, இன்னொன்னு ஆங்கில வலைப்பூ. என் தமிழ் பதிவுகளை (!)மொழிமாற்றம் (!!) செய்து வெளியிட ஆசை. மொழிபெயர்ப்பு எவ்வளவு கடினம் என்பதை இதில் தெரிந்து கொண்டேன். அது வெறுமனே வரிக்கு வரி மாற்றுவதல்ல. திரும்பி முழு கான்செப்டையும் யோசித்து எழுத வேண்டும்!

8. மற்ற பதிவர்கள் மீது எப்போதாவது உங்களுக்கு கோபம் அல்லது பொறாமை ஏற்பட்டது உண்டா? ஆம் என்றால் யார் அந்த பதிவர்? ஏன்?.
நான் கொஞ்சம் சாப்ட்டான ஆளா? அதனால அடுத்தவங்கள போட்டு மோசமா திட்றவங்க, சண்டை போடறவங்க எல்லாரையும் பாத்தா கோபம் வரும். ஆனா அது நண்பர்கள் மீது கோபம் வருவது போன்றது தான். என் எதிரி கூட நன்றாக இருக்க வேண்டும் என்றுதான் நினைப்பேன் (கேக்குது, உச்சு கொட்றது. பேசிட்டு இருக்கேன்ல? சைலன்ஸ்). பொறாமை, நல்ல எழுத்துக்களை பார்க்கும்போதெல்லாம்..

9. உங்கள் பதிவை பற்றி முதன் முதலில் உங்களை தொடர்புகொண்டு பாராட்டிய மனிதர் யார்? அவரைப் பற்றி, அந்த பாராட்டைப் பற்றி.
முதல் பின்னூட்டம் கடைத்தெரு அவர்கள் போட்டது எனது மூன்றாவது பதிவில். பயங்கர ஹாப்பி பார்த்துவிட்டு. முதலில் தொடர்பு கொண்டு பேசியது என்றால் அண்ணன் ரசிகன் மகேஷ்தான் (அவருக்குதான் என் நம்பர் தெரியும், அதுனால.. இல்லனா நெறைய பேரு போன் பண்ணி இருப்பாங்க).  உலகின் கடைசி மனிதன் என்ற என் அறி-புனை கதையை படித்துவிட்டு ரொம்ப சிறப்பாக இருப்பதாகவும், மேலும் நிறைய எழுத வேண்டும் என்றும் சொன்னார். நம்பவே முடியவில்லை :)

10.கடைசியாக----விருப்பம் இருந்தால் உங்களைப் பற்றி பதிவுலகத்துக்கு தெரிய வேண்டிய அனைத்தையும் பற்றி கூறுங்கள்...
பன்னிரெண்டாம் வகுப்பில் நாந்தான் ஸ்கூல் பர்ஸ்ட் (சரியான பெருமை பீத்தகளையங்கள் என்று திட்டக்கூடாது. என் வாழ்க்கைல பெருமையா சொல்லிக்கற மாதிரி யோசிச்சு யோசிச்சு இது ஒண்ணு தான் தேறுச்சு ஹீ ஹீ)



முழுதும் படிக்க..

Nov 29, 2010

ஒரு என்சிசி மாணவனின் கதை

ஒழுங்கு, ஒழுங்கு. இது தான் தேசிய மாணவர் படை என்னும் என்சிசி (NCC). எல்லா பயல்களையும் போலவே எனக்கும் சிறுவயது முதலே ராணுவம், துப்பாக்கி, camouflage உடை, பச்சை ஜீப், தொப்பி (இது முக்கியம்) இதுங்க மீது ஒரு ஈர்ப்பு. முதல் நாளே கல்லூரியில் பெயர் கொடுத்து ஆர்வத்துடன் சேர்ந்தாயிற்று ('நேர்முகத்தில் இதுக்கெல்லாம் வெயிட் அதிகம்').

கல்லூரியின் அந்த முதல் வார சனிக்கிழமை 'துள்ளுவதோ இளமை' புகழ் செல்வராகவன் எடுத்த காதல் கொண்டேன் படத்திற்கு போயிருக்கலாம். போகவில்லை. திடும் திடும் என்று எல்லா விடுதி அறைகளில் இருந்தும் மாணவர்கள் வெளியேற்றப்பட்டு விடுதி முன் வரிசையாக நிற்க வைக்கப்படுகின்றனர். ஒரு 45 வயது சொல்லத்தக்க கண்ணாடி போட்டவர் முன்னாடி நின்று கொண்டு 'நீங்கள் எல்லாரும் இன்று முதல் என்சிசி மாணவர்கள்.. என்ன'? என்று கர்ஜிக்கிறார். நாங்கள் எங்களுக்குள் சாதக பாதகங்களை விவாதிக்கிறோம். சுற்றி நிற்கும் சீனியர்கள் ஸ்தம்பிக்கிறார்கள். ஏன்?
முழுதும் படிக்க..

