Jul 1, 2010

பதிவுலகம் பற்றி திரு. கமல்..

அனைவருக்கும் வணக்கம்! நான் நடிகர் கமல் பேசுகிறேன்.. பதிவுலகை பற்றி கமல் பேசுகிறானா? என்ன தகுதி இருக்கிறது இவனுக்கு என்று முந்திரிக்கொட்டை தனமாக கேள்வி கேட்பவர்களுக்கு.. மக்கள் மனதில் தேவையான கருத்துக்களை பதிப்பவன் என்ற முறையில்.. நானும் ஒரு பதிவர்தான் என்று என்னால் பெருமையாகவே சொல்லிக்கொள்ள முடியும்.

எனக்கு தமிழ் வலையுலகம் மிகப்பிடிக்கும். அதில் வரும் படைப்புகள், வாதங்கள் முதலியவற்றை பார்த்தாலே நாம் எந்த கொம்பனுக்கும் சளைத்தவர்கள் இல்லை என்பது புலனாகும். ஆனால், எனக்கு பிடிக்காத ஒரு அம்சம்.. அடுத்தவர்கள் என்ன எழுத வேண்டும் என்று தீர்மானிக்கும் ஆசை.. அவ்வபோது தலை தூக்கிக்கொள்ளும் அந்த ஆசை...

நீ ஏன் இதைப்பற்றி எழுதவில்லை? நீ அதை ஆதரிக்கிறாயா..
நீ ஏன் இதைப்பற்றி எழுதுகிறாய்? நீ ஒரு சொம்பு தூக்கியா..
இவர்கள் இதை கண்டு கொள்ளவே இல்லையே? பின்னூட்டம் கூட போடவில்லை.. எனக்கு ரத்தம் கொதிக்கிறது..

என்பது போன்ற, அடுத்தவனின் பேனாவை பிடுங்கி தான் எழுதும் இந்த போக்கு, கண்டிக்கத்தக்கது.. 'யாரும் இப்படி சொல்லக்கூடாது என்று நீ சொல்கிறாயே, இது சர்வாதிகாரம் இல்லையா கமல்'? என்று கேட்பவர்களுக்கு.. மற்றவர்கள் என்ன எழுத வேண்டும் என்று ஆணையிடும் உரிமை யாருக்கும் கிடையாது என்று சொல்லும் உரிமை எனக்குண்டு என்றே நம்புகிறேன்..

உன் சுதந்திரம் அடுத்தவனின் மூக்கு நுனிவரை தான் என்பதை புரிந்து கொண்டு, கருத்து சுதந்திரதிற்கு கை கொடுப்போம்.. அந்த சுதந்திரம் அடுத்தவர்களை பாதிக்காமல் பார்த்துக்கொள்வோம். நன்றி.. வணக்கம்!


குறிப்பு: இது என் பக்கத்து தெரு மேடை நாடக நடிகர் திரு. கமல் சக்சேனா சொன்ன கருத்துக்கள் (பொய் சொன்னாலும் பொருந்த சொல்லனும் ஹீ ஹீ) ..
முழுதும் படிக்க..

Jun 29, 2010

Rope (ரோப்) - சிறந்த படம்

ஒரு கொலையை எந்தவித உள்நோக்கமும் (Motive) இல்லாமல், 'கொலை செய்ய வேண்டும்' என்ற ஒரு காரணத்திற்காகவே செய்ய முடியுமா?
ஒரு உயிரை பறிப்பதில்.., உயிரை உருவாக்குவதில் உள்ளதை போலவே அல்லது அதைவிட அதிகமாக அளவுக்கடங்கா கிளர்ச்சி/திருப்தி இருக்குமா?
கொலையை திறம்பட திட்டம் போட்டு செய்தவனுக்கு, அதை யாராவது 'கண்டு பிடித்துத்தான் பார்க்கட்டுமே' என்ற ஒரு ஆசை ஆழ்மனதில் இருக்குமா?


இப்படி தினுசான கேள்விகளையும் இன்னும் சில விஷயங்களையும் ஒரு வீடு, எட்டு பேர் மற்றும் ஒரு பெட்டி - இவற்றைக்கொண்டு அலசுகிறது 1948-இல் வெளிவந்த Rope படம். மொத்தமே ஒன்னேகால் மணி நேரம் தான் படம். ஆரம்பமே கொலைதான். அப்புறம் அதில் என்ன த்ரில்? படம் முழுக்க கொலையாளியின் மன நிலையில் நம்மையும் அந்த பதைப்பை அனுபவிக்க வைப்பதுதான் படத்தின் சிறப்பம்சம் (Mrs. Wilson அந்த பெட்டியை திறக்கப்போகும்போது நமக்கு வருமே ஒரு படப்பிடிப்பு ச்ச படபடப்பு..).


கதைச்சுறுக்கும் வேணுமா? கதையே சுருக்கம் தான் - ரெண்டு பேர் ஒருத்தனை திட்டம் போட்டு கொலை செய்து ஒரு பெட்டியில் போட்டு விடுகிறார்கள். எதற்கு? சும்மாதான்.. பண்ணிவிட்டு, கொல்லப்பட்டவனுக்கு சம்பந்தப்பட்ட ஆட்களை அழைத்து அந்த பெட்டி மீதே உணவுகளை அடுக்கி பார்ட்டி வைக்கிறார்கள். இவர்கள் கடைசியில் மாட்டுகிறார்களா? என்பதுதான் படம் (படம் இதை விட நறுக்குனு இருக்கும்).

கொலையாளி நம் 1 ப்ராண்டன் (ஸ்டூடன்ட் நம்பர் 1 மாதிரி சொல்ற?) படம் முழுக்க கொலைக்கான காரணம் என்று சொல்வது, நீட்ஷேவின் 'சூப்பர்மேன்' தத்துவம். அதாவது, மனித இனத்திலேயே 'மேலானவர்கள்' என்று உள்ளவர்களுக்கு சரி, தவறு என்ற வரையரை எல்லாம் கிடையாது.. அப்புறம், 'கீழானவர்கள்' உயிருடன் இருக்க தகுதி அற்றவர்கள் (ஹிட்லர் ஞாபகம் வரானா..?). மேலும் கொலை என்பது ஒரு கலை (ரைமிங்க் கவனிக்க), அதை சிலரால் தான் சிறப்பாக செய்ய முடியும் என்று நம்புபவன். கொலைக்கு தெரிந்தோ தெரியாமலோ இந்த தத்துவத்தை விளையாட்டாக இவர்களிடம் பள்ளி நாட்களில் பகிர்ந்து கொண்ட ஆசிரியர் ஒரு காரணம் ஆகிறார். அவரும் பார்ட்டிக்கு அழைக்கப்படுகிறார் (படிக்க.. பதிவின் மூன்றாவது வரி).

சரி.. உண்மையிலேயே, 'கொலை செய்ய வேண்டும்' என்ற ஒரு நோக்கத்திற்காக மட்டுமே செய்யப்பட்டதா அந்த கொலை? வேறு மோட்டிவ் இல்லையா? ஒரு வெங்காயமும் கெடையாது.. கொலை செய்யப்பட்டவன் மீது இருக்கும் ஆழ்மன வெறுப்பே கொலைக்கு காரணம் என்று மறைமுகமாக சொல்கிறார் இயக்குனர் (படிக்க.. பதிவின் முதல் வரி). கொலையுண்டவனின் காதலி, ப்ராண்டனின் முன்னாள் காதலி.. அவளை வைத்து சில இடங்களில் அந்த வெறுப்பை வெளிப்படையாக காட்டுகிறான் ப்ராண்டன்.


