Aug 25, 2014

சக்கரம் - சிறுகதை

தினமலர் நாளிதழுடன் வெளிவந்த சென்னை தின சிறப்பிதழ், அறிவியல் புனை கதைகளின் (Science Fiction) தொகுப்பாக வெளிவந்துள்ளது. உணவு என்பதையே இல்லாமல் ஆக்கிவிட்டால் என்ன ஆகும் என்பது எங்களுக்கு கொடுக்கப்பட்டிருந்த மையம். அதில் வெளிவந்த எனது சிறுகதை.. தினமலர் இ-பக்கத்தில் படங்களுடன் படிக்க இங்கு அழுத்தவும்

***
சக்கரம்

இன்டர்வியூ நேரில்தான் வர வேண்டும் என்று சொல்லிவிட்டார்கள். இது என்ன புது வழக்கம்? மனு குழம்பினான். தொலைபேசி வழியாகவே இணைந்துகொள்கிறேன் என்று சொன்னதற்கு அக்குழுவின் நிர்வாகி என்ன பேச்சு பேசினாள்? நேரில் காண்பதால்தான் அதற்கு நேர்காணல் என்று பெயராம்.. பெண் என்கிற திமிர். ஆனால் இப்போது இருக்கும் குழுவை விட்டு வெளியேறுவதும், புதிய வேலையும் அவனுக்கு அவசியமாக இருந்தது.. வேலை இல்லையென்றால் அத்தனை சுலபமாக வேறு குழுவில் இணைய முடியாது. அதனால் அவளின் கறார் பேச்சுக்கு பொறுமை காட்டினான்.

வாகனப்பயணம் எல்லாம் இப்போது முன்னிலும் கடுமை ஆக்கப்பட்டுவிட்டது. அரசாங்கம், பாதுகாப்பு மற்றும் அத்தியாவசிய காரணங்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது. அதெல்லாம் நாங்கள் பார்த்துக்கொள்கிறோம் என்று அவள், அந்த மேடம், சொல்லிவிட்டதால் முதல்முறையாக மெட்ரோவில் பயணிக்கும் வாய்ப்பு. தனக்கு வரலாற்றின் மேல் ஆர்வம் வர வைத்த மூப்பரிடம் மட்டும் சொல்லிக்கொண்டு குறித்த நாளில் கிளம்பினான். தனது வளர்ப்பு தாய் இறந்த பிறகு இவர்தான் அவனுக்கு எல்லாம்.
"என்னாப்பா ரயில்ல போற அளவுக்கு பெரிய ஆள் ஆகிட்ட? இதைவிட பெரிய இடங்களுக்கு போக வேண்டியவன் நீ.. நல்லாயிரு"

***

ஐநூறு வருடங்கள் பழமையான சென்னை மெட்ரோ. பல் போன பலகை மட்டும் அவனை அன்புடன் வரவேற்றது. பல வித அடித்தல் திருத்தல்களுக்கு பிறகு, இப்போது ஓடும் மிகச்சில வண்டிகளைப் போலவே சூரிய சக்தியில் இயங்குவதாக மாற்றியாகிவிட்டது. பெட்ரோலியம் கிட்டத்தட்ட காலியாகிவிட்டதால் பறக்கும் ஒன்றிரண்டு பிளைட்டுகளையும் கூட சூரிய சக்தியில்தான் இயக்குகிறார்கள். மனிதன் அடைந்த உயரங்களுக்கு சிறு சாட்சியாக ஒரு பூச்சியைப் போல் இன்னும் ஊர்ந்து கொண்டிருக்கிறது மெட்ரோ.