Nov 26, 2010

நந்தலாலா - நாவலான கவிதை புத்தகம்

ரொம்ப நாள் கழித்து முதல் நாளே ஒரு திரைப்படத்தை பார்த்தேன். முதல் முறை சுடச்சுட படப்பார்வையும் (இதை விமர்சனம்னு சொல்ல முடியுமா தெரியலை). மிஷ்கின் என்ற பெயர் மீது இருக்கும் ஒரு ஈர்ப்பே காரணம்.

15-20 சிறுகதைகள் கொண்ட ஒரு தொகுதியினை படித்தால் எப்படி இருக்கும்? அப்படி இருந்தது இப்படம் (கவிதையை ரசிப்பவர்களுக்கு கவிதைத்தொகுதி). சிறுவயதில் தொலைத்த தன் தாயை தேடிப்போதல் என்ற ஒற்றை இலக்கில், இச்சிறுகதை தொகுதி நாவலாக உருப்பெறுகிறது!


மனநலம் பாதிக்கப்பட்ட மிஷ்கின் மற்றும் ஒரு சிறுவன் தங்கள் தாயை தேடி போகும் பயணமே படம். எல்லா பயணத் திரைப்படங்களும் போலவே, இதிலும் பயணத்தின் மூலமாக வாழ்க்கையை, அதன் சாராம்சத்தை சொல்கிறார்கள். வழியில் சேட்டை செய்கிறார்கள். அடி வாங்குகிறார்கள். தாய்களை பார்க்கிறார்கள். பலருக்கு தாய் ஆகிறார்கள்.

நாயகர்கள் இருவரையும் எப்படிப்பட்டவர்கள் என்று முதலில் சொல்லி விடுகிறார்கள். அதனால் ஒவ்வொரு சிறுகதையிலும், கணேஷ், வசந்த்தை போல (போலதான். அவர்களே அல்ல) அவர்கள் நமக்கு நன்கு தெரிந்தவர்களே. புதிதாக வரும் பாத்திரங்களை கொண்டு கதைகள் சொல்லப்படுகிறது. நாயகர்களும் தங்கள் இலக்கை நோக்கி நகர்கிறார்கள்!

முதலில் படத்தின் சிறப்பு என்று சொல்ல வேண்டியது காட்சி அமைப்புகள். எல்லாமே புதுசு (மிஷ்கினின் ட்ரேட்மார்க் வைட் ஆங்கிள் மற்றும் கால்களை மட்டும் காட்டும் காமிரா). டயலாக்குகள் ரொம்ப குறைவு, உச்ச காட்சிகளில் கூட. எல்லா டயலாக்குகளையும் காமிராவே பேசுகிறது. எப்படி ஒரு காமெடியன் டயலாக் சொல்லி முடித்ததும் சிரிப்போமா, அப்படி ஒரு காமிரா அசைவிற்கு பிறகு சிரிக்கிறோம்! அழுகிறோம்! அதிர்கிறோம்! இதுவே படத்தை மிக மிக வித்தியாசமாக காட்டுகிறது. அதே போல் வசனம் பேசாமல் செயல்களின் மூலம் ரியாக்ஷன்கள் காட்டுவதும் (மிஷ்கின் ஒரு கயிறால் கட்டப்பட்ட கடிக்க வரும் நாயை போல, மெண்டல் என்று கூறிய சிறுவனை நோக்கி பாயும் காட்சி). படம் முழுக்க குறியீடுகள். அனைத்தும் புரிந்துவிடவில்லை. அதனால் திரும்ப பார்த்தால் வேறு அர்த்தங்கள் கிடைக்ககூடும்.

ஒளிப்பதிவு கொள்ளை அழகு (அந்த மஞ்சள் சலித்த மாலை வேளை!). இசை 'வழக்கம் போல' அருமை! பாடல்களை விட பின்னணி இசை அபாரம். நடிப்பு ஒரு சில இடங்களைத்தவிர அருமை. ஓவென அழும் காட்சிகளை தவித்து இருக்கலாம், காட்சிக்கவிதைகள் படைக்கும் மிஷ்கினிக்கு இது ஒன்று பெரிய விஷயம் இல்லை. நான் இன்னும் கிகுஜிரோ பார்க்கவில்லை. ஆனால் அதை அப்படியே அடிக்கும் அளவிற்கு மிஷ்கின் சுய சிந்தனை இல்லாத ஆள் இல்லை என்று நினைக்கிறேன்.

சிறுகதைகளில், ஒரு சில கதைகள் புரியாது. அதுபோல ஒரு சில காட்சிகள் தோய்வாக செல்லுவது போல தோன்றியது, அது எனக்கு புரியாததால். எனக்கு (நன்றாக இருக்கும்) மெதுவாக போகும் படங்கள் பிடிக்கும், அதனால் தடால் புடால் படங்கள் விரும்புகிறவர்கள் தவிர்க்கவும். மற்றபடி புதுமையான அனுபவம் வேண்டுபவர்கள் நிச்சயம் பார்க்கலாம்! 
முழுதும் படிக்க..