படத்தின் சிறப்பம்சங்கள் என்ன? ஒன்றா இரண்டா? பட்டியலே இருக்கிறது.. இங்கே சிலது மட்டும்..

பெரிய பெரிய ஷாட்கள் (மொத்தமே ஆறேழு ஷாட்ஸ் தான், ஒவ்வொன்றும் இடையில் கட்டே இல்லாமல்). ஒரே வீடு (அதான் ஏற்கனவே சொல்லிட்டியே).
சீன் ஒன்றொன்றும் மிக அற்புதமாக ஷூட் செய்யப்பட்டு இருக்கும். ஒரு சிலதை சொல்ல வேண்டும் என்றால்..
-எல்லாரும் சாப்பாடு முடித்து டேவிட் எங்கே என்று பேசிக்கொண்டு இருக்கும்போது, கேமிரா அவர்களை கவனிக்காமல், டேவிட் இருக்கும் பெட்டியை போகஸ் செய்து கொண்டு இருக்கும்.. படு டென்ஷனான சீன் அது..
-தைரியம்கரது பயம் இல்லாத மாதிரி நடிப்பது - ப்ராண்டனின் விரல்கள் நடுங்கும் அந்த ஷாம்பெயின் குடிக்கும் காட்சி..
-கொலையாளி நம் 2 அவன் மன நிலையை ப்ரதிபலிப்பதை போல் மெதுவாக, வேகமாக என்று பியானோ வாசிப்பது
-படம் முழுக்க பல குறியீடுகள் (சிறந்த இயக்குனர்களுக்கே உரிய குணாதிசியம் அல்லவா இது)..கொலை செய்வதின் திருப்தியை 'அதனுடன்' (படிக்க.. பதிவின் இரண்டாம் வரி) ஒப்பிட்டு வரும் ஆரம்ப காட்சிகள்.. உதா கொலையை முடித்தவுடன் இப்படி ஒரு வசனம் 'Let's stay this way for a minute'.. அதை தொடர்ந்து ப்ராண்டன் திருப்தியுடன் பிடிக்கும் சிகரட்.

கொலையுண்டவனின் தந்தையாக வரும் செட்ரிக்கின் நடிப்பை பற்றி சொல்லியே ஆக வேண்டும். பிரமாதப்படுத்தி இருப்பார். ஆசிரியராக வரும் (கதாநாயகன்?) James Stewart (Its a beautiful life, The rear window) வழக்கம் போல் அட்டகாசம் + அபாரம் .

அப்புறம், இது உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டது.. சரி, அந்த காலத்திலேயே இப்படி படங்களை எடுத்த ஹிட்ச்காக், இப்போது இருந்திருந்தால், இன்றைய தொழில் நுட்பத்தை வைத்து எப்படி மிரட்டி இருப்பார்? ஆனால், அவர் ஆவி இப்படி சொன்னாலும் சொல்லும் -
'போய்யா, எல்லா வேலையையும் கம்ப்யூட்டரே செஞ்சுட்டா அப்புறம் நான் எதுக்கு?'


குறிப்பு: கொஞ்ச நாட்களாக எனக்குள் தூங்கிக்கொண்டு இருந்த சினிமா மிருகம் திரும்பவும் முழித்துக்கொண்டது.. ஜெய்யின் சில பதிவுகளால்.. ஆகவே இனி அடிக்கடி சினிமா கட்டுரைகளை ரசிகர்கள் ரசித்து மகிழலாம் (ஹேய் யாரு அழுகின தக்காளி எடுக்கறது)..
முழுதும் படிக்க..

Jun 9, 2010

வெள்ளை நிறத்தில் ஒரு பூனை..

அது வீட்டின் சேமிப்பு அறை மற்றும் ஆடைகள் தொங்கவிடப்படும் அறை மற்றும் பூஜை அறை. தீர்ந்து போனால் புது சோப்பு எடுப்பது போன்ற 'காரிய நிமித்தம்', அங்கு எப்போதாவது போவது உண்டு. அன்று அப்படி தற்செயலாக செல்ல, க்ர்ர்ர்ர் என்று உறுமல் சத்தம். குனிந்து பார்த்தால், அங்கு வெள்ளை நிறத்தில் ஒரு பூனை. கீழே வைக்கப்பட்டு இருந்த பாத்திரங்களை அரணாகக்கொண்டு..

அவசரமாக வெளியே வந்து அம்மாவிடம் இதை சொல்ல.. நேற்றில் இருந்தே அது அங்கு இருப்பதாகவும், அதனுடன் இன்னும் ஒரு குட்டியும் இருப்பதாகவும் தகவலறிய முடிந்தது. புரிந்தது, அந்த உறுமலுக்கான காரணம்.

முதல் இரண்டு நாட்கள் தாய் எப்பொழுது வெளியே செல்கிறது? எங்கே சாப்பிடுகிறது? என்பதை அறிய முடியவில்லை. இரண்டு நாட்கள் எங்களின் நடவடிக்கைகளை பார்த்த தாய், 'சரி, இவர்களை நம்பலாம்' என்று ஒருவாறு தயங்கி எங்கள் கண் முன்னே வெளியே சென்றது. அடுத்து பாலை வைத்ததும், அப்படியே ஒட்டிக்கொண்டது. குட்டியை எங்கள் பொறுப்பில் விட்டு விட்டு போகும் அளவிற்கு அதற்கு தைரியம் வந்தது.. அது இல்லாத நேரத்தில் குட்டி அந்த பாத்திர அரணை விட்டு வெளியே வருவேனா, தரிசனம் தருவேனா என்றது. தாய் அருகில் இருக்கையில், வெளியே வந்தாலும், காலடி சத்தம் கேட்டதும் ஓட்டமாக ஓடி அதன் இடத்தில் பதுங்கியது..

(தாய் மீது தூங்கிக்கொண்டிருக்கும் குட்டி)

இப்படியே இரண்டு நாட்கள் கழிந்தது. இப்போது வேளா வேளைக்கு சாப்பாடு வந்து கேட்கும் அளவிற்கு தோழியாகி விட்டது தாய். பால் வைக்க வில்லை என்றால் மியாவ் மியாவ் என்று கத்தி கூப்பாடு போட்டு, மெதுவாக காலில் செல்லமாக உரசும் (அதற்கு மேல் சாப்பாடு வைக்காமல் இருக்க முடியாது). ஆனால் குட்டி இன்னமும் வெளியே வந்த பாடில்லை..

அடுத்த நாள்தான் அந்த 'திவ்விய' தரிசனம்.. தாய் பாதுகாப்பில் குட்டி, பாத்திர அரணை விட்டு வெளியே வந்தது.. கண் படாமல் இருக்கத்தான் வெளியே வராமல் இருந்திருக்கிறது குட்டி.. அத்தனை அழகு. அப்பப்பா அமைதியான குட்டி என்று நினைத்தது எங்கள் தவறுதான்.. வெளியே சமையலறைக்கு வந்த அது, தாய் அருகே இருக்கும் மிதப்பில், இங்கும் அங்கும் ஓடி, தாவி, குதித்து என்று என்ன ஒரு விளையாட்டு. ஏன் குட்டிகள் வளர்ந்து விடுகின்றன? அப்படியே இருக்கக்கூடாதா?