பல கட்ட தடைநீக்கல்களுக்குப் பின், பெட்டிக்குள் கால் வைத்ததும் ஒரு சிலிர்ப்பு. எத்தனையோ கோடி பேரை பல காலமாகச் சுமந்து சென்ற வண்டி. பெரும்பாலும் அரசாங்க ஆட்கள் கடுகடுவென்று உட்கார்ந்திருந்தார்கள். யார் இவன் என சில சந்தேகப்பார்வைகள். பலர் தங்களது சினிமாவில் மூழ்கியிருந்தார்கள். அவர்கள் காற்றில் கைகளை அசைத்து சேனல் மாற்றும்போதெல்லாம் நடனம் ஆடுவது மாதிரி தெரியவே மனுவிற்கு சிரிப்பு வந்தது. வண்டியில் ஏறியவுடனே கை மணிக்கட்டில் உள்ள பட்டனை அழுத்தி சினிமாவை இயக்கும் மற்றவர்களைப் பார்க்க கடுப்பும் வந்தது. அவன் தனது சினிமாவை இயக்கவில்லை, இந்த பயணத்தை முழுக்க முழுக்க அனுபவிக்கவேண்டும் என்பதில் தீர்மானமாக இருந்தான். சினிமா சாதனம் ஒரு காலத்தில் உலகையே இணைத்தது. அன்றாடத் தேவைகள் அனைத்தையும் அது ஒன்றே பூர்த்தி செய்தது. இன்று அதில் சேமிப்பாகியிருக்கும் கேளிக்கைகளை சுகிக்கவும், தொலைபேசவும் மட்டும் சுருங்கி விட்டது. புதிய உற்பத்திகளும் இல்லை, ஓடும் வரை ஓடவேண்டியது.

வெள்ளையாக, பார்ப்பதற்கு அரச மரம் போல தோன்றிய இரண்டு பெண்கள் எதிர் இருக்கையில் ஏறி அமர்ந்து, இவனை பார்வையாலேயே தீண்டி நெளியவைத்தார்கள். 'பீசு சும்மா கிண்ணுனு இருக்குல்ல?' கொல்லென்று செயற்கையாக சிரித்தார்கள். மனு பார்வையை திருப்பாமல், எதிர்வினை காட்டாமல், மூச்சு கூட அடக்கி வைத்திருந்ததும், அவனிடம் ஆர்வமிழந்து தங்களது சினிமாக்களை இயக்கினார்கள். அது அவர்களை சுற்றி திரைகளை எழுப்பவே, சுற்றத்தை மறந்து அதனுள் மூழ்கினார்கள். என்ன பார்க்கிறார்கள் என்பதை அவர்களின் முக அசைவுகளை வைத்து ஊகிக்க முயன்று, பயந்து திரும்பிக்கொண்டான். வேலைக்கு கூப்பிட்டு அனுப்பியவளின் திமிர் பேச்சு அதே அட்டகாசமான குரலில் அவனுடைய மனக்காதில் மறுபடி ஒலித்தது. ஆண் என்றால் ஒரு இளக்காரம். மெட்ரோவை கட்டியவர்கள் பெரும்பாலும் ஆண்கள் தெரியுமா என்று அவளைப் பார்த்து கேட்க வேண்டும்.

மெட்ரோ நகர ஆரம்பித்தது. முதல் ரயில் பயணம்! தனது குழு இருக்கும் குடியிருப்பிலேயே பெரும்பாலான காலத்தை கழித்துவிட்டதால், அக்கம் பக்கத்து சென்னையை பார்த்திருந்தாலும் முழுதாக பார்ப்பது இப்போதுதான். வழியில் பெரும்பாலான கட்டிடங்கள் பெயர்ந்து, காடாக கிடந்தது. சிங்கம், புலி கூட பெருகி விட்டதாக புரளி. இவன் கண்களுக்கு வேகமாக கடக்கும் புதர் காடுகளில் எல்லாம் புலிகளும் பாம்புகளுமாக தோற்ற மயக்கங்கள். நடுநடுவே குடியிருப்புகள் மட்டும் பளிச். கடைசி நிறுத்தம் வந்ததும் இறங்கி ஏற்கனவே சொல்லப்பட்ட வழியில் நடந்து, அவன் இதுவரை பார்த்ததிலேயே பெரிய குடியிருப்பை பிரமித்தபடி அடைந்தான். பார்த்தவுடனே தங்களுடையதை போல் அல்லாமல் அரசாங்கத்துடன் நேரடி தொடர்பில் இருக்கும் இடம் என்பது தெரிந்தது. வேலை கிடைத்தால் நலம்.