தாய் சோம்பலாக உட்கார்ந்து ஓரக்கண்ணால் இந்த சேட்டையை ஒரு நோட்டம். தாய் வாலை ஆட்டி, குட்டி அதை தவ்வி பிடிப்பது அவைகளுக்கு பிடித்தமான விளையாட்டு. இரையை பிடிக்க தாய் தரும் பயிற்சி அது என்பதை உணர வெகு நேரம் ஆகவில்லை. நாங்கள் அருகே தூக்கச்சென்றால் மட்டும் ஓடிப்போய் ஒளிந்து கொள்ளும் குட்டி. போக போக அதையும் ஒரு விளையாட்டாகவே செய்ய ஆரம்பித்தது.. கொஞ்ச நேரம் ஏதாவது பொருளை உருட்டி விளையாடும்.. சலிப்பு தட்ட ஆரம்பித்ததும் திடீரென்று நிறுத்தி விட்டு. எங்களை பார்த்து பயப்படுவது போல் ஓடிப்பதுங்கும் (நாங்கள் பாட்டுக்கு இருந்தாலும்).

அடுத்த நாள். வழக்கும் போல குட்டியை விட்டுவிட்டு இரை தேட வெளியே போன தாய்.. போனது போனதுதான்.. இரவை தாண்டியும் வரவில்லை. பாவமே உருவாக, வைக்கும் பாலையும் குடிக்காமல், அரணை விட்டு வராமல், சோகமாக தவம் இருந்தது குட்டி. தாய் மீது முதன்முதல் கோபம் வந்தது அப்போதுதான்..என்ன ஆனதோ? என்பதை விட எங்கு போய் தொலைந்த்தோ என்பதாகவே இருந்தது எண்ணம்.

அடுத்த நாள். காலை ஐந்து மணி அடித்ததும் கத்த தொடங்கி விட்டது பெரியது.. ஞாயிறு இப்படி எழுப்பி விடுகிறதே என்பதை விட, அது திரும்பி வந்த நிம்மதியில்.. கொஞ்சம் அதிகமாகவே பால் வைக்கப்பட்டது அன்று..

(தாயுடன் வலது ஓரத்தில், பவ்யமாக இருப்பது போல நடிக்கும் குட்டி)

இப்போது குட்டி எங்கள் படுக்கையறை வந்து விளையாட ஆரம்பித்து விட்டது.. அவ்வப்பொழுது பயந்து ஓடும் விளையாட்டும் இருக்கத்தான் செய்தது.. தாய் குட்டிக்கு தரும் பயிற்சிகளும்தான். குட்டி மிகவும் தடுமாறிய ஒரு பயிற்சி, ஜன்னல் மீது தாவி ஏறி, வெளியே செல்வதுதான். இது மட்டும் அதற்கு இயலாத ஒன்றாக, வயதுக்கு மீறியதாக இருந்தது.. அதற்கு படி போல் உதவ, ஒரு சிறு பெட்டி வைக்கப்பட்டது.. அதன் மீதே குட்டியால் ஏற முடியவில்லை.. தாயும் மிகுந்த பிரயத்தனப்பட்டு பார்க்கத்தான் செய்தது.. ஏன், கொஞ்ச காலம் விளையாடிக்கொண்டே இருக்கட்டுமே, இப்போது இதற்கு என்ன இவ்வளவு அவசரம் என்ற கேள்வியும் மனதில்..

அன்று இரவு என்ன ஆனதோ, ஜன்னல் மீது ஏற முடியாத குட்டியை அலேக்காக தூக்கிக்கொண்டு வெளியே சென்றது தாய்.. ஹ்ம்ம்ம் வெளியே ஏதோ பயிற்சி போல என்று நாங்களும் விட்டு விட்டோம்.. திடீர் என்று ஒரு சந்தேகம்.. உள் பக்கத்தில் பெட்டி உதவியுடன் சுலபமாக ஏறிய தாய், வெளி பக்கத்தில் இருந்து குட்டியை தூக்கிக்கொண்டு ஏற முடியுமா? இரண்டும் வரும் சுவடில்லை. கவலை அதிகமானது.. குட்டி  பாட்டுக்கு எந்த கவலையும் இல்லாமல் விளையாடிக்கொண்டு இருந்தது.. அதுக்கு கற்றுக்கொடுக்கிறேன் நன்மை செய்கிறேன் என்று, அதன் பால்யத்தை வெடுக்கென்று இவ்வளவு அவசரமாக பிடுங்க வேண்டியதன் அவசியம் என்ன?

அடுத்த நாள்.. நாங்கள் எழும்போது, தாய் கத்திக்கொண்டு இருந்தது.. அவசரமாக அவர்களின் இடத்தில் போய் தேடினால், குட்டியை காணவில்லை. கேள்வியுடன் நாங்கள் தாயை பார்த்தோம்.. இல்லை.. முறைத்தோம். அது பதிலுக்கு எங்களை வந்து உராசியது.. கத்தியது.. அதற்கு பின் அது செய்த செயல், சாகும் வரை மறக்காது..

'இதற்கு மேல் விளையாடாதீர்கள்.. மறைத்து வைத்திருக்கும் குட்டியை தந்து விடுங்கள்' என்று எங்களை கெஞ்சல் பார்வை பார்த்துக்கொண்டே, அறை அறையாக சென்று குட்டியை தேடியது.. தேடித்தேடி அலுத்து, கடைசியில் வெளியில் கிளம்பிவிட்டது.. எப்படியும் குட்டியை கண்டுபிடித்துக்கொண்டு வந்து விடும் என்ற நம்பிக்கையுடன் காத்திருந்தோம்..

இரண்டுமே கடைசி வரை திரும்பி வரவில்லை..
முழுதும் படிக்க..

Jun 4, 2010

பரிணாமம்

மூன்றாவது கையில் விசிறி போன்ற அமைப்புடன் முதலில் குழந்தைகள் பிறக்க ஆரம்பித்தது.,
தமிழகத்தில்..



குறிப்பு: இந்த 'கதை' புரியாதவர்கள் என்னுடைய முந்தைய பதிவான இந்த புலம்பலை படித்தால் புரியும்..
முழுதும் படிக்க..

Jun 2, 2010

பவர் கட்

எனக்கு வேற எதுவும் வருத்தம் இல்லை.. அது எப்படி நான் தூங்கும் நேரம் ஈ.பி (EB) ஆட்களுக்கு இவ்வளவு சரியாக தெரிகிறது? நான் தூங்கும் நேரத்தை மிகத்துல்லியமாக பாதியாக பிரித்து, அந்த புள்ளியில் மின்சாரம் நிறுத்தப்படுவதை சமீபத்தில் கண்டுபிடித்திருக்கிறேன். அது பகலாக இருந்தாலும் சரி.. உதாரணத்திற்கு, 10 PM - 4 AM தூங்குகிறேன் என்று வைத்து கொள்ளுங்கள் (அட சும்மா ஒரு பேச்சுக்கு). சரியாக 1 மணிக்கு மின்சாரம் நிறுத்தப்படும். மதியமாக இருந்தாலும் இதே டெக்னிக் தான்.

ஒரு நாள், இரு நாள் கதை அல்ல இது. அக்னி வெயில் (?) ஆரம்பித்ததில் இருந்து.. இப்படியே தொடர்ந்து.. அது எப்படி அய்யா சரியாக 1 மணிக்கு தினமும் நிறுத்துகிறீர்கள்? அலாரம் வைத்து எழுந்து, பவரை நிறுத்திவிட்டு, பாத்ரூம் போய் விட்டு திருப்பி தூங்கிவிடுவீர்களா?