***

உள்ளே வந்து அரசு அலுவலகத்துக்கே உரிய பளபள கட்டிடத்தின் முன் நின்று, மேடத்தை அழைத்து, அவர் சொன்னபடி நேராகப் போய் இடப்புறம் திரும்பியதும் அறை. நுழைந்தான். கருப்பாக, கச்சிதமாக அவ்வளவு அழகை இவன் எதிர்பார்க்கவில்லை.. கோபம் கூட ஒரு கணம் மறைந்தது. உள்ளங்கை சில்லிட்டது நேர்காணல் பயத்திலா, அவளை ரசித்த பயத்திலா?

"வணக்கம்"

"ஆ, மனு.. உட்காருங்கள்"

மறுபடியும் அவள் மீது இருந்த காழ்ப்பு தலை தூக்கியது. குழுத்தலைவர் பதவிக்கு வருமளவிற்கு இவளுக்கு வயதாகவில்லை. மூளை கொழுப்பு அதிகமாக இருக்கவேண்டும். குழந்தைகள் பெற்றிருப்பதும் ஒரு காரணம், வயிற்றின் வரிகளும் மார்பு திரட்சியும் காட்டி கொடுத்தது.

"நாம் பேச ஆரம்பிக்குமுன், இங்கு பேசப்படும் எதுவும், நீங்கள் தேர்ந்தெடுக்கப் படுகிறீர்களோ இல்லையோ, வெளியே போகாது எனும் உத்தரவாதம் தேவை. இதில் கையெழுத்திடுங்கள்"

காற்றில் தோன்றும் தொடுதிரையைக் காட்டுவார் என்று நினைத்தால் தட்டச்சு செய்த ஒரு காகிதத்தை நீட்டினார். எஞ்சியிருக்கும் மின்னணு சாதனங்கள் எல்லாம் இன்னும் சில வருடங்களே வரும். புதிய உற்பத்தி என்பது கிட்டத்தட்ட எங்குமே இல்லை. இது இல்லாமல் வேறு காரணங்களுக்காகவும் பல ஆண்டுகளாகவே அரசாங்க சங்கதிகளுக்கு சாதனங்கள், இணையம் போன்றவை உபயோகிப்படுவதில்லை. டைப்ரைட்டர், பேனா என்று கொண்டு வந்துவிட்டார்கள். இதெல்லாம் அவன் அறிந்திருந்ததால் சுதாரித்துக்கொண்டு கையெழுத்திட்டான். டைப்ரைட்டர் எல்லாம் அறுநூறு வருட சமாச்சாரம். கூடவே ஏதோ ரகசிய சங்கதி என்பதை அறிந்ததும் மீண்டும் உள்ளங்கை குளிர்ந்து பேனா வழுக்கியது.

"நீங்கள் இப்போது என்ன செய்கிறீர்கள் என்று சொல்ல முடியுமா?" நேரடியாக ஆரம்பித்தாள்.

"நான் வரலாற்று தரவுகளைச் சேகரிப்பவன். பெரும்பாலான தகவல்கள் இன்று பொது வெளியில் இல்லை என்பதால் தேடி தேடி செய்திகளை, நினைவுகளை சேகரித்து, தகவல்களாக உருவம் கொடுத்து, உபயோகம் உள்ளவர்களுக்கு அந்த தகவல்களை சேவையாக அளிக்கிறேன். பதிலுக்கு வேறு சேவைகளை பெற்றுக்கொள்வேன்"

"பணம் வாங்குவதில்லையா?"

"பணத்தை நான் அறிந்தவரை எங்கள் குழுவில், நாங்கள் தொடர்பில் இருக்கும் குழுக்களில் யாரும் உபயோகிப்பதில்லை"

"தூரமாகப் பயணம் செய்திருக்கிறீர்களா?"

"ரொம்ப தூரம் இல்லை. கடற்கரை, தெற்கே ஒரு சூரியக்கோவில் என்று குதிரைவண்டி கட்டிக்கொண்டு சில தடவை போனதுண்டு"

"குதிரையா?"

"ஆம், இப்போது பல இடங்களில் பயணத்திற்கு அதுதான். நம்மால் வெகு தூரம் நடக்க முடியாதல்லவா?"

"உண்மை. அதைப்பற்றித் தான் முக்கியமாக பேச இருக்கிறேன். இப்போது இருக்கும் நமது உடல்வளர்ச்சி முறை பற்றி என்ன நினைக்கிறாய்?"

சில நொடிகள் யோசித்து, சொல்ல ஆரம்பித்தான்.. "உணவு என்பதையே முற்றாக ஒழித்து, ஸ்டெம் செல் முறையில் திசு மற்றும் உறுப்புகள் தானாகவே வளர்ந்து வேலை செய்ய, மருந்துகள் செலுத்திக்கொள்ளும் வழக்கம் வந்து இது ஏழாவது தலைமுறை. மருத்துவ ஆராய்ச்சிகளின் படி இன்னும் சில நூற்றாண்டுகளில் நமது குடல் நீளம் வெகுவாகக் குறைந்து, மறைந்து கூட விடக்கூடும்...."

"நிறுத்து நிறுத்து.. அந்த முறை எப்படி இயங்குகிறது என்று கேட்கவில்லை. அதைப் பற்றி நீ என்ன நினைக்கிறாய் என்று கேட்டேன்"

"அது வந்து... இந்த முறை நமக்கு ஏற்றதல்ல என்று கருதுகிறேன்"

"ஏன்? இந்த முறையில் என்ன குறையை கண்டாய்? நன்மைகளே இல்லையா?"

"நிச்சயம் நிறைய நன்மைகள் உண்டு.. ஒரே தள்ளில் உலகின் பஞ்சங்கள் விழுந்தன. மனிதனுக்கு ஏராளமான நேரம் கிடைத்து.. தன்னை முன்னேற்றிக்கொள்ள முன்னெப்போதும் இல்லாத வேகத்தில் ஓடினான். எத்தனை கண்டுபிடிப்புகள்? எவ்வளவு மாற்றங்கள்?"

"அவ்வளவுதானா?"

அவள் எதைக் கேட்கிறாள் என்பதை ஊகித்தான்.

"முக்கியமாக பெண்கள் பெரிய அளவில் விடுபட்டுக்கொண்டார்கள். சமூகத்தில் அவர்களின் பங்களிப்பும் வெகுவாக சேரவே மனிதனுக்கு நாலு கால் பாய்ச்சல்.. ஆனால் உணவு ஒழிப்பு  மட்டுமே அவர்களின் இன்றைய தலைமை நிலைக்கு காரணமில்லை என்பது எனது கருத்து"

புருவத்தை உயர்த்தி சற்றே அதட்டும் தொனியில்.. "வேறு என்ன காரணங்கள்?" அவளின் சுழிப்பை பார்த்து ஒரு நிமிடம் எங்கு இருக்கிறோம் என்பதை மறந்து, மயங்கி விழித்து, பின் தயங்கியபடியே தொடர்ந்தான்.

"குழந்தைகள்.. குழந்தைகளை பெற்று எடுக்கும் பெண்களுக்கு பல ஆண்டுகளாகவே பெரும் மரியாதை தோன்ற ஆரம்பித்துவிட்டது. குறிப்பாக உயிர் உண்டாக்கும் திறன் ஆண் பெண் இருவருக்குமே நிறைய குறைய ஆரம்பித்த பிறகு.. இந்திய மக்கள் தொகை இருபது கோடியாகக் குறைந்த பிறகு..."

மக்கள் தொகை கணக்கெல்லாம் இவனுக்கு எப்படித் தெரியும் என்று கேட்க நினைத்து, பின் வாயை மூடிக்கொண்டாள். அவன் தொடர்ந்தான்..

"அது முக்கியக் காரணம்.. மேலும் பாரம்பரிய குடும்ப முறை ஒழிந்த பிறகு குழுக்களின் கூட்டு வாழ்க்கை முறை தோன்றியது.. அதில் கணவன், மனைவி போன்ற மரபான உறவுகள் இல்லாமல், குழந்தைகளை பெற்றெடுப்பதே முக்கியம் என்று ஆனது. பெண்ணை கட்டுப்படுத்தும் சக்திகள் ஒவ்வொன்றாக குறைந்ததால், அவளுக்கு மேலும் அதிக சுதந்திரமும், அதே நேரம் அடுத்தவர் மீது செலுத்தக்கூடிய மிதமிஞ்சிய அதிகாரமும்.." என்று சொல்லிவிட்டு பல்லை கடித்துக்கொண்டான். ஏற்கனவே அதிகமாகப் பேசுகிறோமோ என்கிற நினைப்பு ஓரத்தில் ஓடியபடியே இருக்க, இப்போது கண்டிப்பாக வேலை கிடைக்காது என்று முடிவு செய்தான். அது இதுவரை இல்லாத தைரியத்தை அளித்தது.