இருக்கும் வெப்பத்தில்.. மின்சாரமும் மின்விசிறியும் டப் என்று நிற்கும் அந்த நொடியில்.. உலகமே இருண்டு.. முதலில் மென்மையாக ஆரம்பிக்கும் கசகசப்பு, நேரம் ஆக ஆக (ரொம்ப நேரமெல்லாம் இல்லை.. ஓரிரு நிமிடங்கள்) வெப்பம் வெப்பன் போல தாக்க.. வியர்வை சுரப்பிகள் திடும் என்று விழித்துக்கொண்டு கடும் வேலை செய்ய.. கையா முயா என்று சொரிந்து கொள்ள வேண்டும் என்று வரும் இச்சையை (சுய அரிப்பு) கஷ்டப்பட்டு கட்டுப்படுத்தி முடிப்பதற்குள் மண்டை மூஞ்சி எல்லாம் நனைந்து போயிருக்கும். அதற்கு மேல் படுக்க-தடுக்க முடியாது (ஒரு தடவை பாக்கலாம் ஒரு கை என்று முரண்டு பிடித்து படுத்து தான் பார்த்தேன்.. தலையணை நம்பர் 1 போனது போல நனைந்து வெயிலில் காய வைத்ததுதான் மிச்சம்)..

எழுந்து உட்கார்ந்ததும், அழுகை அழுகையாக வரும். இந்த நேரம் பார்த்து பக்கத்தில் நியூஸ் பேப்பர், புத்தகம் எதுவும் இருக்காது.. அடிச்சி பிடிச்சி தேடி, விசிறு விசிறென்று விசர் பிடித்தது போல விசிறி, துண்டை வைத்து முகத்தை (கண்ணீரையும்) துடைத்துக்கொண்டு உட்காரும் அந்த நேரத்தில்...

கேயின்ன்ன் வ்ர்ர்ரர்ர் சார்ர்ர்ரர்ர் என்று கொசுக்கள் 'பெண் சிங்கமாக' மாறி காதருகில் பறக்க, இதற்கு முன் இருந்த நிலைமையே மேல் என்று ஜென் தனமாக தத்துவம் உணர வைத்து, என்ன விரட்டினாலும் போகாமல் குடையும். இங்குதான் யாரையாவது பிடித்து அடிக்கலாமா என்று தோன்றும்.. பின்பு நம்மையே அடித்து கொள்ளலாம் என்று (கவுண்டமணி சாட்டை வைத்து அடித்து கொள்வது போல).. வியர்வை ஊத்துவதும் நின்ற பாடில்லை, கொசு பாடுவதும் நிற்கவில்லை. எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை, கடன் வாங்கியாவது நாளைக்கு இன்வர்டர் அல்லது ஜெனெரேட்டர் வாங்கி வைத்துவிட வேண்டும் என்று தோன்றுவது இப்போதுதான் (தினமும் இதே இடத்தில் தான் இந்த எண்ணம் வரும்)..

இந்த நேரத்தில், சுவாரஸ்யமான ஒரு விளையாட்டு விளையாடுவார் கரண்டுகாரர்.. 'கம்கு' என்று ஒரு செகண்ட் மின்சாரத்தை விட்டு நிறுத்துவார். அந்த ஒரு நொடிப்பொழுதில் நம் கண்ணில் வந்து மறையும் நம்பிக்கை - கடைசி பந்தில் சிக்சர் அடித்து ஜெயிக்க வேண்டிய கட்டத்தில், பந்து உயர உயர பறந்து.. கடைசியில் காட்ச் ஆவதற்கு சமம்.. அல்லது அதனினும் கொடூரம்..


எல்லா உணர்ச்சிகளும் ஓய்ந்து கிடக்கும் போது, கடவுளுக்கு என் மேல் இரக்கமே
 இல்லையா என்று சரணாகதி அடைந்து கடைசியாக ஒரு ட்ரை.. அதற்கும் எந்த அசைவும் இருக்காது. செத்த பிணம் (?) போல உட்கார்ந்திருக்கும் நேரத்தில் (கொசுவின் சங்கீதம் கூட பழக ஆரம்பிக்கும் வேளை), பொழச்சு போங்க என்று விடப்படும் மின்சாரம்.. மகிழ்ச்சியடையக்கூட தெம்பில்லாமல் தூங்கி விடுகிறேன்..

*****

தமிழ்நாட்டு வெளியூர்கார நண்பன் ஒருவன் வடிவேலு பாணியில் சொல்கிறான்.,

'போங்க தம்பி.. என்னமோ ரெண்டு மணி நேரம் கரண்ட் போறதுக்கு பெருசா பீத்தறீங்க.. அங்கல்லாம் ரெண்டு நாள் ஆனாலும் கரண்டு வராது.. எங்கிட்ட இருந்து துளி சத்தம் வராது, எங்கயும் ஓடுனதும் கிடையாது..' என்று சொல்லி விட்டு, எங்கோ பார்த்து கை அசைத்து,

'ஹலோ, நேத்து கரண்டு வரும்னு சொன்னீங்க வரவே இல்ல?' என்ற படியே நகர்கிறான்..

******

டிஸ்கி: மூன்று நாட்கள் வெளியூர் போக வேண்டி இருந்தது.. போய் விட்டு திரும்பியதும் அம்மா சொன்னது 'டேய், இந்த மூணு நாளும் கரண்டு போகவே இல்ல'



- பிரசன்னா (கொத்து பரோட்டா)
முழுதும் படிக்க..

May 27, 2010

பதினைந்தாவது ரொபாட்

அதி ரகசியமான அந்த ப்ராஜக்ட் வெர்ல்ட் ரூல் (Project World Rule) பற்றி  தெரிந்தவர்கள் மொத்தம் எட்டு பேர் தான். அமெரிக்க அதிபருக்கு கூடத்தெரியாது. இந்த ப்ரொக்ராமின் அ,ஆ வான மார்க் மற்றும் டாம் அன்று இறுதி கட்ட செக்கப்கள் முற்றிலும் முடிந்த மகிழ்ச்சியில் இருந்தார்கள். படபடப்புடந்தான்.

"இது எந்த அளவு வெற்றி பெரும் என்று நினைக்கிறாய் டாம்?", கேட்டவர் மார்க்.
"முழு வெற்றி தான். கூடிய சீக்கிரம் இந்த உலகமே நம் சொல் படி ஆட போகிறது!" உணர்ச்சிவசப்பட்டார் டாம்.

செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) மூலம் உருவாக்கப்பட்ட 15 ரொபாட்களும், பதினைந்து முக்கிய நாடுகளில் விடப்படும். ஐந்து வருடங்கள் கழித்து, அந்தந்த நாடுகளின் சக்தி வாய்ந்த பதவிகளில் இருந்து கொண்டு, அந்த நாட்டையே ஆட்டி படைக்கக் கூடியவர்களில் ஒருவராக ஆக வேண்டும் (ஆகும்).. இதுவே அந்த பதினைந்து 'பேரின்' உள்ளே ஏற்றி வைக்கப்பட்டிருக்கும் ப்ரொக்ராமின் சாராம்சம்.

"ஐந்து வருடங்களில் இவை அத்தகைய உயர்வை எட்ட வாய்ப்பு இருக்கு என்றா நினைக்கிறாய்?", இம்முறை சந்தேகத்துடன் டாம்.


"மனிதனின் சுய சிந்தனையும், மிஷினின் உண்டு - இல்லை என்கிற துல்லியமும் ஒரு சேர வாய்ந்தவை இவை. இந்த கூட்டின் சக்தி அளவிட முடியாதது டாம். அதுவும் இவைகளை செயற்கை என்று யாராலும் சொல்ல முடியுமா? இதோ 'இதுக்கு' இருக்கும் மீசையைப்பார்" ஆஸ்திரேலியாவிற்கு செல்ல இருக்கும் ரொபாட்டின் மீசையை த்டவிக்கொண்டே மார்க்.. டாமிற்கு இது எல்லாம் தெரிந்தாலும் கடைசி நேர படபடப்பை அடக்க யாரால் முடிகிறது?

ஒரு வழியாக எல்லாம் முடிந்தது. அந்தந்த நாடுகளில் கொண்டு போய் விடப்பட்டனர் அந்த பதினைந்து பேரும், அந்தந்த நாடுகளின் குடிமகன்களாக.

....

முதல் முறை பார்த்ததை விட, 5 வருடங்களில் கொஞ்சம் குண்டாகி விட்டிருந்தனர் மார்க்கும் டாமும்.. அவர்களின் கண்டுபிடிப்புகள் எந்த பதவியில் இருந்து, உலக நாடுகளை எப்படி ஆண்டு கொண்டு இருக்கிறது என்று ஆய்வு செய்து, அடுத்த கட்டத்திற்கு தயாராக 'உலகச் சுற்றுப்பயணம்' கிளம்பினர் இருவரும்.

"அவைகளின் நியூரல் நெட்வொர்க்கும் மனித மூலையை ஒத்து இருப்பதால், எல்லாம் ஒரே அளவு அறிவுடன் இருக்கும் என்று சொல்ல முடியாது. இந்த பதினைந்தில் எது மிக அறிவானது, எது சக்தி வாய்ந்தது என்பதயும் பார்க்க வேண்டும்" பிளைட்டில் பாதி தூக்கத்தில் முனகிக்கொண்டார் டாம்.

முதலில் அவர்கள் இறங்கிய இடம் அவர்களின் தலை நகரான வாஷிங்டன். இவர்களின் 'அது' அந்த நாட்டின் தலைமை பாதுகாப்பு ஆலோசகராக இருந்தது.

"ஆகா. என்ன சக்தி வாய்ந்த பதவி? நாம் நினைத்ததை விட நம் ப்ராஜக்ட் பெரும் வெற்றி தான்" என்று ஆனந்த் குக்கூரலிட்டார் மார்க்.

அடுத்து ஐரோப்பா, சீனா, ஆஸ்திரேலியா என்று பயணப்பட்டனர். ஒவ்வொரு நாட்டிலும் பாதுகாப்பு அமைச்சர், பிரதமர், ராணுவ தளபதி (பாகிஸ்தான்) என்று விதவிதமான, சக்தி வாய்ந்த பதவிகளில் இருந்தார்கள் இவர்களின் கண்டுபிடிப்புகள்.

எல்லா நாட்டையும் முடித்துக் கொண்டு, கடைசியாக இந்தியா வந்து, அந்த பதினைந்தாவது ரொபாட் வீட்டின் முன் இறங்கியதுமே... இருவரும் சிறிது அதிர்ச்சி அடைந்தார்கள் என்று தான் சொல்ல வேண்டும். பின்னே மத்த 14 நாடுகளில் பார்க்காத காட்சியை அல்லவா இங்கு கண்டனர்? அந்த 'வீட்டு அரண்மனையின்' வெளியே ஒரே மக்கள் கூட்டம். எக்கச்சக்க கார்கள். அதில் பாதிக்கும் மேற்பட்டவை 'நானும் விஐபி தான்' என்று சொல்லிக்கொள்ளும் சிகப்பு விளக்கு பொருத்த பட்டவை.


"அதோ, அங்கு நிற்பவர் இவர்களின் பிரதமர் போல் அல்லவா இருக்கிறார்? அவரே வெளியில் காத்து கொண்டு இருக்கிறாரே? 'இவர்தான்' பதினைந்து பேரில் மிகுந்த சக்தி வாய்ந்தவராக இருக்க வேண்டும்.. எவ்வளவு கூட்டம்? " வாயை பிளந்தார் டாம்.

"ஆம். உண்மைதான். ஆனால், பிரதமரை விட உயர்ந்தவராக இருந்தாலும், இவர் எந்த பதவியில் இருக்கிறார் என்று தெரியவில்லையே?" என்றபடியே அங்கு இருந்த 'காரிய தரிசி'யிடம் உள்ளே சொல்லி அனுப்பினார் மார்க்.

அவர்கள் உடனே உள்ளே விடப்பட்டு, 'அவர்' எதிரில் நிற்க வைக்கப்பட்டனர்.

தன் ஒளி பொருந்திய கண்களை திறந்து, இவர்களை நோக்கி புன்முறுவல் பூத்தார் ஸ்ரீ ஸ்ரீ ரூபானந்த ஸ்வாமிகள்..


                                                                ************





டிஸ்கி: இது நான் ஏற்கனவே எழுதி வெளியிட்ட கதை தான். என்னடா இவன், எழுதியதே 25 பதிவுகள் தான் இருக்கும். அதற்குள் மீள் பதிவா என்று பெரியவர்கள் கோபித்துக்கொள்ளாமல், ஆதரவை 'அள்ளி' வழங்குமாறு கேட்டு கொள்கிறேன் ;)
முழுதும் படிக்க..

May 22, 2010

பாசக்கார பதிவர்களுக்கு பாராட்டு விழா..

மின்மினி.com என்ற வலைத்தள திரட்டி இருப்பதை கேள்வி பட்டு இருப்பீர்கள். இதைப்பற்றி சுருக்கமாக இங்கே படிக்கலாம். இதில் என்ன விஷயம் என்றால், முதல் 101 பதிவர்களை இலவசமாக இணைக்கிறார்கள். அதில் சில பிரபல பதிவர்களை அவர்களே தேர்ந்தெடுத்து இணைத்துக் கொள்கிறார்கள். அந்த வகையில் அண்ணன் (நாந்தான்) இரண்டாம் வரிசையில் முதலில் இடம் பெற்றுள்ளேன்..

இதை பற்றி ஒரு துணுக்கு இந்த பதிவின் கடைசியில்...

                                                                ****************

முதல்முறையாக நமக்கு (வைர) விருது அளித்து அண்ணன் சைவகொத்துப்பரோட்டா பெருமை படுத்தி உள்ளார். அதுவும் சிறப்பாக எழுதுபவர்கள் என்று நம்மால் கருதப்படுவர்களுக்கு கொடுக்கலாம்.. அப்புறம் எப்படி எனக்கு கிடைத்தது என்று யோசித்து கொண்டு இருக்காமல், இதோ அந்த விருதை இவர்களுக்கு அளிப்பதில் நான் மேலும் பெருமைப்பட்டு கொள்கிறேன் -

ஜெய்
Illuminati
ஜெயந்தி
மகேஷ் : ரசிகன்
தக்குடுபாண்டி
பட்டாபட்டி
ருத்ர வீணை
prabhakaran


                                                                ****************

என்னது, இவன் பிரபல பதிவரா, இவனை எதற்கு 'மின்மினியில்' போட்டார்கள், ஏன், எப்படி என்று எல்லாம் பொங்க கூடாது.. நானே மெயில் அனுப்பி 'யப்பா என்னையும் சேர்த்துகோங்க' என்று கேட்டவுடன் இணைத்து விட்டார்கள் (ஹீ ஹீ). 101 பேருக்கு தான் இலவசம் என்பதால், முந்திக்கொள்ளுங்கள்..
முழுதும் படிக்க..