நீ என்னை ஈர்த்து விட்டாய் என்பது போல் அவளிடம் ஒரு புன்னகை வெட்டு.. அதை அவன் கவனிக்கவில்லை. அவனுக்கு தற்போதைய குழுவின் தலைவி நினைவுக்கு வந்து, அவளினால் அனுபவிக்கும் கொடுமைகள்.. அங்கிருந்து எப்படியாவது தப்பி வேறு குழுவுக்கு செல்லும் முனைப்புகள்.. ஒரு பெருமூச்சை விட்டான். ஆனால் அவள் அடுத்த கேள்விக்கு போனதும் மீண்டும் ஒரு சின்ன நம்பிக்கை துளிர்த்து, மீண்டும் சின்னதாகப் பயம்..

"இவ்வளவு நன்மைகள் இருக்க ஏன் இந்த வளர்ச்சி முறையை எதிர்க்கிறாய்?"

"உணவில் இருந்து விடுவித்துக்கொண்டதால் கிடைத்த நேரமும், அத்தனை மக்களின் உழைப்பும் பெருநிறுவனங்களின் கட்டற்ற லாப வெறியில் போய் முடிந்தது. கிட்டத்தட்ட அத்தனை கனிமங்களும் இன்று வெட்டி எடுக்கப்பட்டாகி விட்டது. இனி உறிவதற்கு ஏதுமில்லை என்று ஆகி.. ஏற்கனவே இருக்கும் பொருட்களை உருக்கி உருக்கி மறுபடி உபயோகித்து.. இன்று அதுவும் தீர்ந்துபோய்.. ஐநூறு வருடங்களுக்கு முன்பு இருந்த வசதிகள் கூட இன்று நமக்கு இல்லை"

உண்மையில் இது பற்றி எல்லாம் திட்டு திட்டாக, அங்கே இங்கே என்று தான் மக்களுக்குத் தெரியும். இப்போது இருப்பது மாதிரியேதான் எப்போதும் இருந்தது என்று அவர்கள் நினைக்கிறார்கள்.. இவன் இப்படி கோர்வையாக நிறைய ஆராய்ந்து வைத்திருந்தது முழு நம்பிக்கையை ஏற்படுத்தியதும், விஷயத்தை ஆரம்பித்தாள்..

"மனு.. நீங்கள் சொல்வதை பெரும்பாலும் ஏற்றுக்கொள்கிறேன்.. நீங்கள் சொல்லாத மற்றொன்று.. இந்த வளர்ச்சி முறையின் முக்கிய தடுமாற்றங்கள்.. உணவு முறையை ஒழித்து வந்த ஸ்டெம் செல் வளர்ச்சி முறையினால்தான் கரு உருவாக்கும் திறன் குறைந்ததாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.. அது அல்லாமல் மேலும் பல சிக்கல்களும் உண்டு. இந்த முறையில் இயற்கையின் பல கோடி கண்ணிகளில் சில இழைகள் விடுபட்டு போயிருக்கின்றன"

"அடங்கொனியா"

"அதனால் மீண்டும் உணவு முறையைக் கொண்டு வரும் முயற்சிகள் ஆரம்பம் ஆகிவிட்டன"

"என்ன? அது சாத்தியமா?"

"நீங்கள் தான் சாத்தியப்படுத்த வேண்டும்!"

புழுக்கத்தில் வீசும் திடீர் காற்றைப் போல் இருந்தது அவள் சொன்னது. அலை அலையாக, அவர்கள் பேசியது எல்லாம் மறுபடி ஓடி, இந்த உரையாடலின் அர்த்தம் முழுமையும் அவனுக்கு விளங்கியது..