May 7, 2010

பிடித்த பத்தும்., ராவணன் பாடல்களும்..

பிடித்த பத்தை எழுதுவது எவ்வளவு கஷ்டம் என்று இப்போது தான் தெரிகிறது.. பிடித்த படம், அதற்கு கீழே ஏன் என்று..

************

சபாஷ் மீனா
நகைச்சுவை, சிவாஜி (இயல்பான நடிப்பு), சந்திரபாபு

நாயகன்
மணி, கமல்

முள்ளும் மலரும்..
ரஜினி,ரஜினி,ரஜினி

அன்பே சிவம்
செவத்த அன்பு :)

பேசும் படம்
புதுமை

தில்லு முள்ளு
'வெண்கல கடையில் யானை புகுந்தது போல' படம்..

மௌன ராகம்
மென்மை, பெண்மை, பிளாஷ்பேக்

பம்பாய்
இரண்டாம் பகுதி (எதுக்குடாப்பா இதெல்லாம் என்று தோன்ற வைப்பதால்)

காக்க காக்க
ஸ்டைல், ஹீரோயிசம் (வித்அவுட் பன்ச் டைலாக்ஸ்)

16 வயதினிலே..
பேரை கேட்டாலே.. மழை வரும் போல இருக்குமே, அந்த வாசனை.

விட்ட படங்கள் என்னை மன்னிக்குமாக.. இதை எழுத அழைத்த ஜில்தண்ணி அவர்களுக்கு நன்றி..


************

இரண்டு நாட்கள் முன்னாடி இப்படி இல்லை - ராவணன் பாடல்கள் அனைத்தும் மிகவும் பிடிக்கிறது இன்று.. அதனால், எதுவாக இருந்தாலும் 'ஒரு' இரண்டு நாட்கள் கேட்டு விட்டு முடிவுக்கு வரவும். முடிந்தால் ஹெட் போனில் கேட்கவும் (எவ்வளவு வித்தியாசம்?).
சிறந்த இசையில், ஒரு மெல்லிய சோகம் நிச்சயம் இருக்கும் என்ற என் எண்ணத்தை இதிலும் சில பாடல்கள் உறுதி படுத்துகின்றன..
 
'காட்டு சிருக்கி'யில் பாடல் கூடவே வரும் அந்த வாத்தியங்களின் இசை.. வார்த்தைகளுடன் அதன் சங்கமம்.. அற்புதம்..
 
'கள்வரே' பாடலின் மென்மை, அப்படியே வருடி சொக்க வைக்கிறது (படுத்து கேட்டால் தூங்கி விடலாம்).
 
'கெடாக்கறி' கல்யாண பாடல் ஜாலியாக செல்கிறது, 'யாரோ யாரோடி' மாதிரி.
 
'வீரா' - 'என் யுத்தம் நீ செஞ்சா, நீ ராமன் தான்.. ராவணன் தான்' என்று சொல்வது, 'செ'யின் quote போல இருக்கிறது.. இடையில் வரும் 'குடியே மிஸ்தி...' என்பது போல ஏதோ ஒன்றை பாடும் குரலும் அதை தொடரும் இசையும் (ட்ரைலரில் வரும்).. கேட்டு பாருங்கள்..
 
'உசிரே போகுதே' ஆணின் தாபத்தை அருமையாக சொல்கிறது.. மிக மெதுவாக, உச்ச குரலில், வேகமாக என்று அவன் மன நிலை போலவே நகரும் பாடல்.. இது தான் பெஸ்ட் என்று சொல்ல முடியாது.. இந்த படத்தில் எல்லாமே எனக்கு பெஸ்ட் தான் (ஒரு வேளை, குருட்டு மணி/ரஹ்மான் வழிபாடு செய்கிறேனா? அதெல்லாம் தெரியாதுபா)..
 
'கோடு போட்டா' மிக முக்கியமான பாடலாக தெரிகிறது.. பென்னியின் இனிமையான குரலை விட கொஞ்சம் கரடு முரடான குரலாக இருந்தால் இன்னும் ஆக்ரோஷத்தை எடுத்து காட்டி இருக்கும்.. முதல் சரணத்திற்கு பிறகு வரும் அந்த பீஸ் (பீப்பி மாதிரி).. டாப் கிளாஸ்.. சில வரிகள் (கீழே கொஞ்சம்) எதிர்பார்ப்பை எக்கச்சக்கச்சக்கமாக கிளறி விட்டு விட்டது..
 
'வில்லை போல வளைந்த கூட்டம்,
வேல போல நிமிர்ந்து விட்டோம்'
 
'வேலி போட்டா, வெட்டி போடு'
 
'பாட்டன் பூட்டன் பூமிய யாரும்
பட்டா போட கூடாது'
முழுதும் படிக்க..

May 3, 2010

உலகின் கடைசி மனிதன்

கண் முழித்து பார்த்தால், வீடு கரகர என்று அமைதியாக இருந்தது (மின்விசிறி மட்டும்). முகம் கழுவலாம் என்று போனால், குழாயில் தண்ணி வரவில்லை. என்ன, யாரும் மோட்டர் போடவில்லையா? போய் போட்டு விட்டு வந்தான். பின்னால் போகும்போது தான் கவனித்தான். பக்கத்து வீடும் அமைதியாக இருந்தது. அதற்கு வாய்ப்பு இல்லாததால், சற்று குழம்பி, இவர்களுடன் சேர்ந்து வீட்டில் இருப்பவர்கள் வெளியில் சென்று விட்டார்களா? அப்படியே வெளியில் வந்து பார்த்தால்...

வீதி அம்போ என்று தனியாக இருந்தது. கொஞ்சம் வண்டிகள் நடு நடுவில் நிறுத்தப்பட்டு இருந்தன. ஒரு வேளை, விபத்து ஏதாவது நடந்து, தெருக்காரர்கள் எல்லாம் ஆஸ்பத்திரி போயிருக்கிறார்களா?

வண்டிகளை பார்த்தான். விபத்து நடந்த மாதிரி தெரியவில்லை. அப்படியே சுற்றிலும் உள்ள வீடுகள், கடைகள்.. எல்லாமே கூட்டு களவாணிகள் போல் கம் என்று இருந்தன. பக்கத்து தெரு, அடுத்தவர்கள் வீடு என்று நுழைந்து துழாவினான். ஒரு நாய் கூட இல்லை (நாயைத்தான்). மொபைலை எடுத்து ஒவ்வொரு நம்பராக முயற்சித்து, யாரும் எடுக்காமல் போகவே, நிறுத்திவிட்டு, வீட்டிற்கு திரும்பி வண்டியை எடுத்துக்கொண்டு கிளம்பினான். பிரதான சாலை முதல் முறையாக யாரும் கண்டு கொள்ளப்படாமல் அமைதியாக, வண்டிகள் அங்கங்கு சிதறி இருந்தது. நெஞ்சம் திடும் திடும் என்றது.

வட இந்தியாவில் இவனுக்கு தெரிந்த ஒரே நண்பனுக்கு கால் பண்ண, 'தி நம்பர் யு டயல்ட்..' என்று சொன்ன குரல் பயமுறுத்தியது. கொஞ்ச தூரம் போய் பார்த்து விட்டு திரும்பி வீட்டிற்கு வந்து, அவசரமாக டிவியை போட்டான். பாதி சேனல்கள் கறுப்பு வெள்ளை ரவைகளை காட்டியது. வந்த ஒரு சேனலில் (பொதிகை) யாரோ சொரியாசிஸ் பற்றி பேசிக்கொண்டு இருந்தார்கள்.

பயம் வர ஆரம்பித்தது. முன்னாடியே ஆரம்பித்து விட்டது. இப்போது கொஞ்சம் அதிகமாக, நிச்சயமாக.. ஆங்கில படங்களில் பார்த்தது போல் எல்லாரும் இல்லாமல் ஆகி, நான் தான் கடைசி மனிதனா? அப்படியும் நடக்குமா? கொஞ்சம் யோசித்தான். வந்து மோடத்தை ஆன் செய்து (ஆன் ஆனது) கம்ப்யூட்டரை இயக்கினான். ஒன்றும் தெரியவில்லை. நேற்றைய சம்பவங்களே (வரைக்கும்தான்) இருந்தன.

யாருமே இல்லையா..? அப்பா, அம்மா, பாட்டி, சுப்பு, ஜென்சி எல்லாம் போய் விட்டார்களா? சிறிது நேரம் அப்படியே உட்கார்ந்தான். எத்தனை மணி நேரம் ஓடி இருக்கும் தெரியவில்லை.
இப்படி உட்கார்ந்து இருந்தால் சரிப்படாது.. சட்டென்று எழுந்து, தேவைகளை யோசித்தான். முதலில் சாப்பாடு. கடையில் இருக்கும் பொருட்கள், 3 அல்லது 4 மாதங்களுக்கு தாங்குமா? மின்சாரம்.. கண்டிப்பாக வேண்டும். இன்னும் வந்து கொண்டு இருக்கிறது, எப்போது நிற்கும் என்று தெரியாது.. இணையத்தில், ஜெனரேட்டர்களை இயக்குவது எப்படி என்று தேடி, சேமித்து வைத்துக்கொண்டான். ஏதோ பொறி தட்ட, காப்பி போடுவது எப்படி, சோறு வைப்பது எப்படி என்று ஆரம்பித்து பல தரப்பட்ட விஷயங்களை சேமித்து வைத்தான். தனக்கு எத்தனை அன்றாடம் தேவைப்படும் விஷயங்கள் தெரியவில்லை என்பது குறித்து வெட்கப்பட்டான்.

ஏதோ ஒரு நம்பிக்கையில் வெளியே வந்து, தெருவில் சாவியுடன் டக்கென்று நின்று போயிருந்த பைக்கை எடுத்துக்கிளப்பினான். திரும்பவும் தெருத்தெருவாக சுற்றினான். உயிரினங்கள் எதுவும் தட்டுப்படவில்லை.. செடி கொடிகள் மட்டும் இருக்கின்றதே..?

தான் விரும்பிய தனிமை, அபிரிமிதமாகவே கிடைத்துவிட்டது என்று திடீரென்று சந்தோஷப்பட்டான். அது அவனுக்கே ஆச்சர்யத்தை அளித்தது. பயம் வேண்டுமானால் நிரம்ப இருக்கிறது.. எது ஆனாலும், தனிமையில் பைத்தியமாக மட்டும் ஆகக்கூடாது என்று நினைத்துக்கொண்டு திரும்ப வீடு சேர்ந்தான்.. பகலில் பரபரப்பாக ஓடிய பொழுது, இரவில் மெது.......வாக நடந்தது.. தூக்கம் வரவில்லை. ஒவ்வொரு நிமிடமும் பீதியுடன் கழிந்தது..

மறு நாள் காலை, இன்னும் இருந்தான்.. ஒரு முடிவுடன், கடைகளுக்கு போய் புத்தகங்களை சேமிததான். படங்களை, இசை சிடிக்களை  சேகரித்தான். கொஞ்சம் பெரிய பக்கத்து வீட்டை தனது இருப்பிடமாக மாற்றி, ஜெனரேட்டர் இணைத்து சரிபார்த்துக்கொண்டான்.. மனிதர்கள் இருக்கும் போதே வராத மின்சாரம் இன்னும் வந்து கொண்டு இருந்தது.. அறையை விட்டு வெளியே வராமல், பல வருடங்களாக புத்தகங்களை மட்டுமே படித்து வாழ்ந்தவர்களை பற்றி படித்திருப்பதை நினைவு படுத்தி, அப்படி நினைத்துக்கொண்டு போகிறது என்ற முடிவுக்கு வந்தான்.

அந்த பக்கத்து வீட்டு சோபாவில் சாய்ந்து கொண்டு, கண்கள் மூடி அமர்ந்தான். நிலைமையை சமாளிக்க கூட ஒரே ஒரு பெண் இருந்தால்? அது பேராசை.., ஒரு ஆண்? அட்லீஸ்ட், I am legend போல ஒரு நாய்..? ஆனால், எல்லாம் முடிந்து விட்டது என்று இன்னும் நம்ப முடியவில்லை. இப்படியா முடிய வேண்டும்? சுவடே இல்லாமல்..

ஏதோ ஒரு படத்தை போட்டு, மனிதர்களை பார்த்ததும் எச்சிலை முழுங்கி முழுங்கி, டிவியை நிறுத்தி விட்டான். உலகிலேயே தான் ஒரு ஆள் தான் பாக்கி என்ற பிரம்மாண்டத்தை அவனால் கிரகிக்க முடியவில்லை.

அறையை விட்டு வெளியே வராமல் பல வருடங்கள் இருந்தவர்களை திரும்பவும் நினைத்தான். அவர்களுக்கு வெளியில் ஆள் நடமாட்டம் இருப்பது தெரிந்து அல்லவா இருந்தார்கள்? இந்த அண்டத்திலேயே யாரும் இல்லை என்பது தெரிந்து எப்படி நிம்மதியுடன் இருக்க முடியும்? ராபின்சன் க்ரூசோவுக்கும், சக் நோலண்டிற்கும் மனிதர்கள் எங்கோ இருக்கிறார்கள் என்ற அந்த ஒற்றை நம்பிக்கையாவது இருந்ததே? தனக்கு?

ஏன்? ஒரு மனிதன் தனக்கே உரிய இலக்குடன், தனியாக இருக்க முடியாதா? ஒரு வேளை இலக்குகளையே, அடுத்தவர்களுக்காகத்தான் வைத்துக் கொள்கிறோமா? 'பார், நான் இலக்கை அடைந்து விட்டேன். முன்னேறி விட்டேன். ஜெயித்து விட்டேன்' என்பதெல்லாம் அடுத்தவர்களுக்கு சொல்ல மட்டும் தானா? தன்னுடைய சுய மகிழ்வுக்கு இல்லையா? அடுத்தவர்கள் பார்த்தால் தானே அந்த மகிழ்ச்சிக்கு ஒரு அர்த்தம் இருக்கிறது?

மண்டை குழம்பியது.. எதிலும் முழுதாக மனதை செலுத்த முடியவில்லை. ரஹ்மானின் உற்சாக பாடல்கள் கூட அழுகையை வரவழைத்தது.. கொஞ்சம் ரொட்டியை கொறித்துவிட்டு, கதவுகளை அடைத்துவிட்டு படுத்தான். அசந்து தூங்கிபோனான். கனவுகளும் அன்று அவனை புறக்கணித்தன..

மூன்றாம் காலை சிறிது புத்துணர்ச்சியாக, தெளிவாக யோசிக்க முடிந்தது. 'ஒரு' காரை எடுத்துக்கொண்டு, தனக்கு தேவையான பொருட்கள் என்று எது எல்லாம் தோன்றுகிறதோ, அதை எல்லாம் சேமித்தான். கூட ஒருத்தராவது இருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று திரும்ப திரும்ப நினைத்துக் கொண்டான்.

********

ஓடியே விட்டது 2 வருடங்கள்.. இப்போது எல்லாம் 'யாராவது இருக்கிறார்களா' பற்றி அதிகம் சிந்திப்பது இல்லை. ஆனால் அடிக்கடி காரணம் இல்லாமல் அழுவது உண்டு. இப்போது தேர்ந்த விவசாயியாகவும் ஆகியவன், அன்றைய அறுவடையை முடித்துக்கொண்டு தனது இருப்பிடத்திற்கு திரும்பினான்.

பிடித்த புத்தகங்களை எல்லாம் வேகமாக முடித்து விடுகிறான். எங்கே எல்லா புத்தகங்களும் முடிந்து விடுமோ என்று வேகத்தை குறைத்துக்கொண்டு படித்தான். நிச்சயமாக வேறு யாரும் கிடையாது என்று தெரிந்து இருந்தது. பாதுகாப்பிற்கு காவல் நிலையத்தில் எடுத்த துப்பாக்கிகளை வைத்திருக்கிறான் ஆனாலும் என்ன என் இலக்கு? யாருக்காக இவை எல்லாம்? என்று ஒரு வெறுமை எப்போதும். அவனுடைய இருப்பிடத்தை ஒரு கிலோ மீட்டர் சுற்றளவிற்கு வளர்த்து, ஒரு ராஜாங்கமே நடத்திக்கொண்டு இருந்தான். இந்த விஷயத்தில் கர்வம் தான்.

********

கடைசியாக அழுதது எப்போது என்று நினைவில்லை. எதிர் பார்த்ததை விட வேகமாக 5 வருடங்கள் ஓடி விட்டது. தனக்கு என்று ஒரு சுழற்சியை உருவாக்கி கொண்டு அவன் பாட்டுக்கு இருந்தான். புத்தகங்களாலா தெரிய வில்லை, ஒரு ஞானி போல் தேஜஸ் அவன் முகத்தில்.
ஆனால், கொஞ்ச நாட்களாக, ஆரம்ப காலத்தில் இருந்த அந்த காரணம் புரியாத பயம் திருப்பி வர ஆரம்பித்தது. என்ன காரணம் என்று ஊகிக்க முடியவில்லை. கொஞ்சம் தீவிரமாக ரோந்து வர ஆரம்பித்தான்.

*********

வழக்கம் போல் சுற்றி வந்து கொண்டிருக்க.. திடீரென ஒரு நாள், சிலிர்க்க வைத்த அந்த காட்சி. இரண்டு கால்களில்.. ஒரு உருவம். வந்து கொண்டிருந்தது. திகைத்து போய், துப்பாக்கியை எடுத்து தயார்படுத்தினான். மனித உருவம் தான். ஒரு பெண். மிகவும் சோர்ந்து போய்.. நெடு நாட்கள் சாப்பிடாமல் இருப்பதை போல். முதல் முறையாக, ஒரு அசையும் உயிரை பார்க்கிறான்.

பலம் எல்லாம் இழந்து போய் எங்கே மூர்ச்சையாகி விடுவோமோ என்று பயந்தான். இல்லை கூடாது.. அவளை நோக்கி கை அசைத்தான். அவள் தட்டு தடுமாறி.. இவன் அருகில் வந்தாள்.

'பசிக்குது.. சாப்பிட எதாச்சும் இருக்கா? '

அமைதியாக பையில் இருந்த சோளத்தை எடுத்து கொடுத்தான். சாப்பிட்டு விட்டு தண்ணி குடித்தாள்.

'எங்க இருந்து வர?'

'ரொம்ப தூரத்துலேர்ந்து..'

'நீ மட்டும் தானா?'

'இல்ல.. ஒரு நூறு பேர் கிட்ட இருக்காங்க.. எல்லாம் பின்னாடி வராங்க'

முகம் இருண்டது. இல்லை.. இல்லை. இப்படி நடக்க முடியாது. முடியவே முடியாது. இப்படியும் இருக்குமா? இது என் இடம்..

'மரியாதையா வேறு எங்கயாச்சும் போயிடுங்க' என்று கண்ணில் நீர் மறைக்க கத்தி விட்டு.. தன் இடத்திற்கு போய் தாழிட்டுக்கொண்டான்.

ஜன்னல் வழியே, தெருவை நோக்கி தயாராக இருந்தது.. ஒரு துப்பாக்கி..!


முழுதும் படிக்க..

May 1, 2010

ஔவையார் விண்வெளி ஆராய்ச்சியாளரா?

'அண்ணே, ஔவையார் பெரிய விண்வெளி ஆராய்ச்சியாளர்னு கண்டு பிடிச்சிருக்கேன்' என்றபடியே ஓடி வந்தான் மானஸ்தன்.

இவனை பற்றி நன்றாக தெரிந்தவர் ஆதலால், மணி பெரிதாக அலட்டிக்கொள்ளாமல், 'என்னடா சொல்ற' என்றார்.

 'ஔவையார் பெரிய விண்வெளி ஆராய்ச்சியாளர்னு கண்டு பிடிச்சிருக்கேன்' என்று மறுபடியும் அதையே சொன்னான்.

'டேய் டகால்டி மண்டையா.. எத வச்சி சொல்றனு கேக்கறேன்?'

'அண்ணே.. இங்க்லீஷ்காரனே கண்டு புடிச்சு சொல்லி இருக்கான். ஆனா நம்ப ஆளுங்க அத கண்டுக்காம உட்டுட்டாங்க..'

'டேய் பில்ட் அப் குடுக்காம மேட்டர சொல்லு' என்றார் மணி.

சிறிது நேரம் தீவிர யோசனைக்கு பிறகு..

இந்த கவிதை வரிய பாருங்கண்ணே..
'டிவிங்கிள் டிவிங்கிள் லிட்டில் ஸ்டார்..
ஔவை வொண்டர் வாட் யூ ஆர்..'

'பாருங்க அந்த இங்க்லீஷ் கவிஞன் நம்ப பாட்டி ஏதோ ஒரு நட்சத்திரத்த பத்தி ஆராய்ச்சி பண்ணினத எவ்வளோ அழகா சொல்றான்.. அனேகமா இவன் எந்த நூற்றாண்டோ இந்தியாவுக்கு வருகை செஞ்சு இருக்கான்.. அதை கண்டு புடிச்சு...'
என்று மானஸ்தன் ஆதாரங்களை அடுக்கிக்கொண்டே போக.., மணி உருட்டுக்கட்டையை தேடிக்கொண்டு இருந்தார்.
.
.
.


ஔவையார் அந்த நட்சத்திரத்த ஆராய்ச்சி செய்த போது எடுத்த படம்


 
*******

டிஸ்கி: இன்னும் கொஞ்ச நாள்ல இலக்கியவாதி ஆன பிறகு, இப்படி மொக்கைகளை போட முடியாது ஆகையால்.. இப்போதே போட்டுக்கொள்கிறேன்..
முழுதும் படிக்க..