"உங்களின் வரலாற்று அறிவும், தரவுகளைச் சேகரிக்கும் திறமையும் எங்களுக்கு அவசியம். வேறு சில குழுக்கள் ஏற்கனவே இதற்கான முயற்சிகளை ஆரம்பித்துவிட்டன. நார்வேயின் ஸ்வால்பார்ட் விதை சேகரிப்பு மையம் மற்றும் நமது மியூசியங்களில் இருந்து பயிர் விதைகளைக் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.. ஆனால் அதற்கு சில வருடங்கள் ஆகலாம்.. உங்களது வேலை விவசாயம் சம்பந்தப்பட்ட அத்தனை தரவுகளையும் சேகரிப்பது, அதை செயல்படுத்தும் அணியை சரியாக வழிநடத்துவது. அழிந்தது போக மீதமிருக்கும் அரசாங்க தகவல்களுக்கும் உங்களுக்கு அனுமதி வழங்கப்படும்"

ஏதோ ஒரு குமாஸ்தா வேலை என்று நினைத்து வந்த இடத்தில்.. இப்படி ஒரு வாய்ப்பு.. ஆனால் மறுபடியும் உணவை எங்கிருந்து உண்ணத் தொடங்குவது? எதில் தொடங்குவது?

"மேடம்.. விவசாயம் எல்லாம் மறுபடி ஆரம்பித்து செயல்படுத்த பல வருடங்கள் ஆகலாம்.. அதற்கு முன் காட்டுப்பழங்கள், கிழங்குகள்.. போன்றவற்றில் ஆரம்பிக்க வேண்டியிருக்கும்.. பிறகு விலங்குகள்.. விலங்குகளை வேட்டையாடவும் ஆயுதங்கள் தேவைப்படலாம். நாம் ஏற்கனவே உபயோகிக்க ஆரம்பித்திருக்கும் எலும்பை கூட அதற்கு பயன்படுத்திக்கொள்ளலாம்.. நமது குடலை நினைத்தால்தான் பயமாக இருக்கிறது"

"அதற்குள் வேலையை பற்றி யோசிக்க ஆரம்பித்தாகிவிட்டதா?" என்று காகிதங்களில் எதையோ எழுதியபடியே சிரித்தாள்.
அழகும் அறிவும் அரிதாக இணையக்கூடும்.. அவற்றுடன் கூட பண்பும் இணைவது என்பது அதிர்ஷ்டம். அப்படி இணையப்பெற்ற ஒருவரை சுற்றி இருப்பவர்களுக்கு அதிர்ஷ்டம். பழைய கொடுமைக்காரியின் முகம் நினைவுக்கு வந்தது.. அந்த குழு பக்கம் எட்டிக்கூட பார்க்க கூடாது.. புதிய பொறுப்பை நினைத்து நினைத்து மலைப்பாக இருந்தது.

"மறுபடியும் முதலில் இருந்து, குருடன் யானையை உணரும் கதையாய் தடவித்தடவி எல்லாவற்றையும் உருவாக்கப்போகிறோமா மேடம்?"

"இல்லை.. நமக்கும் மூதாதையர்களுக்கும் ஒரு முக்கிய வித்தியாசம் உண்டு. யானை எப்படி இருக்கும் என்பதை ஓரளவிற்கு அறிந்தவர்கள் நாம். ஆகவே மீள் உருவாக்கம் செய்வது சற்றே சுலபம்.. நீங்கள் இன்றில் இருந்தே வேலையை ஆரம்பிக்கலாம். உங்களுக்கு கீழே எட்டு பேர். நீங்கள் என்னிடத்தில் அறிக்கைகள் தர வேண்டும். மணி உங்களுக்கான இருப்பிடத்தை காட்டுவார்" என்று ஒரு மணி அடித்தார். மணி உள்ளே வந்ததும் அறிமுகப்படுத்திக்கொண்டு, கும்பிடு வைத்துவிட்டு அறையை விட்டு வெளியே வரும்போதுதான் நினைவுக்கு வந்தது..

"மேடம்.. உங்கள் பெயர்?"


தலையை குனிந்த படியே சொன்னாள்.. "ஏவாள்"

***

No comments: